கி.பி 745ஆம் ஆண்டு வனராஜா சவ்தா என்பவரால் நிறுவப்பட்ட நகரம் தான் பதான் என்ற நகரமாகும். பதான் என்று பொதுவாக அறியப்பட்டாலும் இந்நகரின் முழுமையான பெயர் அன்ஹில்பூர் பதான் ஆகும். தன்னுடைய நண்பரும், தன் ராஜ்யத்தின் முதலமைச்சருமான அன்ஹில் என்பவரின் நினைவாக வன்ராஜா இப்பெயரை சூட்டியிருக்கிறார்.

வனராஜாவின் மகனான முலராஜா என்பவர் தான் இந்த அன்ஹில்பூர் பதானை தலைமையிடமாக கொண்டு மேற்கு இந்தியாவை ஆண்ட சோலாங்கி வம்சத்தினரின் ஆட்சியை நிறுவியவர் ஆவார். இந்த நகரத்தின் சிறப்பே இங்கிருக்கும் படிக்கிணறு தான். இந்தியாவில் ஏராளமான படிக்கிணறுகள் இருந்தாலும் அவை யாவும் இதற்கு ஒப்பாகாது.
ராணி-கி-வாவ்:

ராணி-கி-வாவ் என்றழைக்கப்படும் இந்த படிக்கிணறை கட்டியவர் ராணி உதயமதி ஆவார். இவர் தன்னுடைய கணவரும், அன்ஹில்பூர் பதானின் அரசருமான முதலாம் பீம்தேவ் அவர்களின் நினைவாக இதனை கட்டியதாக சொல்லப்படுகிறது. கி.பி 1050ஆம் ஆண்டு இது கட்டப்பட்டிருக்கலாம்.

இந்தியாவில் இருக்கும் படிக்கிணறுகளில் பெரியதாகவும், மிக அதிகளவிலான சிற்பங்கள் கொண்டதாகவும் இருக்கிறது. இதனுள் இருக்கும் சிற்பங்கள் பெரும்பாலும் ராமர், கிருஷ்ணர், வாமணன், நரசிம்மர் போன்ற விஷ்ணு பகவானின் அவதாரங்களை குறிப்பதாக இருக்கின்றன.

இந்த படிக்கிணற்றின் உள்ளே 30கி.மீ தொலைவுக்கு நீளும் ஒரு சுரங்கப்பாதை இருக்கிறதாம். பதான் நகருக்கு அருகில் உள்ள நகரமான சித்பூர் வரை இது நீள்கிறது. இந்த பாதை தற்போது முழுவதுமாக அடைக்கப்பட்டுவிட்டது.
பட்டோலா சேலை:

நம்ம ஊர் காஞ்சிபுரம் பட்டுப்புடவையை போன்றே பதானில் 'பட்டோலா' என்ற பட்டுப்புடவை நெய்யப்படுகிறது. அக்காலம் முதல் இன்று வரை ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களால் மட்டுமே இது உடுத்தப்படுகிறது. இதன் விலை மிக மிக அதிகம் என்பதோடு ஒரு சேலையை நெய்து முடிக்க ஆறு மாதங்கள் வரை ஆகுமாம். குறிப்பிட்ட சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இப்புடவையை நெய்கின்றனர்.



Click it and Unblock the Notifications




