இந்திய கிரிக்கெட் அணியில் தற்போதைய புதுமுகமான விஜய் சங்கரின் சொந்த ஊர் எது என்று பரவலாக இணையத்தில் தேடப்படுகிறது. கிரிக்கெட் வீரரான விஜய் சங்கரின் சொந்த ஊர் திருநெல்வேலி ஆகும். அவரது சொந்த ஊரில் அப்படி என்னதான் இருக்கிறது என்று இந்த பதிவில் காண்போம் வாருங்கள். .
திருநெல்வேலி
திருநெல்வேலினா அல்வா.. அல்வானா திருநெல்வேலினு பேசுற அளவுக்கு இங்க பேமஸ் ஆனது திருநெல்வேலி. கிரிக்கெட் வீரர் விஜய் சங்கரும் இந்த ஊரச் சேர்ந்தவருதான். மண் மணம் மாறாத திருநெல்வேலி நகரம் எங்கு காணினும் நிறைந்திருக்கும் பசுமை, அளவில்லா அன்பு பாராட்டும் மக்கள், அதி சுவையான தாமிரபரணி ஆறு என அற்புதங்கள் நிறைந்திருக்கும். குறிப்பாக இனிப்பு வகைகளை விரும்பி சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக திருநெல்வேலி வந்து புகழ்பெற்ற இருட்டுக்கடையில் கிடைக்கும் அதிசுவையான அல்வாவை ருசிக்க வேண்டும். இது மட்டுமில்ல திருநெல்வேலியில தெரிஞ்சிக்கிறதுக்கு இன்னும் நிறைய இடம் இருக்கு வாங்க..
Rahuljeswin
சென்னையிலிருந்து
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர்கூடம் என்ற மலையில் உற்பத்தியாகும் வற்றாத நதியான தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது நெல்லை என்று அழைக்கப்படும் திருநெல்வேலி நகரம். இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து 700 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.திருநெல்வேலி நகரமானது தமிழகத்தில் நாகரீகம் தழைத்த பழமையான இடங்களில் ஒன்றாகும். கி.மு 200 ஆம் ஆண்டு வாக்கில் மதுரையை தலைநகரமாக கொண்டு தென் தமிழகத்தை ஆட்சி செய்த பாண்டியர்களின் ஆட்சியின் கீழ் இந்நகரம் இருந்ததற்கான குறிப்புகள் கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் .
நெல்லையப்பர் கோயில் :
தமிழகத்தில் இருக்கும் மிகப்பழமையான சிவாலங்களில் ஒன்று தான் திருநெல்வேலி நகரின் மையத்தில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் கோயில் ஆகும். நின்றசீர் நெடுமாறன் என்ற அரசனால் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கே நெல்லையப்பர் சந்ததியும் அவரது உமையாள் காந்திமதி அம்மன் சந்ததியும் தனித்தனியாக அமைந்திருக்கின்றன. இந்த கோயிலை சுற்றி வருவதென்பது அலாதியானது. மிகவும் சந்தோசமாகவும் இருக்கும்.
Theni.M.Subramani
இசைத்தூண்கள்
இக்கோயிலில் தான் தமிழர் கட்டிட்டக்கலையின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் 'இசைத்தூண்கள்' இருக்கின்றன. மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தூண்களை தட்டினால் ஒவ்வொரு தூணும் பிரத்யேகமான இசையை எழுப்புகின்றன. இன்றுவரை இது எப்படி சாத்தியம் என்பதை எவராலும் கண்டறிய முடியவில்லை. ஐப்பசி மாதம் பத்து நாட்கள் நடைபெறும் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
Ssriram mt
உணவுகள்
இந்த பகுதியில் உணவுகள் மிகவும் சுவையானதாகவும், வண்ண வண்ண நிறங்களிலும் கிடைக்கும். இங்கு கிடைக்கும் மிக்சர், காரப்பூந்தி, இனிப்பு வகைகள், முக்கியமாக இருட்டுக் கடை அல்வா, சாந்தி ஸ்வீட் உலக பிரபலமானதாகும். கோதுமை, சக்கரை, நெய் போன்றவை கொண்டு தாயரிகப்படும் அதிசுவையான உணவுப் பண்டம் தான் அல்வா ஆகும். இது 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் திருநெல்வேலியில் உள்ள 'லட்சுமி விலாஸ்' என்ற பலகாரக்கடையில் முதன்முதலாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.
