தமிழ் கடவுளான முருகப்பெருமான் கடவுளாக மட்டுமல்ல, ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார். முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட கோயில்கள் உள்ளன, பிரபல முருகர் கோயில் என்றால் அனைவர்க்கும் ஆறுபடை வீடு மட்டும் தான் நியாபகத்திற்கு வரும். ஆனால், ஆறுபடை வீடு கோயில்களுக்கு இணையான, சக்தி வாய்ந்த, நீங்கள் செல்ல வேண்டிய முக்கிய கோயில்களின் பட்டியலை இதோ உங்களுக்காக கொடுத்துள்ளோம்!
சண்முகநாதர் முருகர் கோயில், குன்றக்குடி
ஆறுபடை வீடுகளுக்கு அப்பால் நீங்கள் தரிசிக்க வேண்டிய கோயில் குன்றக்குடி முருகன் கோயில் ஆகும். குன்றக்குடி சண்முகநாதர் கோவில், சில நூறு படிகள் கொண்ட 56 மீட்டர் உயரம் கொண்ட சிறிய மலைக்கோயில் ஆகும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்றக்குடி திருத்தலம்.குமரனின் அருள் பெற்ற இத்திருத்தலம், பிரார்த்தனை தலங்களில் முதன்மையானது. இக்கோவிலின் சிறப்பே இறைவன் சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த மலையே,மயில் உருவம் போன்று காட்சியளிப்பது தான்.

சுப்ரமணியசுவாமி கோயில், வல்லக்கோட்டை
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வல்லக்கோட்டை திருத்தலம் முருகப்பெருமனுக்கான மற்றுமொரு பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலில் உள்ள முருகப்பெருமான் ஆஜானுபாகுவாக 7 அடி உயரத்தில் நமக்கு காட்சியளிக்கிறார். பல்லவர்களின் ஆட்சியின் போது கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த கோயில் வரலாற்றில் மூழ்கியுள்ளது, பின்னர் சோழ மற்றும் விஜயநகர வம்சங்களால் மேம்படுத்தப்பட்டது. குறிப்பாக ஸ்கந்த சஷ்டி மற்றும் தை பூசம் போன்ற பண்டிகைகளின் போது இந்த கோவில், ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.

பாலமுருகன் கோயில், இரத்தினகிரி
எங்கெல்லாம் குன்றுகள் உள்ளதோ அங்கெல்லாம் முருகன் கோயில் இருக்கும் என இந்து வேதங்கள் கூறுகின்றன. வேலூர் மாவட்டம் திருமணிக்குன்றம் அருகே உள்ளது ரத்தினகிரி பாலமுருகன் கோயில். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பழமையான கோவிலாகும். இக்கோவில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ரத்னகிரி பாலமுருகன் கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது. 14 ஆம் நூற்றாண்டின் கவிஞர் அருணகிரிநாதர் இக்கோயிலைப் பற்றி ரத்தினகிரி வாழ் முருகனே இளைய வாரமரர் பெருமாளே என்று பாடியுள்ளார் , அதாவது 'தேவர்களின் கடவுளான முருகன் ரத்தினகிரியில் வீற்றிருக்கிறார்' என்று அர்த்தம்

சுப்ரமணியசுவாமி கோயில், வயலூர்
திருச்சியில் இருந்து மேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது வயலூர் முருகன் கோயில். அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் கம்பத்து இளையவராக தடுத்தாட்கொண்ட முருகப் பெருமான் முதன்புதலில் வயலூருக்குத்தான் வரச்சொல்லி உத்தரவிட்டார். அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு 18 பாடல்கள் புனைந்த பெருமை கொண்ட தலம் இது. இங்கிருந்தே திருப்புகழ் எனும் பெரும் பொக்கிஷம் உருவானது என்பதும் இவ்வாலய பெருமைகளில் ஒன்று.
கந்தசுவாமி கோயில், திருப்போரூர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது திருப்போரூர் திருத்தலம். ஆனால் சென்னைக்கு அருகில் உள்ளது இந்தக் கோயில். சுமார் 700 வருடப் பழைமையான ஆலயம் எனும் பெருமை மிக்க திருத்தலம் ஆகும். அருணகிரிநாதர் இந்தத் தலத்துக்கு வந்து, முருகப்பெருமானைத் தரிசித்து திருப்புகழ் பாடியிருக்கிறார். சிதம்பரசுவாமிகளும் வந்து முருகக் கடவுளைத் தரிசித்திருக்கிறார். தந்தை ஈசனைப் போலவே இங்கே சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர் கந்தபெருமான் என்கிறது ஸ்தல புராணம். எனவே, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் இல்லை. மாறாக, ஸ்ரீசுப்ரமண்யர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்த்ரத்துக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
சுப்பிரமணியசுவாமி கோயில், மைலம்
திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலும், பாண்டிச்சேரியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இந்த பிரபலமான மைலம் முருகன் கோயில். கோபுரமானது, மயிலின் கொண்டாய் போலவே காட்சியளிக்கிறது. முருகப் பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபத்மன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி, மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்தார். அப்போது ''என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என முருகனிடம் சூரபத்மன் வேண்டினான்.

சிங்காரவேலர் கோயில், சிக்கல்
சிக்கல் சிங்கார வேலன் ஆலயம் முருக பெருமான் திருக்கோவில்களில் மிக முக்கியமானது. காரணம் ஆறுபடை வீடிற்கு அடுத்தபடியாக, ஏழாவது படை வீடாய் இருக்கும் அளவு முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாகும். இந்த பிரசித்தி பெற்ற கோயில் நாகப்பட்டினம் மாவாட்டத்தில் உள்ள சிக்கல் எனும் ஊரில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழாவில் கந்தர் வேல் சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்னர் வேல் வாங்கும் போது, இங்குள்ள முருகப்பெருமானுக்கு வியர்க்கிறது, இந்த அதிசயத்தக்க நிகழ்வை பக்தர்கள் நேரில் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications





