வாகா பார்டர் என்று அழைக்கப்படும் இந்த ராணுவ எல்லை வாசற்பகுதி இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்ஸர் நகரத்தையும், பாகிஸ்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் லாகூர் நகரத்தையும் இணைக்கிறது.
இரண்டு நாடுகளையும் இணைக்கும் ஒரே ஒரு நெடுஞ்சாலையின் வாசற்பகுதியாக இந்த வாகா பார்டர் அமைந்துள்ளது. இந்த வாசற்பகுதியின் இருபுறத்திலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குரிய அலுவலக கட்டிடங்கள், சோதனைச்சாவடிகள், தடுப்பு அமைப்புகள் போன்றவற்றை இங்கு காணலாம்.
ஸ்வர்ணஜயந்தி என்று அழைக்கப்படும் இந்த எல்லை வாசலைச்சுற்றிலும் பசுமையான அழகான சூழல் காணப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் சடங்கு நிகழ்ச்சி போன்று இந்த எல்லை வாயிலில் நடத்தப்படும் ராணுவ காவல் அணிவகுப்பை காண்பதற்காகவே பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த ஸ்தலத்துக்கு ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.
அதாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ காவல் வீரர்கள் தினமும் மாலை நேரத்தில் முரசு மற்றும் ஊதுகுழல் கருவிகளின் பின்னணி இசையுடன் அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றை விரிவாக அரை மணி நேரத்துக்கு நடத்துகின்றனர்.
பார்வையாளர்களின் உற்சாக கையொலி மற்றும் வாத்திய ஒலிகளோடு உணர்ச்சிகரமான ஒரு அற்புதக்காட்சியாக இந்த அணிவகுப்பு சடங்கு தினமும் இரு நாட்டு ராணுவ வீர்களின் ஒத்திசைவோடு நடத்தப்படுகிறது.
இந்த காட்சியை ஒரு முறை நேரில் பார்க்கும் இரு நாட்டு குடிமக்களுக்கும் பரஸ்பர பகையுணர்வு மனதில் தோன்றவே தோன்றாது என்பதுதான் உண்மை.
பின் எங்கிருந்து முளைக்கிறது எல்லைப்பகை என்பது விந்தையிலும் விந்தை. தேசிய உணர்வு கொண்டவர்கள் அம்ரித்ஸர் நகரத்துக்கு வரும்போது தவறாமல் தரிசிக்க வேண்டிய ஒரு காட்சி இந்த வாகா பார்டர் ராணுவ அணிவகுப்பு.