கும்பகோணத்தைச் சுற்றி எத்தனை கோயில்கள் இருக்கின்றன என்பதை துல்லியமாக கூறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் ஒன்றைத் தெளிவாக கூறலாம். நீங்கள் எவ்வளவு நினைத்திருக்கிறீர்களோ அதை விட அதிகமான கோயில்கள் கும்பகோணத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் கும்பகோணத்தை கோயில் நகரம் என்று அழைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. சரி நீங்கள் கும்பகோணத்தைச் சுற்றிப் பார்க்கவிரும்பினால் அங்கு நீங்கள் கட்டாயம் காணவேண்டிய கோயில்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்..
கும்பகோணம்
தஞ்சாவூரிலிருந்து வட கிழக்கு திசையில் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கும்பகோணம் எனும் கோயில் நகரம். கிட்டத் தட்ட தஞ்சாவூரிலிருந்து பேருந்து வழியாக ஒன்றரை மணி நேரத்தில் கும்பகோணத்தை அடையலாம். ரயில் வசதிகளும் உண்டு.
கும்பகோணம் பல மிகச் சுவையான வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளது. 2500 ஆண்டுகள் பழமையான சங்க காலத்திலேயே இந்நகரம் இருந்ததாக நம்பப்படுகிறது. தென்னிந்தியாவை ஆண்ட பண்டைக் கால அரச வம்சங்களான, சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சாவூர் நாயக்கர்கள் மற்றும் தஞ்சாவூர் மராத்தியர்கள் ஆகியோரது ஆட்சிக் கட்டுப்பாட்டில் கும்பகோணம் இருந்துள்ளது. 7ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் கும்பகோணத்தைத் தம் தலைநகரமாக ஆக்கினர். அதன் பிறகுதான் இந்நகரம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. எனினும் வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில்தான், கும்பகோணம் வளத்திலும், சிறப்பிலும் உச்சத்தை அடைந்தது.
wikipedia
கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கோயில்கள்
கும்பேஸ்வரர் ஆலயம்
ராமசாமி ஆலயம்
உப்பிலியப்பன் கோயில்
சாரங்கபாணி ஆலயம்
சோமேஸ்வரர் ஆலயம்
பட்டீசுவரம் துர்க்கையம்மன் ஆலயம்
விட்டல ருக்மணி சமஸ்தானம்
வெங்கடாச்சலபதி ஆலயம்
கம்பஹரேஸ்வரர் ஆலயம்
என மிக முக்கிய ஆலயங்கள் உட்பட இன்னும் ஏராளமான கோயில்கள் உள்ளன.
எடுத்துக்காட்டாக,
நாகேஸ்வரன் கோயில்
சக்ரபாணி கோயில்
காசி விஸ்வநாதர் கோயில்
அபிமுகேஸ்வர் கோயில்
கௌதமேஸ்வர் கோயில்
கம்பட்ட விஸ்வநாதர் கோயில்
வரதராஜபெருமாள் கோயில்
பாணபுரீஸ்வரர் கோயில்
திருப்புவனம் கோயில்
திருவிடை மருதூர் கோயில்
திருப்புறம்பியம் கோயில்
இப்படி எக்கச்சக்க கோயில்கள் கும்பகோணம் நகரிலும் அதைச் சுற்றிலும் உள்ளன.
wikipedia
ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம்
கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மாசிமக விழாவும் 12 ஆண்டுகளுக்கொருமுறைக் கொண்டாடப்படும் மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. 7 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த சைவநாயன்மார்களது பாடல்களிலும் பதிகங்களிலும் இக்கோவிலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது
இதன் ராஜகோபுரம் 125 அடி உயரத்தில், 9 நிலைகளைக் கொண்டதாக கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. இக்கோவிலுக்குள் அடுத்தடுத்து அமைந்துள்ள 3 வட்டமான சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார். இக்கோவிலின் நடுமையத்தில் அமைந்துள்ள இறைவனது சன்னிதியில் ஆதிகும்பேஸ்வரரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது.
wikipedia
ஸ்ரீ ராமசுவாமி ஆலயம்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமசுவாமி ஆலயம் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமனின் ஆலயமாகும். நாயக்க மன்னர்களின் பிரதம மந்திரியாக இருந்த கோவிந்த தீட்சிதரின் முயற்சியால் இக்கோவில் கட்டப்பட்டது. நாயக்கமன்னர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவை வணங்கிவந்தவர்கள். பெருமாளுக்கு ஆலயம் எடுப்பதைப் பெருமையாகக் கருதியவர்கள். இக்கோவிலின் பாணி அக்காலத்தில் பின்பற்றப்பட்ட நாயக்கர் காலக் கட்டிடக் கலையைச் சேர்ந்ததாகும்.
