பஞ்சாப் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்றான இந்த தர்ன் தரன் மாவட்டம் அம்ரித்ஸர் நகரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகரமாக தர்ன் தரன் சாஹிப் விளங்குகிறது.
இது 5வது சீக்கிய குருவான குரு அர்ஜன் தேவ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட நகரமாகும். சீக்கிய மக்களின் புனித ஸ்தலமாக விளங்கும் இந்த தர்ன் தரன் சாஹிப் பல முக்கியமான குருத்வாராக்கள் மற்றும் வரலாற்று சின்னங்களை கொண்டுள்ளது.
இவற்றில் தர்பார் சாஹிப் ஷீ அர்ஜன் தேவ்ஜி குருத்வாரா குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதன் தீர்த்தக்குளமான தர்ன் தரன் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த உலகிலேயே மிகப்பெரிய குளமாக புகழ்பெற்றுள்ள தீர்த்தக்குளத்தின் பெயராலேயே இந்நகரமும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ அர்ஜன் தேவ்ஜி அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட தர்பார் சாஹிப் குருத்வாரா மூன்று அடுக்கு கொண்ட கோயில் அமைப்பாக காட்சியளிக்கிறது. தர்ன் தரன் சரோவர் தீர்த்தக்குளத்தின் தென்கிழக்கு மூலையில் இது அமைந்துள்ளது.
அற்புதமான தோற்றத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த அமைப்பின் மேற்பகுதியில் தங்கத்தகடு வேயப்பட்ட குமிழ் கலச அமைப்பு காணப்படுகிறது.
சலவைக்கற்களால் ஒரு மேடை போன்ற பீட அடித்தளத்தின்மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்த குருத்வாராவிற்கு அலங்கார தோரண வாயில் ஒன்றின் மூலமாக உள்ளே செல்லலாம்.