Sriramlaxman
தாமிரபரணி ஆறு
பொதிகை மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் வழியாக வருகிறது தாமிரபரணி. இன்றுள்ள ஆறு அவ்வளவு மாசடைந்து கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஆகிவிட்டது. அந்தளவிற்கு ஆறு மாசடைந்து விட்டது; தொடர் நகர்மயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம், தொழிற்சாலை கழிவுகள் எல்லாம் தாமிரபரணி ஆற்றில் வந்து முடிகிறது. ஒரு காலத்தில் மருத்துவகுணம் கொண்டதாக இருந்த இந்த நதியில் குளித்தவர்கள், இன்று குளித்தாலே மருத்துவரிடம் காட்டவேண்டிய நிலைக்கு ஆளாகிப்போகின்றனர்.
Karthikeyan.pandian
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
கூந்தன்குளம், நாங்குநேரி அருகே இருக்கும் ஒரு சிறிய கிராமம். இந்த ஊரில் இருக்கிறது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம். 1994 'ஆம் ஆண்டு முன்பு வரை பாதுகாக்கப்பட்ட இடமாக இருந்தது; 1994'இல்தான் பறவைகள் சரணாலயமாக அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து 33 கி.மீ தொலைவில் இருக்கிறது கூந்தன்குளம்.
K Hari Krishnan
பறவை வகைகள்
மொத்தம் 129.33 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த சரணாலயத்தில் 43 வகையான பறவை இனங்கள் இருக்கின்றன. சைபீரிய பகுதியில் இருந்து வருகை தரும் பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான் உள்ளிட்ட பல்வேறு உப்புக் கொத்திகள், செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று விதமான கொக்குகள், கரண்டி வாயன் என ஆண்டு தோறும் பறவைகள் வருகின்றன.
ARUN THANGARAJ
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் ஆகும். திருநெல்வேலி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருக்கிறது இந்த இடம். வெறும் புலிகள் மட்டுமல்ல, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற பிற விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன. இதுமட்டுமல்ல, பாபநாசம் அணை, பாணதீர்த்த அருவி, சேர்வலாறு அணை, அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அணை என்று பல சுற்றுலா தலங்கள் இதனருகே இருக்கின்றன. வனத்துறையிடம் அனுமதியோடு நீங்கள் மலையேற்றத்தில் ஈடுபடலாம். காட்டுக்குள் தங்குவதற்கு தமிழ்நாடு வனத்துறை விருந்தினர் மாளிகை, அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் ஆகியவை இருக்கின்றன.
Jaseem Hamza
பாபநாசம்
திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் பாபநாசம் ஆகும். திருநெல்வேலியில் இருந்து அறுபது கி.மீ தொலைவில் இருக்கும் இந்த ஊரில் பாபநாசர் கோயில், பாபநாசம் அணை, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அணை, கரையார் அணை போன்ற இடங்கள் சுற்றிப்பார்க்க சிறந்தவையாகும்.
புகழ்பெற்ற பாபநாசர் கோயிலின் புகைப்படம். நவ கயிலாயங்களில் சூரியனுக்கு உகந்த கோயிலான இங்கு வந்து இறைவனை மனதார வழிபட்டால் தீராத கொடிய நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாகும். சித்திரை பெருவிழா இங்கு நடக்கும் முக்கியமான திருவிழாவாகும்.
Bastintonyroy