wikipedia
உப்பிலியப்பன் கோவில்
உப்பிலியப்பன் பெருமாள் என்று அழைக்கப்படும் மகாவிஷ்ணுவின் ஆலயமான உப்பிலியப்பன் கோவிலானது கும்பகோணத்தில் உள்ளது. இக்கோவிலில் உப்பிலியப்ப சுவாமியின் மனைவியான பூமி தேவிக்கும், அவரது தந்தையான மார்க்கண்டேய முனிவருக்கும் கோவில்கள் உள்ளன.
மகாவிஷ்ணுவின் 108 திவ்யதேசங்களுள் இக்கோவிலும் ஒன்று. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருநாகேஸ்வரம் என்னும் சிற்றூருக்கு அருகில் இக்கோவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இக்கோவிலுக்கு சாலை வழியாக எளிதில் செல்லலாம்.
wikipedia
திருநாகேஸ்வரம்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் ஒரு பேரூராட்சி நகரமாகும். கும்பகோணம் நகரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் ஒன்றான ராகுவுக்கான தலம் இதுவாகும். ஒன்பது நவக்கிரக தலங்களில் ஒன்றான திருநாகேஸ்வரத்தை சுற்றிலும் மீதமுள்ள எட்டு நவக்கிரகத்தலங்களும் அமைந்துள்ளன. திருநள்ளாறு( சனிபகவான்), கஞ்சனூர்( சுக்கிரன்), சூரியனார் கோவில்( சூரியன்), திருவெண்காடு(புதன்), திங்களூர்( சந்திரன்), கீழப்பெரும்பள்ளம்( கேது), ஆலங்குடி( குருபகவான்), வைத்தீஸ்வரன்கோவில்(செவ்வாய்) ஆகிய ஊர்கள் திருநாகேஸ்வரத்திலிருந்து வெகு அருகாமையிலேயே அமையப்பெற்றிருக்கின்றன.
wikipedia
ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம் ஒரு பெருமாள் கோவிலாகும். கும்பகோணம் இரயில்வே நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவான தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது . எனவே கும்பகோணம் இரயில்வே நிலையத்திலிருந்து பேருந்து மூலமாகவோ, ஆட்டோ மூலமாகவோ இக்கோவிலை சென்றடையலாம். 108 திவ்ய தேசங்கள் எனப் படும் 108 வைணவ ஆலயங்களில் ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயமும் ஒன்று.
wikipedia
சோமேஸ்வரர் ஆலயம்
சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் சிவபெருமான் சோமேஸ்வரர் என்னும் வடிவிலும், சொக்கேஸ்வரர் என்னும் பெயரில் வழிபடப்படுகிறார். அம்பாளின் பெயர் சோமசுந்தரி ஆகும். பொற்றமரைக்குளத்தின் கிழக்குப் புறமாகக் கோவிலுக்குள் எளிதாக வரமுடியும். சாரங்கபாணி ஆலயத்தின் தெற்குப் புறம் உள்ள சாலையிலிருந்தும் கோவிலுக்குள் எளிதாக வரலாம். இந்து புராணங்களின்படி, அமிர்த கலசம் உடைந்தபொழுது அக்கலசத்திலிருந்து ஒரு துளி வெளிப்பட்டு வளையவடிவில், இங்கு சிதறியதாம். அவ்வாறு சிந்திய அத்துளி விழுந்த இடத்தில்தான் தற்போதுள்ள சோமேஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளதாம்.
wikipedia
பட்டீசுவரம் துர்கையம்மன்
பட்டீசுவரம் துர்கையம்மன் ஆலயமானது கும்பகோணத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பட்டீசுவரம் என்னும் ஊரில் உள்ளது. இக்கோவிலில் வீற்றிருப்பவர், இந்து தெய்வமான துர்கையம்மன் ஆவார். துர்கையம்மன் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இதுவாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் துர்க்கையம்மனைத்தரிசித்து அருள்பெற்றுச் செல்ல இக்கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.
wikipedia
கம்பஹரேஸ்வரர் ஆலயம்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீ கம்பஹரேஸ்வரரைத் தரிசிக்க ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். இக்கிராமத்தில் வேறு பல கோவில்கள் இருந்தாலும் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம்தான் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். 13ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன். அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இதுவொரு சிவாலயமாகும்.
.
wikipedia