இந்தியாவில் கலாச்சாரப் பாரம்பரியம் நிறைந்த மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று. இந்தியாவின் பன்முக கலாச்சார அடையாளத்தை நிரூபிக்கும் ஒரு அழகு மாநிலம் என்ற பெருமையை இது கொண்டிருக்கிறது. இந்திய மண்ணிற்குள் கலவையான கலாச்சார அம்சங்கள் வேரூன்றியிருக்கும் அற்புதமான உண்மையை இந்த திரிபுரா மாநிலம் பிரதிபலிக்கொண்டிருந்தது. இருக்கும் வளங்களை விற்றுத் திங்கும் பிற மாநிலங்களின் மத்தியில், திரிபுராவிற்கு மேலும் மேலும் செழுமை தீட்டியது அந்நாட்டின் முன்னாள் அரசாங்கம். இப்படிப்பட்ட பல பெருமைகளைக் கொண்ட திரிபுராவை கடந்த 25 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தது பொதுவுடமை அரசான மாணிக் சர்க்காரின் அரசு. இன்னும் என்னவெல்லாம் இங்கு உள்ளது என பார்க்கலாம் வாங்க.
செல்வச் செலுமைமிக்க திரிபுரா
PC : tripuratourism
கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றில் மட்டும் தனித்து இல்லாமல் உலக நாடுகளை ஈர்க்கும் வகையிலான பல்வேறு தனித்தன்மையான அம்சங்களை பெற்றிருப்பதால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி பயணம் செய்யும் சுற்றுலாப் பிரதேசமாகவும் இம்மாநிலம் திகழ்கிறது. அது மட்டுமல்லாமல், இதன் புவியியல் இருப்பிடமும் வித்தியாசமான ஒன்றாக வாய்க்கப்பெற்றிருக்கிறது.
இனக் கேந்திரம்
PC : tripuratourism
வடகிழக்கு இந்தியப்பகுதிக்கும் பங்களாதேஷிற்கும் இடையே எல்லைப்பகுதியில் இம்மாநிலம் அமைந்திருக்கிறது. இம்மாநிலத்தில் 19 வகையான இந்திய இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் வங்காள இனத்தாரும் அடங்குவர். செழிப்பான வரலாற்றுப் பின்னணி மற்றும் இயற்கை வளம் போன்றவற்றை திரிபுரா மாநிலம் கொண்டுள்ளது. பெரும்பாலும் மலைகள், பள்ளத்தாக்குப்பகுதிகள், சமவெளிகள் ஆகியவற்றை கொண்டுள்ள திரிபுரா மாநிலத்தில் குறுகிய பள்ளத்தாக்குகளால் பிரிக்கப்பட்டுள்ள ஐந்து மலைத்தொடர்கள் வீற்றிருக்கின்றன. கிழக்கு விளிம்பில் ஜாம்புவி மலைகள், அதற்கடுத்து மேற்கு நோக்கி உனோகோதி - ஷாகந்த்லாங், லாங்தோராய், அதாராமுரா - கலாஜாரி மற்றும் பராமுரா- தேவ்தாமுரா ஆகிய மலைத்தொடர்கள் இம்மாநிலத்தில் அமைந்துள்ளன.
திரிபுராவின் கலாச்சார செழுமை
PC : Self
பல்வேறு இனம் மற்றும் மொழிகளை கொண்ட மக்கள் வாழும் மாநிலம் என்பதால் வருடந்தோறும் பயணிகள் பார்த்து ரசிக்கும்படியான பல கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் திரிபுராவில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு இனத்தாரும் அவர்களுக்குரிய பிரத்யேக பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவற்றை பாரம்பரிய அம்சங்களுடன் கொண்டாடி மகிழ்கின்றனர். அந்தந்த பருவங்களுக்கேற்ப இங்கு திருவிழா கொண்டாட்டங்களை பயணிகள் பார்த்து ரசிக்கலாம். அக்டோபர் மாதத்தில் துர்க்காபூஜா, அதனை அடுத்து தீபாவளி, ஜூலை மாதத்தில் கராச்சி பூஜா போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
முக்கிய சுற்றுலா அம்சங்கள்
PC : tripuratourism
சுற்றுப்புற மாசுகள் ஏதுமற்ற காற்று, இனிமையான பருவநிலை இவற்றின் பின்னணியில் பார்த்து ரசிக்க வேண்டிய ஏராளமான அழகு அம்சங்கள் திரிபுரா மாநிலத்தில் நிறைந்துள்ளன. ஆன்மிக வழிபாட்டுத்தலங்கள், இயற்கை எழிற்காட்சி தலங்கள், பாரம்பரிய மாளிகைகள் போன்றவை இவற்றுள் அடங்கும். இவை தவிர பசுமையான வனப்பகுதிகள் மற்றும் ஏரிகள், ஆறுகள் போன்ற நீர்வளம் போன்றவற்றையும் இம்மாநிலம் பெற்றிருக்கிறது.
அகர்தலா
PC : Sharada Prasad CS
திரிபுரா மாநிலத்தின் தலைநகரமான அகர்தலா இப்பிரதேசத்திலேயே இரண்டாவது பெரிய நகரkக உள்ளது. காட்டுயிர் வளம் மற்றும் தாவரச்செழுமை ஆகியவற்றை கொண்டிருப்பதால் சுவாரசியமான இயற்கை எழில் அம்சங்கள் இங்கு ஏராளம். சமஸ்தான மாளிகைகள் மற்றும் அரண்மனைகள் போன்றவறை அதிகம் கொண்டுள்ள இந்த நகரத்தில் நவீனக்கட்டிடங்களும் ஒன்றாக கலந்து வண்ணமயமான தோற்றத்தை அளிக்கின்றது.
உஜ்ஜயந்தா அரண்மனை
PC : Koshy Koshy
மஹாராஜா ராதா கிஷோர் மாணிக்யா என்பவரால் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை அகர்தலா நகரத்தில் முக்கியமாக பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும். 1901.ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரண்மனை தற்போது மாநில சட்டப்பேரவையாக பயன்படுத்தப்படுகிறது. இதனுள்ளே அரியணை அறை, தர்பார் கூடம், வரவேற்பறை மற்றும் ஒரு நூலகம் ஆகியவற்றோடு சுற்றிலும் பல தோட்டப்பூங்காக்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 800 ஏக்கர் பரப்பளவில் காணப்பட்டுள்ள இந்த பூங்காவில் ஜகந்நாத் மற்றும் உமாமஹேஷ்வர் கோவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஜகந்நாத் கோவில்
PC : I, G-u-t
தேசிய பாரம்பரிய சின்னங்களில் புகழ் பெற்றுள்ளது ஜகந்நாத் கோவில். இந்த கோவில் தனது வடிவமைப்பில் இஸ்லாமிய பாணி கட்டிடக்கலை அம்சங்களை அதிகமாக பெற்றிருக்கிறது. குமிழ் மாடக்கோபுரங்கள் மற்றும் விதான வளைவு வாசற்கூரைகள் போன்றவை இக்கோவிலின் தனித்தன்மையான அம்சங்களாக காட்சியளிக்கின்றன. செஞ்சிவப்பு நிறத்தில் நான்கு அடுக்குகளை கொண்டுள்ள ‘ஷிகரா' பாணி கோபுரம் ஒரு எண்முக வடிவ பீடத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது.
உமாமஹேஷ்வர் கோவில்
PC : Swarupskd.wiki
உமாமஹேஷ்வர் கோவிலானது உஜ்ஜயந்தா அரண்மனை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கிறாது. அரண்மனை வளாகத்திலேயே அமைந்துள்ள பல கோவில்களில் இதுவும் ஒன்று. இந்து கோவிலான இது சிவ-சக்தி வழிபாட்டு மரபு இப்பகுதியில் விளங்கி வந்ததற்கான சான்றாக வீற்றிருக்கிறது. செஞ்சிவப்பு நிறத்தில் வண்ணமடிக்கப்பட்டிருக்கும் இந்த கோவில் திரிபுராவில் உள்ள ஏனைய கோவில்களைப்போலவே வங்காள பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. வங்காளப்பிரதேசத்தில் உள்ள கோவில்கள் யாவும் செஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பது ஒரு பொதுவான அம்சமாகும்.
திரிபுராவின் சொர்க்கபுரி
PC : Ghoseb
உமாமஹேஷ்வர் கோவிலின் பின்புலத்தில் வீற்றுள்ள உஜ்ஜயந்தா அரண்மனை அகர்தலாவின் பிரபலமான சுற்றுலா அம்சமாகும். தூரத்திலிருந்து பார்க்கும்போது இந்த அரண்மனையின் தோற்றம் ஒட்டுமொத்த நகருக்கும் ஒரு சொர்க்கபுரி போன்ற அழகை அளிப்பதை நாம் உணரலாம். கோவில் மற்றும் அரண்மனை இரண்டுமே தமது தோற்றங்களில் ஒத்திசைந்த சீர்மையுடன் காட்சியளிப்பது மற்றொரு விசேஷம். கோவிலின் முன்பகுதியில் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் புல்தரைகளும் குறிப்பிடவேண்டிய ஒரு அம்சமாகும்.
மலைகளுக்கு இடையே ஒளிந்திருக்கும் அற்புதம்
PC : tripuratourism
பெரும்பாலும் மலைகளாலும், காடுகளாலும் சூழப்பட்டுள்ள தலாயின் அடர்ந்த காடுகளை ரசிக்க வருடந்தோறும் திரிபுராவிற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். தலாயில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த தொழிற்வளர்ச்சியும் இல்லையென்றாலும் அண்ணாச்சிப் பழ சாறு எடுக்கும் தொழிற்சாலை வடகிழக்கு வேளாண்மை விற்பனை கழகத்தால் நிறுவப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் கிராமவாசிகள் கைவினைப்பொருட்கள் செய்வதிலும், ஊதுபத்திகள் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குகிறார்கள்.
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்!
PC : tripuratourism
தலாய் நகரம் சுற்றுலாப்பயணிகளை மற்றுமல்லாது யாத்ரீகர்களை ஈர்க்கும் இடமாக உள்ளது. லொங்தரை மந்திர், கமலேஷ்வரி மந்திர், ராஸ் ஃபேர் ஆகிய இடங்கள் குறிப்பிடத்தக்க சுற்றுலாதளங்களாகும். தலாய் நகரம் திரிபுரா சுற்றுலாவில் மிகமுக்கியமான பங்கை வகிக்கிறது.
நினைவுகளில் மூழ்க வைக்கும் ஏரி நகரம்
PC : Vivek Shrivastava
ஏரிகளின் நகரம் என்று பிரசித்தமாக அறியப்படும் உதய்பூர் ஒரு எழில் மிளிரும் வரலாற்று தலமாகும். இது தன் மஹோன்னதமான கோட்டைகள், கோவில்கள், அழகான ஏரிகள், அரண்மனைகள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக அறியப்படுவதோடு மட்டுமல்லாமல் தன் வளமான பண்பாட்டு மற்றும் பாரம்பரிய அம்சங்களுக்கு கீர்த்தி பெற்றும் விளங்குகிறது. மழைக்காலத்தில் இப்பிரதேசம் மிகக்குறைந்த அளவு மழையையே பெறுகிறது. ஆகவே இங்கு சுற்றுப்புறச்சூழலில் ஈரப்பதம் அதிகமாக காணப்படும். குளிர்காலத்தில் உதய்பூரின் சீதோஷ்ணநிலை மிக இனிமையாக காணப்படுவதோடு சுற்றுலாவுக்கும், நகரத்தை ரசிப்பதற்கும் ஏற்றதாக உள்ளது.
வேற என்னவெல்லாம் இருக்கு தெரியுமா ?
PC : Soman
திரிபுரா மாநிலம் முழுக்கவே பல்வேறு சுற்றுலாத் தலங்களால் நிறைந்து காணப்படுகிறது. அருங்காட்சியகம், சுகந்தா அகாடமி, லாங் தராய் மந்திர், மணிப்புரி ராஸ் லீலா, உனாகோட்டி, லட்சுமி நாராயண் கோவில், புராணோ ராஜ்பரி மற்றும் நஸ்ருல் கிரந்தஹார், சிறுத்தை தேசிய பூங்கா, ராஜ்பரி தேசிய பூங்கா போன்ற அம்சங்கள் திரிபுராவில் சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசிப்பதற்காக காத்திருக்கின்றன.