சென்னையை பூர்வீகமாக கொண்ட பலரும் சென்னையின் டபுள் டெக்கர் பேருந்துகளில் கட்டாயம் பயணம் செய்திருப்பார்கள். பல மகிழ்ச்சியான நினைவுகளை உங்களுக்கு வழங்கிய சென்னையின் டபுள் டெக்கர் பேருந்துகள் இப்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது!
அந்த கால நினைவுகளை பகிரும் டபுள் டெக்கர் பேருந்துகள்
டபுள் டெக்கர் பேருந்துகள் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய முக்கிய நன்மையைத் தவிர, இந்த பயணிகள் பாதையில் உயரமான கட்டிடங்களைக் கண்டு ரசிப்பதற்கும் வழிவகுக்கும். காதலன் திரைப்படத்தில் வரும் 'ஊர்வசி ஊர்வசி' பாடலிலும் கூட சென்னையில் அப்போது ஓடிக் கொண்டிருந்த டபுள் டெக்கர் பேருந்துகளை காணலாம்.

சென்னை உயர்நீதிமன்றம் to தாம்பரம் வரை டபுள் டெக்கர் சேவை
1975 ஆம் ஆண்டு முதன் முதலாக சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. 1980களில் இரட்டை அடுக்குப் பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்ட பிறகு, 1997 ஆம் ஆண்டு மீண்டும் நகரத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. 1997 முதல் 2008 வரை 18 ஏ வழித்தடங்களில், அதாவது சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து தாம்பரம் வரை டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன.
2008 ஆம் ஆண்டில் முழுவதுமாக நிறுத்தம்
பேருந்துகளில் ஏறும் போது மற்றும் இறங்கும் போது பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியமே டபுள் டெக்கர் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று சிலர் கூறுகின்றனர். மூத்த குடிமக்கள் பேருந்தை அணுகுவதில் சிரமப்பட்டனர் என்றும் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் சென்னை மெட்ரோ மாநகரில் அதிக அளவில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதால், 2008ல் இந்த இரட்டை அடுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

டபுள் டெக்கர் பேருந்து சேவையை தொடங்க முயற்சி
இதையடுத்து, டிரெய்லர் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டன. இருப்பினும், குறுகிய பாதைகளிலும் சாலைகளிலும் அவற்றை ஓட்டுவது கடினமாக இருந்ததால், இந்த டிரெய்லர் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், சென்னை மெட்ரோ நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இப்போது எழுந்துள்ளது.
MTCயுடன் கை கோர்த்த BEST
பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) பிரஹன்மும்பை மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தால் (BEST) இயக்கப்படும் புதிய குளிரூட்டப்பட்ட டபுள் டெக்கர் பேருந்துகளைப் போல, டபுள் டெக்கர் பேருந்துகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தது.
வெற்றிகரமான சோதனை ஓட்டம்
அதன்படி பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு இப்போது இரட்டை அடுக்கு பேருந்துகள் விரைவில் சென்னை சாலைகளில் மீண்டும் இயக்கப்படும் நிலையில் உள்ளன. சென்னையில் முன்மொழியப்பட்ட குளிரூட்டப்பட்ட 'டபுள் டெக்கர்' மின்சார பேருந்துகளின் சோதனை ஓட்டம் சமீபத்தில் மெரீனா கடற்கரையில் நடத்தப்பட்டது.
சென்னை மாநகரில் விரைவில் டபுள் டெக்கர் பேருந்துகள்
சில வழித்தடங்களில் இரட்டை அடுக்கு பேருந்து சேவைகளை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோவில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் இந்த இரட்டை அடுக்கு பேருந்து சேவையை அறிமுகப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. அனைத்து பணிகளும் முடிந்தவுடன், விரைவில் சென்னையின் சாலைகளில் டபுள் டெக்கர் பேருந்துகள் செல்வதை நீங்கள் காணலாம்.
சென்னையின் டபுள் டெக்கர் பேருந்துகளில் நீங்கள் எப்போதாவது பயணம் செய்தது உண்டா?



Click it and Unblock the Notifications





