இந்தியாவின் பாலைவனங்கள் என்று பேசும் போது ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள தார் பாலைவனம் மட்டுமே நம் நினைவுக்கு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிலும் ஒரு சிறு செந்நிற பாலைவனம் உள்ளது என்கிறார்கள் வல்லுநர்கள். ஆம்! தமிழ்நாட்டில் காணப்படும் 'தேரிக்காடு' என்ற சிறிய பாலைவனம் நம்மில் பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிவப்பு மணல் திட்டுகளால் ஆன இந்த பாலைவனம் திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தை நீங்கள் பல தமிழ் திரைப்படங்களில் கண்டு இருப்பீர்கள்!
தேரிக்காடு எங்கே உள்ளது?
தமிழ்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பரவி இருக்கிறது இந்த தேரிக்காடு. நாலுமாவடி, புதுக்குடி, சோனகன்விளை, காயாமொழி, பரமன்குறிச்சி ஆகிய ஊர்கள்களுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த தேரிக்காடு சிவப்பு மணல் குன்றுகள் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை என்று கூறப்படுகிறது. தேரிக்காடு சாகுபடி சாத்தியமில்லை என்றாலும், பனை மரங்கள், முந்திரி மரங்கள் பரவலாக உள்ளன.

தேரிக்காடு உருவானது எப்படி?
மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடல் பின்னடைவைத் தொடர்ந்து கடற்கரை மணலின் உள்ளூர் வரம்பினால் இந்த தேரிக்காடு உருவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கே வீசும் பலத்த காற்றின் விளைவாக மணல் தானியங்கள் நகர்ந்து குன்றுகள் குவிந்தன. தென்மேற்குப் பருவக்காற்றுகள், மகேந்திரகிரி மலைக்குப் பின்னால் உள்ள ஈரப்பதத்தையும், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆரல்வாய்மொழி இடைவெளியும் வடிந்த பிறகு சுமார் 12,000 ஏக்கர் அல்லது 50 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேரிக்காடு உருவானதாம்.
ஐவகை நிலம் கொண்ட திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தின் நிலப்பரப்பு அதன் இயற்கை வளங்களைப் புகழ்ந்து சங்க இலக்கியங்களில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், பாளை மற்றும் நெய்தல் ஆகிய ஐந்து நில வகைகளையும் (திணை) இம்மாவட்டத்தின் குறுக்கே மேற்கிலிருந்து கிழக்கே பயணிப்பவர்களால் பார்க்க முடியும் என்பது இம்மாவட்டத்தின் தனிச்சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

பாலைவனத்தையும் சோலையாக்கும் தமிழர்கள்
மழைக்குப் பிறகு உருவாகும் நீர் பாக்கெட்டுகள் தற்காலிக ஏரிகளாகவும் குளங்களாகவும் மாறுகின்றன. இந்த பகுதிகள் இந்த நீர் அம்சங்களைச் சுற்றி விவசாய நிலங்களை உருவாக்குகின்றன. அவை உள்ளூர் மக்களால் தருவை காடு என்று அழைக்கப்படுகின்றன. இந்த இடங்களில் தற்போது கிராம மக்கள் முருங்கை போன்ற செடிகளை வளர்த்து வருகின்றனர்.
உள்ளே சென்றால் திரும்ப முடியாதாம்
நீங்கள் தேரிக்காடு உள்ளே போய் எங்கு நின்றாலும் ஒரே இடம் போல தோன்றும், அதுவும் குறிப்பாக ஆடி மாதம் அல்லது நன்கு காற்று வீசும் நேரத்தில் நீங்கள் இங்கு சென்றால் நிச்சயம் நீங்கள் வந்த பாதையை மறந்து விடுவீர்கள். அதே போல மழை பொழியும் நேரத்தில் இங்கு வருவது மிக மிக ஆபத்து என்கிறார்கள் உள்ளூர் மக்கள். மழை நேரத்தில் இந்த இடம் முழுக்க ஈரப்பதம் அடைந்து கடுமையான புதைகுழி போன்ற அமைப்பை உருவாக்குவதாகவும், தனியாக சிக்கிக் கொண்டால் ஆபத்து என்றும் கூறுகின்றனர். கூடவே இங்கு சுருட்டை விரியன், கட்டு விரியன் போன்ற விஷ பாம்புகளும் காணப்படுகிறதாம்.
தமிழ் திரைப்படங்களில் தேரிக்காடு
இது தான் தமிழ்நாட்டின் பாலைவனம் என்று அறியாமல் நீங்கள் பலமுறை இந்த இடத்தை தமிழ் திரைப்படங்களில் பார்த்து இருப்பீர்கள். ஐயா படத்தில் ஒரு வார்த்தை கேக்க ஒரு வருஷம் என்ற பாடல், அசுரன் படத்தில் வரும் பிரபல சண்டை காட்சி, தாமிரபரணி படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் இந்த தேரிக்காடு பகுதியில் தான் படமாக்கப்பட்டன. நீங்களும் உங்கள் நண்பர்களுடன் இந்த இடத்திற்கு சென்று சில போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுங்களேன்!



Click it and Unblock the Notifications





