எந்த ஒரு சராசரி இந்தியக்குடிமகனின் உள்ளத்திலும் தேசிய உணர்வை தூண்டும் விதமாக இந்த ஜாலியன் வாலா பாக் நினைவு ஸ்தலம் மௌனமாக வீற்றிருக்கிறது.
1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் நாள் அமைதியான முறையில் நடைபெறவிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்த வளாகத்தில் கூடியிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு ஜெனரல் டயர் எனும் ஆங்கிலேய ராணுவத்தளபதி உத்தரவிட்டார்.
ஆங்கிலேய காலனிய ஆட்சியிலேயே அப்படி ஒரு மூர்க்கத்தனமான சம்பவம் வேறெங்கும் நடந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு, மைதானத்தின் மூடப்பட்ட வாசல்களுக்கு நடுவே சிக்கிக்கொண்ட மக்கள் மீது துப்பாக்கிக்குண்டுகள் சரமாரியாக பொழியப்பட்டன. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் இதில் மரணமடைந்தனர்.
ஆறரை ஏக்கர் பரப்புள்ள இந்த தோட்டப்பூங்கா வளாகத்தின் சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த அடையாளங்களையும் சேதங்களையும் இன்றும் பார்வையாளர்கள் காண முடியும்.
அந்த சம்பவத்தின்போது துப்பாக்கி குண்டுகளிலிருந்து தப்பிப்பதற்காக பலர் இந்த மைதான மூலையில் இருந்த கிணற்றில் விழுந்து உயிர்விட்டனர். அந்த கிணற்றையும்கூட இன்றும் இந்த பூங்கா வளாகத்தில் பார்வையாளர்கள் பார்க்கலாம்.
எப்படி செல்லலாம்?
அம்ரித்ஸர் நகரத்திலுள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ்ஜி சர்வதேச விமான நிலையம் மூலமாகவோ அல்லது அம்ரித்ஸர் நகர ரயில் நிலையம் வழியாகவோ பயணிகள் ஜாலியன் வாலா பாக் ஸ்தலத்திற்கு வரலாம்.
பிரசித்தமான அம்ரித்ஸர் தங்கக்கோயிலுக்கு மிக அருகிலேயே இது அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. பேருந்துகள், ஆட்டோ, டாக்சி, சைக்கிள் ரிக்ஷா போன்ற வாகனங்கள் மூலம் பயணிகள் இந்த பூங்கா வளாகத்தை வந்தடையலாம்.
பருவநிலை எப்படி தெரியுமா?
ஜாலியன் வாலா பாக் கடுமையான கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்தை கொண்டுள்ளது. மழைக்காலத்தில் இங்கு மிதமான வெப்பநிலை நிலவுகிறது.
சுற்றுலாவுக்கு ஏற்ற பருவம்
வருடம் முழுக்கவே இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம் என்றாலும், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் குளுமையான சூழலுடன் காணப்படுகிறது.