தினசரி ரயிலில் பயணிப்பவர்களுக்கு, அடிக்கடி தொலைதூரம் ரயிலில் சென்று வருபவர்களுக்கும் மட்டுமே தெரியும், ரயில் டிக்கெட் புக் செய்வது சாமானிய காரியம் இல்லை என்று! அதுவும் சீசன் நேரங்களிலும், பண்டிகை காலங்களிலும் டிக்கெட் முன்பதிவு என்பது அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாது. தற்போது UTS மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான தொலைதூரக் கட்டுப்பாட்டை இந்திய ரயில்வே சற்று தளர்த்தியுள்ளது. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. UTS என்றால் என்ன? எப்படி டிக்கெட் புக்கிங் செய்வது? அதில் இருந்த சிரமங்கள் என்பதை இங்கே காண்போம்!

UTS என்றால் என்ன?
முன்பதிவு செய்யாமல் பயணிக்கக் கூடிய ரயில்களில் பயணிப்பதற்கான பயணச் சீட்டு, மாதாந்திர பயணச் சீட்டு, ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் சீட்டு ஆகியவற்றை மொபைல் மூலம் புக் செய்ய இந்தியன் ரயில்வே UTS எனும் செயலியை செயல்படுத்தி வருகிறது. இந்த செயலியை இலவசமாக தரவிறக்கம் செய்து ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி ரயில் பயணச் சீட்டுக்களை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு டிக்கெட் கவுன்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் தடுக்கிறது.

UTS இன் நன்மைகள்
இந்த மொபைல் செயலியானது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட எல்லாவகையான ஸ்மார்ட்போன்களிலும் இயங்குகிறது, இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். R- Wallet, PayTM, Mobikwik போன்ற பேமெண்ட் ஆப் மூலமாகவோ அல்லது இண்டர்நெட் பேங்கிங் மூலமாகவோ டிக்கெட்டுகளுக்கான பணத்தை செலுத்தி நீங்கள் டிக்கெட்டுகள் புக் செய்து கொள்ளலாம்.

UTS இல் இருந்த சிக்கல்கள் என்ன?
முன்பதிவு செய்யாமல் பயணிக்கக் கூடிய புறநகர் அல்லாத ரயில்களுக்கான பயண சீட்டினை UTS மூலம் புக் செய்ய வேண்டுமானால், ரயில் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருந்தால் மட்டுமே புக் செய்ய முடியும். புறநகர் ரயில்களுக்கான பயண சீட்டினை UTS மூலம் புக் செய்ய வேண்டுமானால், தற்போது ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருந்தால் மட்டுமே புக் செய்ய முடியும். இது நீண்டகாலமாகவே பயணிகளிடையே பேச்சுப் பொருளாக இருந்து வந்தது. இந்த தூர வரம்பை அதிகப்படுத்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.

கோரிக்கைகளுக்கு செவி சாய்த்த இந்தியன் ரயில்வே
புறநகர் அல்லாத ரயில்களுக்கான டிக்கெட் புக்கிங்கிற்கான தூர வரம்பு 5 கிலோ மீட்டரில் இருந்து 20 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புறநகர் ரயில்களுக்கான பயண சீட்டினை புக் செய்வதற்கான தூர வரம்பு 2 கிலோ மீட்டரில் இருந்து 5 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பயணிகளும் பொது மக்களும் மிகவும் வரவேற்றுள்ளனர்.

UTS செயலி மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி
1. உங்கள் மொபைல் போனில் UTS செயலியைப் பதிவிறக்கவும்
2. முன்பதிவு டிக்கெட் மெனுவைக் கிளிக் செய்து, நார்மல் புக்கிங்கை தேர்ந்தெடுக்கவும்
3. புறப்படும் நிலையத்தின் பெயர் மற்றும் சேருமிடத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்
4. டிக்கெட் வகையைத் தேர்ந்தெடுக்கவும்
5.இறுதி கட்டணம் செலுத்தவும்
அவ்வளவு தான், உங்களுடைய UTS செயலியில் உங்கள் டிக்கெட்டை நீங்கள் பார்க்கலாம்!



Click it and Unblock the Notifications




