கோபிந்த்கர் கோட்டை அல்லது பாங்கியான் டா கிலா என்று அழைக்கப்படும் இந்த புராதன கோட்டை அம்ரித்ஸர் நகரில் தவறாமல் தரிசிக்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும்.
குஜ்ஜார் சிங் பாங்கி என்பவரது படையினர் இந்த கோட்டையை கட்டியுள்ளனர். 1760ம் ஆண்டில் கற்கள் மற்றும் சுண்ணாம்புக்கலவை பயன்படுத்தி நான்கு கொத்தளங்களுடன் இந்த கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 1805-1809ம் ஆண்டுகளில் மஹாராஜா ரஞ்சித் சிங் இந்த கோட்டையை மறு கட்டுமானம் செய்துள்ளார்.
1849 ம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்த கோட்டையை கைப்பற்றி இதில் உள்ள தர்பார் ஹால், ஹவா மஹால் மற்றும் பான்சி கர் போன்ற இணைப்புகளை உருவாக்கினர். 1919ம் வருடத்தில் நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டையர் இந்த பான்சி கர் மாளிகையில்தான் வசித்துள்ளார்.
சுதந்திரத்திற்குப்பின் இந்த கோட்டை இந்திய ராணுவத்தினர் வசம் வந்தது. 1948ம் ஆண்டு பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்த அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க இது பயன்பட்டது.
இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கு மௌன சாட்சியாக இருந்த இந்த வரலாற்றுக்கோட்டை 2006ம் ஆண்டு பஞ்சாப் முதல் அமைச்சர் கேப்டன் அம்ரிந்தர் சிங் அவர்களால் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது.