சென்னையின் நகர வாழ்க்கையில் பரபரப்பாக சுற்றி கொண்டே இருப்பது போர் அடிக்கிறதா? எங்காவது பக்கத்தில் ஆனால் ஒரு அழகிய இடத்திற்கு கம்மி பட்ஜெட்டில் சென்று வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறதா? அப்படியானால் இந்த இடம் தான் உங்களுக்கு சரியான சாய்ஸ். அதிக செலவு இல்லாமல் ஒரு நாள் ட்ரிப் அடிக்க நீங்கள் சென்னையை அடுத்துள்ள முட்டுக்காடு கடற்கரைக்கு சென்று வாருங்கள். தூய்மையான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் "நீல கொடி" (Blue flag certification) சான்றிதழைப் பெற்ற இந்த கடற்கரையில் சர்ஃபிங் முதல் ஃபிஷிங், வாலிபால் போன்ற விளையாட்டுகள் வரை எராளமான விஷயங்கள் உள்ளன!

அழகிய முட்டுக்காடு கடற்கரை
எப்பொழுதும் சென்னை நகருக்கு உள்ளேயே கூட்ட நெரிசல் நிறைந்த மால்கள், கடற்கரைகள், கோவில்கள் என சுற்றி சுற்றி சலிப்பாகி விட்டோம் அல்லவா. கூட்டம் அதிகம் இல்லாத அழகிய சூழலில் உள்ள இந்த முட்டுக்காடு கடற்கரை உங்கள் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும். இந்த இடத்தின் முழு சூழலும் ஒரு காஸ்ட்லியான தனியார் பீச் ரிசார்ட் போல தோற்றமளிக்கிறது. ஆனால் கம்மி விலையில் இங்கு நீங்கள் அவற்றையெல்லாம் அனுபவிக்கலாம்.

நீல கொடி சான்றிதழ் பெற்ற தூய்மையான கடற்கரை
இந்த கடற்கரை சமீபத்தில் பிளாஸ்டிக் இல்லாத மற்றும் சுத்தமான இடத்தின் நிகழ்ச்சி நிரலுடன் புதுப்பிக்கப்பட்டது. இதை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் மிகவும் தூய்மையான பசுமையான சூழலில் இருக்கும் கடற்கரைகளுக்கு வழங்கப்படும் நீல கொடி சான்றிதழைப் பெற்ற இந்த கடற்கரை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றது.

இங்கே நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்
சர்பிங் - இந்த இடம் அதிக அலைகளை பெறும் இடம் (High tide area) என்பதால் இங்கு சர்ஃபிங் செய்யப்படுகிறது. இங்கு சர்ஃபிங் செய்வது மிகவும் ஏதுவாக இருப்பதால் நிறைய வெளி நாட்டினர் உட்பட பலர் சர்ஃபிங் செய்வதை நீங்கள் காணலாம். நீங்களும் சர்ஃபிங் செயல்பாடுகளில் ஈடுபடலாம். சர்ஃபிங் செய்ய அங்கு நிறைய ஆபரேட்டர்கள் உள்ளனர். நீங்கள் அங்கு கட்டணம் செலுத்தி சர்ஃபிங்கில் ஈடுபடலாம்.
குழந்தைகள் விளையாட்டு பகுதி - இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கு என ஒரு சின்ன பார்க் போல ஒரு பகுதியும் இருக்கின்றது. இந்த இடம் நம் வீட்டு குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும்.
ரிலாக்ஸிங் ஏரியா - முழுப் பகுதியும் பார்ப்பதற்கு மலிவு விலையில் கிடைக்கும் பீச் ரிசார்ட் போல இருக்கிறது. அதுவும் குறிப்பாக அங்கு போடப்பட்டிருக்கும் நாற்காலிகள் மிகவும் சொகுசாக இருக்கின்றன. அதில் அமர்ந்து கடற்கரையை ரசித்துக்கொண்டே ரிலாக்ஸ் ஆக டைம் பாஸ் பண்ணலாம். அது மட்டுமின்றி இங்கு ஒரு உணவகமும் உள்ளது, டீ, காபி முதல் பலவகை உணவுகள் இங்கு கிடைக்கிறது
ஃபிஷிங் - உள்ளூர் மக்கள் தங்கள் படகுகளில் மீன் பிடிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். உங்களுக்கு மீன் பிடிக்கக ஆசையாக இருந்தால் அல்லது படகில் சிறிது தூரம் சென்று வர எண்ணினால் நீங்கள் அவர்களை அணுகலாம்.
பல்வேறு விளையாட்டுகள் - மேற்கூறியவை மட்டுமில்லாமல் இங்கு நீங்கள் பீச் வாலிபால், பீச் வாக்கிங் போன்றவற்றில் கூட ஈடுபடலாம்.

எப்படி செல்வது?
சென்னையின் எந்த பகுதியில் நீங்கள் இருந்தாலும் சென்னை இ.சி.ஆர் சாலைக்கு வந்து விடவும். முட்டுக்காடு பாலத்தில் இருந்து நேராக கோவளம் நோக்கி செல்லவும். தாஜ் ஃபிஷர்மேன் கோவ் அருகே இடதுபுறம் சென்று, சாலையின் முடிவில் நேராக சென்றால் நீலக் கொடி கடற்கரையை அடையலாம். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நீங்கள் இங்கு செல்லலாம். நீங்கள் இந்த இடத்தை பொது பேருந்து வாயிலாகவும், சொந்த வாகனம் மற்றும் ஆட்டோ வாயிலாகவும் எளிதில் அணுகலாம்.

நுழைவுக்கட்டணம்
நுழைவுக்கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 2௦ வசூலிக்கப்படுகிறது. உங்கள் வாகனத்தை பார்க்கிங் செய்ய எந்த கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. ஆனால் கேமராக்கள் எடுத்து சென்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த அழகிய கடற்கரைக்கு நீங்கள் எப்போது செல்ல போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications





