நம் எல்லோருக்குமே தெரிந்த உலகின் மிகப்பெரிய குடியிருப்பு (residence) ராஜ குடும்பத்தினர் வசிக்கும் "லண்டம் பக்கிங்ஹாம் அரண்மனை" தான்! ஆனால் அதுவல்ல உண்மை, நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மன்னரால் கட்டி முடிக்கப்பட்ட வதோதராவில் அமைந்துள்ள "லக்ஷ்மி விலாஸ் அரண்மனை" தான் உலகின் மிகப்பெரிய குடியிருப்பாகும். இது லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையை விடவும் நான்கு மடங்கு பெரியதாம். நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. இவ்வளவு பெரிய பெருமை மறைக்கப்பட்டது ஏன்? இந்தியர்களாகிய நமக்கும் கூட எப்படி இதுபற்றி தெரியாமல் போனது என்பது குறித்து கீழே காண்போம்!

பெரும் பொருட்செலவில் கட்டப்பட்ட அரண்மனை
லக்ஷ்மி விலாஸ் அரண்மனை இந்தியாவின் மிக கம்பீரமான கட்டிடங்களில் ஒன்றாகும். மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் III இன் தனிப்பட்ட இல்லமாக லக்ஷ்மி விலாஸ் அரண்மனை 1890 இல் கட்டப்பட்டது. இன்றைய அமெரிக்க டாலர்கள் 3.2 பில்லியன் மதிப்பில் இதனை எழுப்பியுள்ளனர். அடேங்கப்பா! இதனை கட்டி முடிக்க கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் ஆனது. சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த அரண்மனை, வதோதராவின் அரச குடும்பமான கெய்க்வாட்களின் இல்லமாக இன்றளவும் செயல்படுகிறது.

உலகிலேயே மிகப்பெரிய தனி குடியிருப்பு பகுதி
இந்த அரண்மனை தான் உலகின் மிகப்பெரிய தனி குடியிருப்பாக இருந்தது. அந்த காலத்து அதி நவீன வசதிகளான லிஃப்ட், மின்சாரம், டெலிபோன் ஆகிய அம்சங்கள் யாவும் இந்த அரண்மனையில் இருந்ததாம். அவை எல்லாம் அந்த காலத்தில் மிகவும் உயரிய அம்சங்களாகும். அதோடு மட்டுமில்லாமல் ராஜா தன் குழந்தைகள் பள்ளி செல்வதற்கு வசதியாக இருக்குமென்று ஒரு சின்ன ரயில்வே பாதையையும் அமைத்து உள்ளார். ஆடம்பர அறைகள், நீச்சல் குளம், அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற பல அதிநவீன வசதிகள் கொண்டு இந்த அரண்மனை கட்டப்பட்டது.

லக்ஷ்மி விலாஸ் அரண்மனை – இன்று
லக்ஷ்மி விலாஸ் அரண்மனை அதன் வளாகத்தில் எல்விபி விருந்துகள் மற்றும் மாநாடுகள், மோதி பாக் அரண்மனை மற்றும் மகாராஜா ஃபதே சிங் அருங்காட்சியக கட்டிடம் உட்பட பல கட்டிடங்களை உள்ளடக்கியது. அருங்காட்சியக கட்டிடம் முக்கியமாக மகாராஜாவின் குழந்தைகளுக்கான பள்ளியாக கட்டப்பட்டது. இன்று, இது ராஜா ரவி வர்மாவின் அசாதாரண ஓவியங்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து சேகரிக்கப்பட்ட பல்வேறு கலைப்பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கோல்ஃப் மைதானம், நீச்சல் குளம், கிளப்ஹவுஸ், ஜிம் மற்றும் மோதி பாக் கிரிக்கெட் மைதானம், புகழ்பெற்ற அருங்காட்சியகம் மற்றும் பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய அலுவலகம் ஆகியவை அரண்மனையின் ஒரு பகுதியாகும்.

உலகின் மிகப்பெரிய அரண்மனைகளில் ஒன்று
மோதி பாக் அரண்மனை, மகர்புரா அரண்மனை, பிரதாப் விலாஸ் அரண்மனை மற்றும் மஹாராஜா ஃபதே சிங் மியூசியம் கட்டிடம் போன்ற ஏராளமான கட்டிடங்களைக் கொண்ட இது இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய அரண்மனைகளில் ஒன்றாகும். இந்தோ-சராசெனிக் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த அரண்மனை இந்து, முகலாய மற்றும் கோதிக் கட்டிடக்கலை வடிவங்களில் இருந்து குவிமாடங்கள், மின்ரேட்டுகள் மற்றும் வளைவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு அற்புத படைப்பாக எழுப்பப்பட்டது.

தற்கொலை செய்துக் கொண்ட மேஜர் சார்ல்ஸ் மாண்ட்
இக்கட்டிடத்தை கட்டிய தலைமை கட்டிடக் கலைஞரான மேஜர் சார்ல்ஸ் மாண்ட் இந்த கட்டிடம் முடிக்கும் முன்னரே தற்கொலை செய்து கொண்டார். இவ்வளவு பெரிய பொருட்செலவில் இப்படி ஒரு பிரமாண்ட கட்டிடத்தைக் கட்டி கொண்டிருக்கிறோமே இது இடிந்து விட்டால் நம்மை பற்றி எல்லோரும் என்ன நினைப்பார்கள் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்துக் கொண்டார். அவர் இறந்த பின்னர், மகாராஜா வேறு சில நபர்களை வைத்து அரண்மனையை கட்டியுள்ளார். ஆனால் மேஜர் சார்ல்ஸ் மாண்ட் தவறு செய்து விட்டார். கட்டி முடிக்கப்பட்ட 132 ஆண்டுகளுக்கு பின்னரும் அரண்மனை மிக கம்பீரமாக நிற்கிறதே!

எப்பொழுது செல்லலாம்
லக்ஷ்மி விலாஸ் அரண்மனை குடிமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய அழகியல் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். குஜராத் வதோதராவின் ஜே.என்.மார்க்கில் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக திறந்து இருக்கிறது. நீங்கள் திங்கள் கிழமை தவிர வாரத்தின் மீதி எல்லா நாட்களிலும் இங்கு சென்று சுற்றிப் பார்த்து இதன் அழகைக் கண்டு வியப்படையலாம்.



Click it and Unblock the Notifications





