வடமேற்கு இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான ‘அம்ரித்ஸர்’ சீக்கிய இனத்தாரின் ஆன்மீக தலைமைப்பீடமாகவும் மதிக்கப்படுகிறது. இங்குள்ள அம்ரித் சரோவர் எனும் தீர்த்தக்குளத்தின் பெயரில்தான் இந்த நகரமும் அழைக்கப்படுகிறது.
நான்காவது சீக்கிய குருவான குரு ராம்தாஸ்ஜி என்பவர் இந்நகரத்தை 16ம் நூற்றாண்டில் ஸ்தாபித்துள்ளார். அவரை அடுத்து வந்த குரு அர்ஜன் தேவ் 1601ம் ஆண்டில் இந்த கோயில் ஸ்தலத்தை ஒரு நகர அமைப்பாக விரிவுபடுத்தி, பிரம்மாண்டமான கோயிலின் கட்டுமானத்தையும் முடித்து வைத்தார்.
1947-ம் ஆண்டில் நிகழ்ந்த இந்தியப்பிரிவினைக்கு முன்னர் பிரிக்கப்படாத பஞ்சாப் மாநிலத்தின் முக்கியமான வியாபார கேந்திரமாக இந்த அம்ரித்ஸர் நகரம் திகழ்ந்து வந்திருக்கிறது.
இருப்பினும் இந்தியப்பிரிவினையானது இந்த நகரத்தை பாகிஸ்தானை ஒட்டிய மேற்கு எல்லை நகரமாக மாற்றிவிட்டது. தற்போது இந்த நகரத்தின் வியாபார செயல்பாடுகள் குறுகி, தரைவிரிப்புகள், துணிவகைகள், கைவினைப்பொருட்கள், விவசாய விளைபொருட்கள், வியாபார சேவைகள், பொறியியல் கருவிகள், சுற்றுலா முக்கியத்துவம் போன்ற அம்சங்களோடு மட்டுமே தொடர்புடைய நகரமாக மாறிவிட்டது.
அம்ரித்ஸர் நகரை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்கள்!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல குருத்வாரா கோயில்கள் இந்த அம்ரித்ஸர் நகரில் அமைந்துள்ளன. இவற்றில் முக்கியமானதாக தங்கக்கோயில் என்று அழைக்கப்படும் ‘ஹர்மந்திர் சாஹிப்’ கோயிலை குறிப்பிடலாம்.
சீக்கிய மதத்தினர் மத்தியில் புனிதமான வழிபாட்டுத்தலமாகவும் தலைமைப்பீடமாகவும் கருதப்படும் இந்த கோயில் தினமும் 10000 யாத்ரீக பக்தர்களை உலகெங்கிலிருந்தும் ஈர்க்கிறது.
கால்சா எனப்படும் மத அமைப்பின் தலைமைக்கேந்திரமாக கருதப்படும் ஷீ அகால் தக்த் இந்த கோயில் வளாகத்தின் உள்ளேயே அமைந்திருக்கிறது. தங்கக்கோயில் மட்டுமல்லாமல் அம்ரித்ஸர் நகரில் பிபேக்சர் சாஹிப், பாபா அதல் சாஹீப், ராம்சர் சாஹிப் மற்றும் சந்தோக்ஸர் சாஹீப் போன்ற கோயில்களும் அமைந்திருக்கின்றன.
சீக்கியர்களுக்கான யாத்ரீக ஸ்தலமாக மட்டுமன்றி அம்ரித்ஸர் நகரம் முக்கியமான வரலாற்று பின்னணி வாய்க்கப்பட்ட பூமியாகவும் அறியப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் ‘ஜாலியன் வாலா பாக்’ படுகொலை எனும் துக்க நிகழ்வு 1919ம் ஆண்டில் இப்பகுதியில் நிகழ்ந்தது.
இந்த சோகச்சம்பவத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் ஜாலியன் வாலா பாக் பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய சீக்கியர்களின் வரலாற்றுக்கு சான்றாக மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம், கைர் உத்தின் மஸ்ஜித், பதிண்டா கோட்டை, சரகர்ஹி நினைவுச்சின்னம் மற்றும் கோபிந்த்கர் கோட்டை ஆகியவை அமைந்துள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான ராணுவ எல்லைக்கேந்திரமான வாகா பார்டர் எனும் இடம் அம்ரித்ஸர் நகருக்கு வரும் பயணிகளால் தவறாமல் விஜயம் செய்யப்படுகிறது.
இங்கு நடத்தப்படும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களால் வெகுவாக ரசிக்கப்படுகின்றன. ஹிந்து யாத்ரீகர்களுக்கான சில முக்கியமான கோயில்களும் அம்ரித்ஸர் நகரில் அமைந்திருக்கின்றன.
துர்கியானா கோயில், மந்திர் மாதா லால் தேவி, இஸ்க்கான் கோயில், ஹனுமான் மந்திர் மற்றும் ராம் திரத் கோயில் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. கைசர் பாக், ராம்பாக், கல்சா கல்லூரி, குரு நானக் பல்கலைக்கழகம், தர்ன் தரன் மற்றும் புல் கஞ்சாரி போன்றவை அம்ரித்ஸர் நகரிலுள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.
எப்படி செல்வது அம்ரித்ஸர் நகருக்கு?
பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரமாக விளங்கும் அம்ரித்ஸர் நகரம் குறைவில்லாத போக்குவரத்து வசதிகளை கொண்டிருக்கிறது. விமான மார்க்கம், ரயில் மார்க்கம் அல்லது சாலை மார்க்கமாக இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் இந்த நகரத்துக்கு சுலபமாக பயணம் மேற்கொள்ளலாம்.
ஸ்ரீ குரு ராம்தாஸ்ஜி சர்வதேச விமான நிலையம் இந்நகரத்தில் உள்ளது. இங்குள்ள ரயில் நிலையமும் பல்வேறு நகரங்களுக்கான ரயில் சேவை இணைப்புகளை கொண்டுள்ளது.
NH1 தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் சாலைப்போக்குவரத்து மற்றும் பேருந்து சேவைகள் மூலம் இந்த நகரத்துக்கு செல்வதும் எளிதாக உள்ளது.
அம்ரித்ஸர் நகருக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்ற பருவம்
அம்ரித்ஸர் நகரின் பருவ நிலையானது இந்தியாவின் வடமேற்கு பிரதேசத்துக்கே உரிய இயல்புகளை கொண்டுள்ளது. கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகிய மூன்று முக்கிய பருவங்களை இப்பகுதி பெற்றிருக்கிறது.
வருடத்தின் எல்லா நாட்களிலும் இந்நகருக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்றாலும், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் சுற்றுலாப்பயணத்துக்கு உகந்தவையாக உள்ளன.