ஆதியும் அந்தமும் அடிமுடியும் காண முடியாத அந்த பரம்பொருள் சிவபெருமான் அபிஷேகப் பிரியர் ஆவார்! ஒரு சிறு கல்லையும் கூட அவரென நினைத்து தண்ணீர் ஊற்றி சிறு வில்வத்தை அதன் மேல் போட்டால் போதும் அங்கு வந்து உங்களுக்கு உதவுவார். உலகெங்கிலும் சிவபெருமானுக்கு பால், இளநீர், மஞ்சள், தயிர், தேன், அபிஷேகப்பொடி, வாசனை திரவியங்கள், பஞ்சாமிர்தம், விபூதி போன்றவற்றால் அபிஷேகம் செய்வதை நாம் பார்த்து இருப்போம்! ஆனால் இங்கு ஒரு கோவிலில் அவருக்கு வெந்நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்படுகிறது. மிகவும் வினோதமாக இருக்கிறது அல்லவா? ஆனால் உண்மைதான்!
திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் விசித்திர கோவில்
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் உள்ள பெண்மலைநாதர் சிவன் கோவிலில் சிவபெருமானுக்கு வெந்நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்படுகிறது. உலகத்திலேயே சிவபெருமானுக்கு வெந்நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்படுவது இந்த கோவிலில் மட்டும் தான்! இந்த கோவிலில் ஒன்றல்ல இரண்டு மூலவர்கள் இருக்கின்றனர்.
இதுவும் சற்று வித்தியாசமான விஷயம் தான். ஒரு மூலவர் சுயம்பாக உருவானவர், மற்றறொரு மூலவர் கோயிலைக் கட்டிய குறுநில மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.
மலைமீது அமைந்துள்ள கனககிரீஸ்வரர்
திருவண்ணாமலை மாவட்டத்தின் தேவிகாபுரம் கிராமத்தில் பொன்மலை என்ற மலைமீது இந்த கோவில் அமைந்துள்ளது. சேத்துப்பட்டில் இருந்து போளூர் செல்லும் வழியில் தேவிகாபுரம் கிராமம் அமைந்துள்ளது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலை அடைய 400 படிகள் ஏற வேண்டும். இந்த கோவில் ஒரு குறுநில மன்னரால் கட்டப்பட்ட அழகிய கோவிலாகும். சுயம்புவாக இருக்கும் எம்பெருமானை கனககிரீஸ்வரர் என்றும், மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபெருமானை காசி விஸ்வநாதர் என்றும் அழைக்கிறார்கள்.

ஒரு சிறு ட்ரெக்கிங் செய்து கோவிலை அடையுங்கள்
படிகள் ஏறிய உடனே தார் சாஸ்தா ஆலயம் மற்றும் வீரபத்திரன் ஆலயம் அமைந்துள்ளது. அவர்களை வழிபட்டுவிட்டு நீங்கள் கனககிரீஸ்வரரின் ஆசி பெற மேலே செல்லலாம். கால்வாசி தூரம் அடைந்த உடனே ஒரு விநாயகர் ஆலயத்தை நீங்கள் காணலாம். மலையேறும் வழி சுற்றிலும் பசுமையால் சூழப்பட்டுள்ளதால், பார்ப்பதற்கும் ரம்மியமாக இருக்கிறது. ஒரு முக்கால் மணி மேற மலையேற்றதிற்கு பிறகு நீங்கள் கோவிலை அடைந்து விடலாம். (Photo Credit- Elangovan Narasimman)

