இந்தியா என்றேலா அடுத்த எதிர்சொல்லாக உதயமாவது பாக்கிஸ்தான் தான். இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரிவு போரானது கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையை அடுத்து இந்தியா, (மேற்கு மற்றும் கிழக்கு) பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் உருவான போது உருவானது. அன்று தொட்டு இன்று வரை காஷ்மீர், ஜம்மு என பல பகுதிகளில் அவ்வப்போது போர் குறித்தான செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. இன்னும் பாக்கிஸ்தானியர்ளை விரோதிகளாகப் பார்க்கும் கண்ணோட்டமே நம்மில் பலருக்கு நிலவி வருகிறது. இச்சூழ்நிலையில், பாக்கிஸ்தானில் இருந்து வந்த ஒருவர் இந்தியாவில் தியான மடம் அமைத்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் அது எங்கே உள்ளது என பார்க்கலாம்.
அஸ்தல் போஹார்
ஹரியாணா மாநிலத்தில் ரோஹ்தக் பகுதியில் அமைந்துள்ளது அஸ்தல் போஹார் எனப்படும் மடம் குரு கோரக் நாத் மதப்பிரிவினரின் ஆன்மீக மடம். இந்த பிரிவினர் சிவபெருமானை தீவிர பக்தியுடன் வணங்குபவர்கள். ரோஹ்தக் நகரத்திற்கு கிழக்கே 7 கிலோ மீட்டர் தொலைவில் 10ம் எண் ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் இந்த மடம் அமைந்துள்ளது.
கோரக்நாத் பக்தர்
புராணக்கதைகளின்படி, தற்போது பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் எனும் நகரத்தில் வசித்த ஒரு கோரக்நாத் பக்தரான பூரான் பகத் என்பவர் இந்த இடத்திற்கு ஒரு முறை பயணம் செய்துள்ளார். இந்த தலத்தின் இயற்கை அழகால் கவரப்பட்ட அவர் இது ஆன்மீக சடங்குகள் மற்றும் தியானத்திற்கு ஏற்ற இடமாக இருக்கும் என்று கருதினார். எனவே இந்த மடத்தை நிர்மாணித்தார். இருப்பினும் பின்னர் கவனிப்பின்றி கிடந்த இம்மடத்தை பாபா மஸ்த்நாத் எனும் குரு 1791ம் ஆண்டு புதுப்பித்து சீர்படுத்தினார்.
கட்டமைப்பு
இந்த மடத்தில் பலவிதமான நினைவுப்பொருட்கள், புராதன அரும்பொருட்கள், கற்சிற்பங்கள், புனித நூல் பிரதிகள், நூல்கள் மற்றும் இதர ஆன்மீக சடங்குப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கோரக்நாத் மதப்பிரிவுக்கான ஒரு முக்கிய ஆன்மீக கேந்திரமாக இந்த மடம் தற்போது பிரசித்தி பெற்றுள்ளது. துளையிடப்பட்ட காதுகளுடன் காட்சியளிக்கும் கன்பதா யோகிகள் மத்தியில் இந்த மடம் புனிதமாக கருதப்படுகிறது.
அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
ரோஹ்தக் பகுதியில் அமைந்துள்ள அஸ்தல் போஹார் தலத்திற்கு அருகே தில்யார் ஏரி, கொக்கார் கோட்டை மற்றும் ஆன்மீகத் தலமான ராதா கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இவை அப்பகுதீயில் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களாகவும் உள்ளது.
MDU Rohtak
தில்யார் ஏரி
தில்யார் ஏரி டெல்லி- ஹரியானா எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 89 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ரோஹ்தக் நகரத்துக்கு அருகில் உள்ள ஏரி பிரம்மாண்டமான 132 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை சுற்றிலும் பசுமையான இயற்கை பிரதேசம் காணப்படுவதால் டெல்லி மற்றும் சுற்றியுள்ள நகர்ப்பகுதிகளிலிருந்து மக்கள் அமைதியையும் இயற்கைச் சூழலையும் நாடி இங்கு வருகை தருகின்றனர். மிதவைப்படகு சவாரி, தூண்டில் மீன்பிடிப்பு, படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட விரும்புபவர்களும் இங்கு சுற்றுலா வரலாம். ஒரு அற்புதமான பிக்னிக் தலமாக விளங்கும் இந்த ஏரிப்பகுதியில் ஒரு சிறிய விலங்குக் காட்சிசாலையும் உள்ளது. இங்கு புலி, சிறுத்தை, மான், குரங்கு மற்றும் பறவை வகைகளை பார்த்து ரசிக்கலாம். குழந்தைகளுக்கான ஒரு குட்டி ரயில் சேவையும் இங்கு இயக்கப்படுகிறது. ஊஞ்சல்கள், பூங்கா அமைப்புகள் போன்றவையும் இந்த ஏரிக்கரையில் காணப்படுகின்றன. பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமல்லாமல் விதவிதமான பறவைகள் காணப்படும் இடமாகவும் இந்த ஏரி விளங்குகிறது. மேலும் இந்த ஏரியில் பெயரிலேயே உள்ள ஒரு ரிசார்ட் விடுதியும் இதனை ஒட்டி அமைந்துள்ளது. இதில் பார், ரெஸ்ட்டாரெண்ட் மற்றும் கடைகள் போன்றவை உள்ளன. இரவு நேரத்தை இப்பகுதியில் கழிக்க விரும்பும் பயணிகளுக்கான தங்கும் அறைகள் இந்த விடுதியில் கிடைக்கின்றன.
Michael
கொக்கார் கோட்டை
கொக்கார் அல்லது கொக்கால் எனப்படும் வம்சத்தினர் ஜாட் இனத்தாரின் ஒரு பிரிவினராவர் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இந்த பிரிவினர் வசிக்கின்றனர். இந்த கொல்க்கார் இனத்தார் முஸ்லிம் சமூகத்திலும் ஒரு அங்கமாக இடம் பெற்றுள்ளனர். பக்ஷி, மாலிக், ஜுனேஜா, கக்கார் மற்றும் பண்டிட் வகுப்பினரைப்போல இவர்களும் இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பிரிவினராக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வாழ்ந்து வருகின்றனர். கொக்கார் இனத்தாரை பொறுத்தவரை பாகிஸ்தான் மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானிலும் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொக்கார் ஜாட் வம்சத்தாரின் ஆதி தலைமுறையானது நாகவன்ஷி கார்கோடகா என்பவரிலிருந்து துவங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த கொக்கார் இனத்தார் ரயா, மதுரா மற்றும் சிந்து பகுதியை ஆண்டு வந்துள்ளனர்.
Amrahsnihcas
சிதிலமடைந்த கோட்டை
சீக்கிய குரு ஹர்ஹோபிந்த் சிங் அவர்களின் தீவிர சிஷ்யரான பாய் ரூப் சந்த் இந்த கொக்கார் இனத்தை சேர்ந்தவராவார். இந்த கொக்கார் இனத்தாரால் கட்டப்பட்ட கொக்கார் கோட்டை ஹரியானா மாவட்டத்தில் ரோஹ்தக் நகரத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கம்பீரமான தோற்றத்துடன் உறுதியாக அமைந்திருந்த இது தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.
Amrahsnihcas
ராதா கிருஷ்ணன் கோவில்
வட இந்தியாவின் எல்லா நகரங்களிலுமே தவறாமல் இந்த ராதா கிருஷ்ணன் ராதா கிருஷ்ணன் கோவில் அமைந்திருக்கிறது. ஜாட் இனத்தார் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மேஹம் நகரத்திலும் ஒரு பிரசித்தமான ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் 6 மற்றும் 8 வது வார்டு பகுதியில் சிந்தலா மொஹல்லா எனும் இடத்தில் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலின் கருவறையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் சிலை அரிதான ஒருவகை கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. இமாலயத்தில் மட்டுமே இந்த வகைக் கல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Archit Ratan