ஒரே இடத்தில் சாப்பிட, விளையாட, ஷாப்பிங் செய்ய, திரைப்படம் பார்க்க வேண்டுமா? அதுவும் இலவச நுழைவு வசதியுடன்! சென்னை வாசிகளுக்கும், ஏன் வெளியூரில் வசிப்பவர்களுக்கும் கூட மிகவும் பரிச்சயமான ஒரு பாலம் சென்னை கிண்டியில் இருக்கும் கத்திப்பாரா மேம்பாலம். சென்னையின் நீண்டகால அடையாளமாக இருக்கும் கத்திப்பாரா மேம்பாலம் சென்னையின் போக்குவரத்திற்கு மட்டுமே உதவுவது இல்லை, இப்போது 'கத்திப்பாரா அப்டவுன் அல்லது கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்' எனும் பெயரில் குழந்தைகள் விளையாட்டுகள், பூங்கா மற்றும் ஏகப்பட்ட உணவகங்களுடன், ஷாப்பிங் கடைகளுடன், பரந்த பார்க்கிங் வசதியுடன் திறக்கப்பட்டுள்ளது. யார் வேணாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அந்த பூங்காவில் அமர்ந்து இருக்கலாம், வேடிக்கை பார்க்கலாம், பொழுதை கழிக்கலாம், உணவு உண்ணலாம், குழந்தைகளுடன் விளையாடலாம். முக்கியமாக இந்த இடம் குழைந்தகளுடன் செல்வதற்கு மிகவும் ஏற்றது.

சென்னை மக்களின் புதிய 'ஹேங் அவுட் பிளேஸாக' மாறிவிட்ட கத்திப்பாரா
கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் கிட்டத்தட்ட நாள் முழுவதும் வாகனங்கள் இடைவிடாமல் சீறிப்பாய்கிறது. ஆனால் அதற்கு அடியில் இருக்கும் சூழல் அப்படியே நேர்மாறாக மிகவும் அழகாகவும், புன்னகையுடனும், குழந்தைகளின் சிரிப்பு சத்தத்துடனும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் இப்போது சென்னை வாசிகளுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு இடமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். ஒரு மாலை பொழுதில் உங்கள் குழந்தைகளை இங்கே அழைத்து வந்தால் அவர்கள் விளையாடுவார்கள், வாக்கிங் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறவர்கள் இங்கே வாக்கிங் செல்லலாம், ஓய்வெடுக்கலாம்,நண்பர்களுடன் வந்து அரட்டை அடிக்கலாம், இங்கே கிடைக்கும் பலவகையான உணவுகளை ருசித்து மகிழலாம். மொத்தத்தில் இது அனைத்து வயதினருக்கமான இடம்.

பரபரப்பான கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் அமைந்திருக்கும் அப்டவுன்
வாகன நிறுத்துமிடங்கள், உணவகங்கள் மற்றும் விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்ட பல மாதிரி போக்குவரத்து மையம், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மூலம் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (CMDA) நிதியில் உருவாக்கப்பட்டது. 5.9 லட்சம் சதுர அடி பரப்பளவில், 14.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. அப்டவுன், எனும் நிறுவனம் பிஎன்ஆர் எஸ்டேட் நிலத்தை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து பத்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திறக்கப்பட்ட இந்த நகர்ப்புற சதுக்கம் திறக்கப்பட்ட நாளிலிருந்தே பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

உணவு, ஷாப்பிங், விளையாட்டு எல்லாம் ஒரே இடத்தில்
நகர்ப்புற சதுக்கம் மக்கள் தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு முன் ஓய்வெடுக்க அனுமதிக்கிறது. கத்திப்பாரா பாலம் நான்கு இலை வடிவில் இருப்பதால், கீழே உள்ள இடம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மண்டலங்களும் பார்க்கிங்கிற்கு 62,322 சதுர அடி, சில்லறை விற்பனைக்கு 33,250 சதுர அடி, நடைபாதைகள் மற்றும் கழிவறைகளுக்கு 32,808 சதுர அடி, சாப்பாட்டு பகுதிக்கு 9,311, குழந்தைகள் விளையாடும் பகுதிக்கு 4,884 சதுர அடி ஒதுக்கப்பட்டுள்ளதால் இங்கே பலதரப்பட்ட கடைகளும், பொழுபோக்கு மையங்களும், உணவகங்களும் உள்ளன. காபி தொடங்கி பர்கர், பிசா, நூடுல்ஸ், ரைஸ், சான்ட்விச், சிக்கன், மட்டன், அசைவ சாப்பாடு வரை இங்கே எல்லாமும் கிடைக்கிறது. பொம்மை ரயில், ஜம்பிங் போன்ற குழைந்தகளுக்கான விளையாட்டுகளும் இங்கே நிறைய இருக்கின்றன.
எப்படி செல்வது
இது வடக்கே ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ நிலையத்தையும், தெற்கே ஆலந்தூர் மெட்ரோவையும், கிழக்கே கிண்டி மெட்ரோவையும் கொண்டுள்ளது. ஆகவே சென்னையின் எந்த பகுதியிலிருந்தும் இந்த இடத்தை அணுகுவது ஈஸி. இந்த வார இறுதியில் உங்கள் குழந்தைகளுடன் இங்கே செல்லுங்கள்!



Click it and Unblock the Notifications