சிவபெருமானின் காயத்தை ஆற்றிய வெந்நீர் மற்றும் பசுநெய்
முன்னொரு காலத்தில் வேடன் ஒருவன் இங்குள்ள மரங்களை வெட்டிக் கொண்டிருக்கும் போது அவனிடம் இருந்த கோடரி தவறுதலாக சுயம்பு லிங்கத்தின் மேல் பட்டு விடுகிறது. இதை கவனிக்காமல் அவன் சென்று விடுகிறான். ஆனால் கோடரி பட்ட சிவலிங்கத்தில் இருந்து காயம் ஏற்பட்டு இரத்தம் வடிய தொடங்கியது. அன்றைய இரவே இந்த காட்சி அந்த குறுநில மன்னரின் கனவில் வருகிறது. அதிர்ச்சியடைந்து எழுந்த மன்னர் அடுத்த நாளே அங்கு சென்று, அந்த இடத்தை தூய்மை செய்து ஆலயம் எழுப்ப ஆரம்பித்தார். காயம் பட்டு கிடந்த சிவலிங்கத்தின் ரணத்தை ஆற்ற மன்னர் சிவலிங்கத்திற்கு சுத்த பசு நெய் மற்றும் வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல சிவலிங்கத்தின் மீது பட்டிருந்த காயம் காணமல் போய் விடுகிறது. [Photo Credit- Ra Muruganandam]

பிரசாதமாக கொடுக்கப்படும் வெந்நீர்
கருவறையை சந்தன்காந்த கற்கள் கொண்டு மிக சிறப்பாக இந்த ஆலயத்தை நிறுவியுள்ளார் அந்த குறுநில மன்னர். அன்று சிவபெருமானின் காயத்தை ஆற்றிய அந்த வெந்நீர் மற்றும் பசு நெய் கொண்டே அவர் தினமும் அபிஷேகம் செய்யப்பட்டார், இந்த வழக்கம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு இன்றளவும் பழக்கத்தில் உள்ளது. இந்த வெந்நீர் பொது மக்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. சிவபெருமானை அபிஷேகம் செய்த நீரை அருந்தினால் நீண்ட நாட்களாக நம்மை பாடாய் படுத்திக் கொண்டிருந்த நோயும் பூரண குணமடைவதாக அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். அதனாலேயே இந்த கோவிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

அறிவியலும் ஆன்மீகமும் ஒன்று தான்
1800 களில் இதனைக் கேட்டறிந்த அங்கிலேயர் ஒருவர் எப்படி சாதாரண நீர் நோயை சரி செய்யும் என்று இதனை ஆராய்ச்சி செய்ய இங்கு வருகை தந்துள்ளார். அவர் அபிஷேகம் செய்யப்படுவதற்கு முன் உள்ள வெந்நீர், பசு நெய் ஆகியவற்றின் மாதிரிகளையும், அபிஷேகம் செய்த பின்னர் கொடுக்கப்படும் பசு நெய் கலந்த வெந்நீரின் மாதிரியையும் பரிசோதனை செய்ய எடுத்துச் சென்றுள்ளார். அதில் அபிஷேகம் செய்யப்படுவதற்கு முன் உள்ள வெந்நீர் பாக்டீரியாக்களை கொல்கிறது என்றும் பசு நெய் உடலை தூய்மைப்படுத்துகிறது என்றும் கண்டுபிடித்துள்ளார். அதோடு, அபிஷேகம் செய்த பின்னர் கொடுக்கப்படும் பசு நெய் கலந்த வெந்நீர் உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொன்று இரத்தத்தை தூய்மைபடுத்தி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது என்றும் கண்டுபிடித்து கூறினாராம். ஒவ்வொரு ஆன்மிக செயலுக்கும் பின்பும் அறிவியல் இருப்பதை இப்பொழுது நீங்களே உணரலாமே! [Photo Credit- Kalyan Sunder]

எப்பொழுது இங்கு வரவேண்டும்
நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம், மெய் சிலிர்க்க வைக்கும் அழகிய சிற்பங்கள், மணி மண்டபம், சப்த கன்னிகள் சிற்பங்கள், சிதார் நினைவிடம் ஆகியவற்றையும் நீங்கள் இங்கு காணலாம். இந்த கோவிலுக்கு வர வேண்டும் என்றால் நீங்கள் காலை 10 - 12 மணிக்குள் வர வேண்டும், மற்ற நேரங்களில் நடை சாற்றப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. வருடத்தின் எல்லா நாட்களிலும் இந்த கோவிலுக்கு வருகை தரலாம்! [Photo Credit- Velu Chandran]
இத்தனை சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நீங்கள் எப்பொழுது செல்ல போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications





