முதலாம் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கு உலகப் புகழ் பெற்றதாகும். இதைக் காண உலகமெங்கிலுமிருந்தும் இன்றளவும் கணிசமான சுற்றுலா ஆர்வலர்களும், பக்தர்களும் வருகைத் தருகின்றனர். இதைக் காட்டிலும் பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் இருக்கிறதா என்று கேட்டால் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் முதலாம் ராஜராஜ சோழன் வழியில் வந்த இரண்டாம் ராஜராஜன் இப்படி ஒரு திட்டத்தைத் தீட்டி இந்த கோயிலை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்க பாடுபட்டான்.
இரண்டாம் ராஜராஜ சோழன் கட்ட நினைத்த மிகப்பிரம்மாண்டமான அந்த கோயில் தஞ்சாவூர் அருகேதான் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பயணிக்கும் ஆர்வலர்கள் கூட இந்த கோயிலுக்கு வருகை தருவது அவ்வளவாக இல்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் அவர்களுக்கு இந்த கோயில் குறித்த தகவல் அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. இந்த பகுதியில் அந்த கோயிலுக்கு எப்படி செல்வது? அந்த கோயிலின் சிறப்புகள் என்னென்ன என்று காண்போம் வாருங்கள்.

எங்குள்ளது?
தஞ்சாவூரிலிருந்து சரியாக ஒரு மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். முதலாம் ராஜராஜன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் எந்த அளவுக்கு கட்டிடக்கலையின் உச்சமாக கருதப்படுகிறதோ, அதற்கு கொஞ்சமும் குறையாத சிறப்புகளை கொண்டுள்ள இந்த கோயிலுக்கு நாம் தஞ்சாவூரிலிருந்து கிளம்பலாம்.
சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலியிலிருந்து கிட்டத்தட்ட சமமான தூரத்தில் அமைந்துள்ளது இந்த கோயில். தஞ்சாவூரிலிருந்து 35கிமீ தூரம் ஆகும். வாருங்கள் பயண வழிகாட்டியுடன் பயணிக்கலாம்.
Rakshith Rao

பயணவழிகாட்டி
வாருங்கள் வாசகர்களே.... நான் பயண வழிகாட்டி.. என்னுடன் சேர்ந்து இந்த கோயிலுக்கு பயணிக்கலாம். இந்த கோயிலுக்கு சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூரிலிருந்து எப்படி வரலாம் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்.
சென்னை - தஞ்சாவூர் : 346 கிமீ
கோவை - தஞ்சாவூர் : 272 கிமீ
நெல்லை - தஞ்சாவூர் : 351 கிமீ

சென்னையிலிருந்து தஞ்சாவூர்
சென்னையிலிருந்து தஞ்சாவூர் 346கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
நீங்கள் விமானம் மூலமாக வருவதென்றால், சென்னையிலிருந்து திருச்சி வரை வந்து பின் அங்கிருந்து வாடகை வண்டிகளிலோ அல்லது பொதுப் போக்குவரத்து மூலமாகவோ வரலாம்.
சென்னை - திருச்சி விமான கட்டணம் 6000 லிருந்து ஆரம்பிக்கிறது. மேலும் விவரங்களுக்கு இங்கு சொடுக்குங்கள்
ரயில் மூலமாக பயணிப்பதாக இருந்தால், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து - தஞ்சாவூர் ரயில் நிலையம் வரை பயணிக்கலாம்.
இரவு 9.40 மணியிலிருந்து 11.30 மணி வரையில் ராமேஸ்வரம் விரைவு, தூத்துக்குடி விரைவு, மதுரை விரைவு, மன்னை விரைவு, உழவன் விரைவு வண்டிகள் இருக்கின்றன. மாலை வேளைகளில் 4.05க்கு திருச்செந்தூர் விரைவு வண்டி இயக்கப்படுகிறது. மேலும் காலை 8.15க்கு திருச்சி, 10.50க்கு நாகர்கோயில் விரைவு வண்டிகள் இருக்கின்றன. இதுதவிர வேறு இடத்திலிருந்து கிளம்பி சென்னை வழியாக தஞ்சாவூருக்கு செல்லும் ரயில்களும் இருக்கின்றன. மேலும் விவரங்கள் மற்றும் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய சொடுக்குங்கள்.

சென்னை - தஞ்சாவூர் சாலைப் பயணம்
பேருந்து மூலமாக பயணிக்க விரும்பினால், குறைந்த பட்சம் 550ரூ யிலிருந்து, 840ரூ வரை படுக்கை வசதிகளைப் பொறுத்து தனியார் பேருந்துகள் கட்டணம் வசூலிக்கின்றன.
பொதுப்போக்குவரத்தை பொறுத்தவரையில் தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழகம் சாய்வு இருக்கை பேருந்துகளை இயக்குகிறது. இதற்கு 391ரூ கட்டணம் வசூலிக்கிறது.
சுயவாகனத்தில் பயணிக்க விரும்புபவர்கள், சென்னை - செங்கல்பட்டு - மேல்மருவத்தூர் - திண்டிவனம் - விழுப்புரம் வரை பயணிக்கலாம். அங்கிருந்து இரண்டு வழிகளில் தஞ்சாவூரை அடையலாம்.
1 விழுப்புரம் - கடலூர் - சிதம்பரம் - மயிலாடுதுறை - கும்பகோணம்
2 விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை - பெரம்பலூர் - அரியலூர் - தஞ்சாவூர்
இதில் முதல் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் தராசுரம் கோயிலை முதலில் அடையலாம். அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் வந்து பெரிய கோயிலை ரசிக்கலாம்.

கோவையிலிருந்து தஞ்சாவூர்
கோயம்புத்தூரிலிருந்து தஞ்சாவூர் 291கிமீ ஆகும். விமானத்தில் பயணிக்கவிரும்புபவர்கள் கோவை - திருச்சி விமானத்தில் வந்து அங்கிருந்து தஞ்சாவூருக்கு பயணிக்கவேண்டும். விமானம் பற்றிய தகவல்களை மேலும் தெரிந்துகொள்ள இதை சொடுக்குங்கள்.
ஒருவேளை நீங்கள் ரயிலில் பயணிப்பதாய் இருந்தால், கோயம்புத்தூரிலிருந்து நேரடியாக இரண்டு ரயில்களும், வேறு இடத்திலிருந்து கோயம்புத்தூர் வழியாக இயக்கப்படும் இரண்டு ரயில்களும் இருக்கின்றன. இதுபோக ரயில்வே சில சமயங்களில் சிறப்பு ரயில்களையும் இயக்குகிறது. ரயில்கள் தொடர்பான விவரங்களுக்கு இங்கு செல்லுங்கள்.

கோவை - தஞ்சை சாலை மார்க்கமாக
கோவையிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்து மூலமாக பயணிக்கவிரும்புபவர்களுக்காக சில தனியார் நிறுவனங்கள் 260ரூ முதல், அதிகபட்சமாக 500ரூ வரை கட்டணத்தில் சேவைகளை இயக்குகின்றன. படுக்கை வசதிகளைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்து சேவைகளை வழங்குகிறது. 237ரூபாய் பயணக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சுயவாகனத்தில் பயணம் செய்வோர், கரூர் திருச்சி வழியாக 5.20 மணி நேரத்தில் வந்தடையலாம். மாற்றுப்பாதையாக திருப்பூர், ஈரோடு வழியாகவும், அல்லது அவினாசி காங்கேயம் வழியாகவும் கரூரை அடைந்து பயணிக்கலாம். எப்படியாயினும் திருச்சி வந்துதான் பயணிக்கவேண்டியிருக்கும்.

திருநெல்வேலி - தஞ்சாவூர்
திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் விருதுநகர் என அருகிலுள்ள எல்லா பகுதிகளிலிருந்து ஒரு பாதைதான் என்பதால் நெல்லை - தஞ்சாவூர் பயணத்தைப் பற்றி பார்க்கலாம்.
விமானம் மூலமாக பயணிக்க விரும்புபவர்கள் கட்டாயம் மதுரை அல்லது திருவனந்தபுரத்துக்கு செல்லவேண்டும். தூத்துக்குடி விமான சேவைகள் பற்றி நன்கு தெரிந்துகொண்டு செல்லலாம். அல்லது ரயில் மற்றும் பேருந்து சேவையே சிறந்தது.
ரயில் மூலமாக பயணம் செய்யவிரும்புபவர்கள் நெல்லையிலிருந்து புதுச்சேரி விரைவு ரயில்களில் பயணிக்கலாம். அல்லது நாகர்கோயில் விரைவு வண்டியிலும் செல்லலாம். மதுரையிலிருந்து திருச்சி வழியாக நிறைய ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சாலை மார்க்கத்தில்
ஒருவேளை நீங்கள் சாலை மார்க்கமாக பயணிக்கிறீர்கள் என்றால், நாகர்கோயிலிலிருந்து 550ரூ முதல் 1250ரூ வரையிலும், நெல்லையிலிருந்து 450ரூ முதலும் சேவைகள் இயக்கப்படுகின்றன. படுக்கை வசதிகளைப் பொறுத்து கட்டணம் மாறுபடலாம்.
சுயவாகனத்தில் பயணம் செய்யவிரும்புபவர்கள், நெல்லை - மதுரை - திருச்சி - தஞ்சாவூர் வழியாக பயணிப்பது சிறப்பானதாக இருக்கும். வேறு வழிகளிலும் பயணிக்கமுடியும்.
1 மதுரை - திண்டுக்கல் - திருச்சி - தஞ்சாவூர்
2 மதுரை - மேலூர் - புதுக்கோட்டை - தஞ்சாவூர்
Viswanath

தஞ்சாவூர் - தராசுரம்
ஒருவழியாக தமிழகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் தஞ்சாவூரை எப்படி அடைவதென்பதை பார்த்துவிட்டோம். இனி தஞ்சாவூரிலிருந்து தராசுரம் எப்படி செல்வது என்பதைப் பார்க்கலாம். அதற்கு முன் கோயிலைப் பற்றிய சிறு தொகுப்பை பார்ப்போம்.
இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயில் தஞ்சாவூர் அருகே தராசுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் காணப்படக்கூடிய மிக நுணுக்கமான கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகளை தமிழ்நாட்டின் வேறெந்த கோயிலிலும் காண முடியாது.
கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், ஐராவதேஸ்வரர் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப் போற்றப்படுகின்றன.

தஞ்சை ரயில் நிலையம்
தஞ்சை பேருந்து நிலையமும், ரயில் நிலையமும் ஓரளவுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ரயில் நிலையத்திலிருந்து நிறைய ரயில்கள் தராசுரம் வழியாக இயக்கப்படுகின்றன. சில ரயில்கள் தராசுரத்திலும், சில ரயில்கள் கும்பகோணத்திலும் நிற்கும்.
Ssriram mt

ஐராவதேஸ்வரர் கோயில்
சோழ மன்னர்களில் இரண்டாம் ராஜராஜனால் 12-ஆம் நூற்றாண்டில் ஐராவதேஸ்வரர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் ராஜராஜன், அங்கிருந்து பெயர்ந்து தாராசுரத்திற்கு வந்து இந்தக் கோயிலைக் கட்டியதாக நம்பப்படுகிறது. தன் பாட்டனார் வாழ்ந்த தஞ்சைக்கு அருகிலேயே இருக்கவேண்டும் என்பதையே பின்னாளில் வந்த சோழர்களும் முடிவு செய்திருக்கவேண்டும். அதனாலேயே இவர்களின் வம்சம் தஞ்சையை சுற்றியே மாறிக்கொண்டிருந்திருக்கிறது. இந்த கோயிலும் கூட தஞ்சையிலிருந்து 1 மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளதுதானே.
Vinoth Chandar

சிற்பிகளின் கனவு
ஐராவதம் என்பது இந்திரனின் யானை. துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாக இந்தக் கோயிலுக்கு ஐராவதேஸ்வரர் கோயில் என பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. சிற்பிகளின் கனவு கட்டிட வல்லுனர்களால் "சிற்பிகளின் கனவு" என்று வர்ணிக்கப்படும் இந்தக் கோயில் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.
Srikaanth Sekar

கொனார்க் பாணி வடிவமைப்பு
ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதேஸ்வரர் கோயில் கொனார்க் கோயிலை ஒத்துள்ளது. படம் : Munish Palaniappan

ராஜ கம்பீர மண்டபம்
ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது . இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்தியக் கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. படம் : Varun Shiv Kapur

சென்டிமீட்டர் அளவு சிற்பங்கள்!
ராஜ கம்பீர மண்டபத்தின் தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. அதோடு நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே இங்கு மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன. படம் : Jean-Pierre Dalbéra

எமன் பெற்ற சாப விமோச்சனம்!
எமதர்மன் தான் பெற்ற சாபத்தால் உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோச்சனம் பெற்றதாக நம்பப்படுகிறது. படம் : Shriram Swaminathan

புதுமைகள்
மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார், மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். மேலும் கோயில் கருவரையில் லிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. படம் : Balaji.B

வித்தியாசமான சிற்பங்கள்!
கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், மூன்றுமுகங்கள் மற்றும் எட்டுக்கைகளுடன் அர்த்தநாரீஸ்வரர் என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. படம் : sowrirajan s

புல்லாங்குழல் ஏந்திய சிவன்!
அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல புதுமையான சிவன் சிற்பஙகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இவற்றில் குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். படம் : Jean-Pierre Dalbéra

இசைப்படிகள்
நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் நாதப்படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வெவ்வேறு பகுதிகளில் தட்டும்போது 'சரிகமபதநி' என்ற சப்த சுவரங்களும் ஒலிக்கின்றன. படம் : Raamanp

உலகப்பாரம்பரியச் சின்னம்
1987-ல் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 2004-ஆம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலும், ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. படம் : Arian Zwegers

கல்வெட்டுகள்
தமிழ்நாட்டு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புகளை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது. மேலும் இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் ராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி முதன் முதலாக அறியப்பட்டது. படம் : Thamizhpparithi Maari

யானையா, காளையா??!!!
யானையா, காளையா என்று அடையாளம் காணமுடியாத அளவுக்கு இப்படி ஒரு அட்டகாச சிற்பத்தை அந்தக் காலத்திலேயே வடித்திருக்கிறார்கள். படம் : Balaji.B

தூண்கள்
மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் நுணுக்கமாகவும் அலங்கரிக்கப்பட்டுள்ள ஐராவதேஸ்வரர் கோயிலின் தூண்கள்.
படம் : Kanithapithan

நாட்டியத்தின் எல்லைகள்!
நாட்டியத்தின் எல்லைகளை அழகாக விளக்குவதாக இந்தச் சிற்பம் காட்சி தருகிறது. படம் : Jean-Pierre Dalbéra

63 நாயன்மார்கள்
63 நாயன்மார்கள் சிலையும் வரிசையாக வடிக்கப்பட்டுள்ளன. படம் : sowrirajan s

சுவரோவியம்
ஐராவதேஸ்வரர் கோயில் சுவற்றில் காணப்படும் சோழர்கால ஓவியம். படம் : Ssriram mt

இராமாயண காட்சி
வாலியும், சுக்ரீவனும் போர் புரிய, மறைந்து இருந்து சுக்ரீவன் மீது அம்பெய்தும் ராமர். படம் : Balaji.B

கொடிமரம்
ஐராவதேஸ்வரர் கோயிலின் கொடிமரம். படம் : Thamizhpparithi Maari



Click it and Unblock the Notifications




