வாழ்வில் எத்தனை முறை சென்றாலும் மீண்டும் மீண்டும் வர தூண்டக் கூடிய இடம் தான் திருமலை திருப்பதி! கலியுகவரதனாக நமக்கு அருள் பாலிக்கும் திருவேங்கடமுடையானை நாம் எத்தனை முறை தரிசித்தாலும் நமக்கு சலிப்பதில்லை. மாறாக அவர் திருமுகத்தை மீண்டும் மீண்டும் காண வேண்டும் என்ற எண்ணம் பார்த்த வந்து விட்ட அடுத்த நொடியிலேயே நம்மைப் பற்றிக் கொள்ளும் என்று அனைவருமே நினைப்பார்கள்!
ஆனால் திருப்பதி செல்வதோ சாதாரண வேலை அல்ல! தரிசின டிக்கெட் மற்றும் தங்குமிடம் புக் செய்வது, பஸ் டிக்கெட் புக் செய்வது, அலுவலகத்தில் லீவ் சொல்லுவது என ஏகப்பட்ட குழப்பம் இருக்கும். நீங்கள் உங்களுக்கு விடுமுறை இருக்கும் போது உதாரணத்திற்கு ஞாயிறு அன்று நீங்கள் சென்று வரலாம். இவையனைத்தையும் நாம் முன்கூட்டியே தயார் செய்து அழகாக திட்டமிட்டால் ஒரே நாளில் சாமி தரிசித்துவிட்டு சென்னைக்கு வந்து விடலாம். உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே விடை உள்ளது.

திருப்பதி தரிசன டிக்கெட் புக்கிங்
அனைவருக்குமே திருப்பதி செல்ல வேண்டும் என்ற எண்ணமுண்டு. ஆனால் சர்வ தர்ஷனில் அவர்கள் நம்மை குடவுனில் மணி கணக்கில் காத்திருக்க வைக்கிறார்கள். அவர்களும் கூட்டம் கூட்டமாக மக்கள் திருமலையை நோக்கி படையெடுக்கும் அவர்களுக்கும் வேறு வழியில்லை அல்லவா? ஆனால் இதில் சிக்கி கொள்ளாமல் சுவாமி தரிசனம் செய்ய நமக்கு வேறு வழி உள்ளது. அது தான் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்.
ஆம்! ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதிக்கு மேல் https://tirupatibalaji.ap.gov.in/#/login இந்த இணையத்தளத்தில் ரூ. 300 சிறப்பு தரிசனதிற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. காலை 9 மணிக்கு துவங்கும் புக்கிங் 12 மணிக்கெல்லாம் முடிந்து விடுகிறது. நீங்கள் முன்பதிவு துவங்கிய உடனே பதிவு செய்து கொள்ளுங்கள். குறிப்பாக உங்களுக்கு விடுமுறை நாளில் காலை வேலையில் அதாவது 10 அல்லது 11 மணிக்கு தரிசனம் பார்ப்பது போல் புக் செய்து கொள்ளுங்கள்.

திருமலை தங்குமிடம் புக்கிங்
டிக்கெட் புக்கிங் செய்து விட்டால் போதுமானது என்று நீங்கள் இருந்து விட வேண்டாம். உங்களுடன் வயதானவர்கள், பெண்கள் அல்லது குழந்தைகள் வருகிறார்கள் என்றால் சற்று ஓய்வெடுக்க தனி அறை இருந்தால் அல்லது குளித்து ரெடியாக தனி அறை இருந்தால் நன்றாக இருந்து இருக்குமே என்று அங்கு சென்று நீங்கள் யோசிக்க வேண்டும். அதற்கும் உபாயம் உண்டு.
https://tirupatibalaji.ap.gov.in/#/login இதே இணையத்தளத்தில் உங்களுடைய மெயில் ஐடி மற்றும் பாஸ்வர்ட் போட்டு தரிசின டிக்கெட் முன்பதிவு செய்தது போலவே, ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதிக்கு மேல் திருமலையில் தங்குமிடங்களுக்கான முன்பதிவு தொடங்குகிறது. உங்களுடைய வசதிக்கு ஏற்றார்போல் ரூ. 100 அல்லது ரூ. 1000 அறைகளை காஷன் டெபாசிட் செய்து புக் செய்து விடுங்கள்.ஆனால் ரூ. 1000 அறையானது கோவிலுக்கு சற்று பக்கத்தில் இருக்கிறது. நடந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். உங்களுக்கு நடப்பது பிடிக்குமென்றால் ரூ. 100 அறையே புக் செய்யலாம். தவறொன்றும் இல்லை.

சென்னை டு திருப்பதி ஒரு நாள் பயணத்திட்டம்
அனைத்தும் ரெடி அல்லவா? இப்போது பயணம். முன்னே கூறியது போலவே நீங்கள் உங்களுடைய விடுமுறை நாளில் பயணிக்க போகிறீர்கள். நீங்கள் 10 அல்லது 11 மணிக்கு தரிசனம் செய்ய வேண்டுமென்றால் திருமலையில் 9 மணிக்கு இருப்பது அவசியம்.
நீங்கள் சென்னையின் எந்த மூலையில் இருந்தாலும் சென்னை CMBT பஸ் ஸ்டாண்ட் மற்றும் மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையத்தை அணுக வசதி உண்டு. அதன்படி அதிகாலையில் வீட்டில் இருந்து கிளம்பி 5.30 மணிக்கு திருப்பதி பஸ் ஏறுவது போல திட்டமிட்டு கிளம்புங்கள்.

திருமலையப்பன் தரிசனம்
காலை 8 அல்லது 8.30 மணிக்கு எல்லாம் நீங்கள் திருப்பதியை அடைந்து விடுவீர்கள். அங்கிருந்து பஸ்ஸில் திருமலையை அடைய 30 நிமிடங்கள் ஆகிறது. திருமலையை அடைந்த உடனே, நீங்கள் ஏற்கனவே புக் செய்த ரசீதை CRO ஆபிசில் காண்பித்து ரூமை பெற்றுக் கொள்ளுங்கள். நீங்களும் வீட்டில் உள்ளவர்களும் குளித்து ரெடி ஆன பின்னர், அன்ன பிரசாதம் அல்லது அங்கு இருக்கும் ஹோட்டல்களில் சாப்பிட்டுவிட்டு ரூ. 300 சிறப்பு தரிசன க்யுவிற்க்கு செல்லுங்கள். போகும் போது டிக்கெட் நகலையும் உங்களுடைய ஒரிஜினல் ஆதார் அட்டைகளையும் எடுத்து செல்வது மிக அவசியம்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் எம்பெருமானான திருவேங்கடமுடையானின் தரிசனம் உங்களுக்கு கிட்டும். கோவிலில் சற்று அமர்ந்து மனதார வேண்டிக்கொண்டு பின்னர் திருமலையானின் பிரசாதமான லட்டைப் பெற்றுக்கொண்டு, மதிய உணவு அருந்திவிட்டு ரூமுக்கு செல்லுங்கள்.

திருச்சானூரில் தாயார் தரிசனம்
ரூமில் சற்று களைப்பாறிவிட்டு மதியம் 3 மணி போல் நீங்கள் திருமலையில் இருந்து கிளம்பலாம். கீழே உள்ள பஸ் ஸ்டாண்டிலோ அல்லது திருச்சானூரிலோ உங்களுடைய லக்கேஜூகளை லாக்கரில் வைத்துவிட்டு தாயாரின் தரிசனத்திற்கு செல்லலாம். நீங்கள் ரூ. 100 டிக்கெட்டில் சென்றால் விரைவில் அம்பாளை தரிசிக்கலாம். எப்படியும் அடுத்த ஒரு மணி நேரத்தில் தாயாரின் தரிசினம் கிடைத்து விடும். பின்னர், மாலை 6 மணிக்கு நீங்கள் சென்னை பஸ் பிடித்தாலும் இரவு 9 மணிக்கெல்லாம் சென்னையை அடைந்து விடுவீர்கள்.
இந்த ஒரு நாள் ட்ரிப் உங்களுக்கு உபயோகமாக இருக்குமல்லவா? உடனே திருமலைக்குச் செல்ல திட்டமிடுங்கள்!



Click it and Unblock the Notifications





