ஆடி மாதம் என்றாலே தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் உள்ள கோவில்களும் கூட விழாக்கோலத்தில் காட்சியளிக்கும். 'கோவில்களின் மாநிலம்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான அம்மன் கோவில்கள் உள்ளன. குறிப்பாக ஆடி மாதத்தில் கீழ்க்கண்ட கோவில்களுக்கு சென்றால் அம்பிகையின் ஆசீர்வாதத்தையும், புண்ணியத்தையும் பெறலாம்!

மதுரை மீனாட்சியம்மன் கோவில்
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் இந்தியாவில் உள்ள மிக முக்கிய கோவில்களில் ஒன்றாகும். இங்கு சிவபெருமான் சுந்தரேஸ்வரர் வடிவிலும், பார்வதி தேவி மீனாட்சி வடிவிலும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். இந்த கோவில் வளாகத்தில் பிரதான தெய்வங்களுக்கான இரண்டு தங்க கோபுரங்கள் உட்பட 14 அற்புதமான கோபுரங்கள் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம் முதல் தங்கத்தாமரை குளம் வரை, மீனாட்சியம்மன் கோவில் நம்மை பிரமிக்க வைக்கிறது. மீனாட்சியம்மன் கோயில் நேர்த்தியான கட்டிடக்கலையுடன் கம்பீரமான அழகை வெளிப்படுத்துவதால் முழுமையாக சுற்றிப் பார்க்க நமக்கு ஒரு நாள் ஆகும்.

சமயபுரம் மாரியம்மன் கோவில்
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் திருச்சி மாநகரின் முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகும். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் அல்லது திருமணத்தில் தடைகள் உள்ளவர்கள் அம்மனுக்கு தங்க மங்களசூத்திரத்தை சமர்பிப்பார்கள். மேலும், பக்தர்கள் தங்கள் நோய் மற்றும் வலிகளில் இருந்து நிவாரணம் பெற உடல் உறுப்புகள் கொண்ட வெள்ளி சிலைகளும் உண்டியலில் போட்டு வழிபடுகின்றனர். ஆடி மாசத்தில் இக்கோவில் மிகவும் விசேஷமாக இருப்பதால், பக்தர்கள் கூட்டம் அலை மோதும். இந்த விசேஷமான நாட்களில் சமயபுரத்திற்கு சென்று அம்பாளின் ஆசியைப் பெற்று வாருங்கள்.

காஞ்சி காமாட்சி கோவில்
51 சக்திபீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி கோவில், இந்தியாவின் பிரதான கோவில்களில் ஒன்றாக இருப்பதுடன் அதிகப்படியான வெளிநாட்டினறையும் ஈர்க்கிறது. சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஆதி சங்கராச்சாரியார் ஸ்ரீசக்கரத்தை வடிவமைத்து பிரதிர்ஷ்டை செய்தார். கருவறையில் அம்பிகை பத்மாசன கோலத்தில் கரும்பு வில்லும், புஷ்ப பாணமும் கொண்டு எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்மனை வழிபட்டால், அனைத்து ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில்
ஓம்சக்தி கோவில் என்றும் மருவத்தூர் அம்மன் கோவில் என்றும் அழைக்கப்படும் இந்த ஆதிபராசக்தி கோவில் சென்னையில் இருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போல அல்லாமல், இந்த கோவிலில் பெண்களே பூஜை செய்யலாம். ஆடிபூரத்தின் போது இங்கு அங்கபிரதட்சணம் செய்ய ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கூடுகின்றனர். சுயம்பு வடிவில் இருக்கும் அம்மனை ஆடி வெள்ளிக்கிழமைகளில் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில்
ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் என்றும் அழைக்கப்படும் அருள்மிகு மாசாணி அம்மன் கோயில் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில் தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த அம்மன் கோவில்களில் ஒன்றாகும். நான்கு கைகளுடன் மண்டை ஓடு, பாம்பு, மேளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தியவாறு 17 அடி உயரத்தில் படுத்த நிலையில் காட்சியளிக்கிறார். பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் நலன்புரி அரசாகவும், மக்களின் உடல் உபாதைகளைச் சரிசெய்யும் மருத்துவ மருந்தகமாகவும், ஆண்கள் மற்றும் பெண்களின் துன்பங்களைத் தீர்க்கும் நீதி மன்றமாகவும் இக்கோவில் திகழ்கிறது.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து 21 கிமீ தொலைவில் அமைந்துள்ள மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம், தேவி அங்காளம்மனுக்கு அர்பணிக்கப்பட்ட ஆலயமாகும். நான்கு திருக்கரங்களுடன், இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்ட யோக வடிவில், பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி எழுந்தருளி காத்து வருகிறாள் அங்காளி. ஒவ்வொரு பௌர்ணமியும் இங்கு படு விசேஷமாக இருக்கும். எங்கு எங்கிருந்தோ மக்கள் இங்கு வந்து பௌர்ணமி அன்று அமபாளை தரிசித்துவிட்டு செல்வார்கள். குறிப்பாக ஆடி மாதத்தில் மேல்மலையனூர் எல்லைக்குள் கூட நுழைய முடியாது, இக்கோவிலில் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகளும் புனஸ்காரங்களும் நடைபெறுகின்றன.

கன்னியாகுமரி குமரி அம்மன் கோவில்
இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் சங்கமமான கன்னியாகுமரி கடற்கரையில் குமரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. 8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் விஜயநகர, நாயக்க, சோழ மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது. குமரி அம்மன் கோவில் வளாகம் பார்ப்பதற்கு ஒரு அதிசயம் மட்டுமல்ல, உங்கள் ஆன்மாவிற்கு புத்துணர்ச்சியி அளிக்கிறது.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்
சென்னைக்கு அருகில் உள்ள பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் கோயில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. கோயிலின் பிரதான தெய்வமான பவானி அம்மனை தரிசிக்க, வார இறுதி நாட்களிலும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருவார்கள். சென்னையிலிருந்து சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் ரெட் ஹில்ஸ் அருகே 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள பெரியபாளையத்தை மக்கள் அடையலாம். ஆண்டு முழுவதும் பரபரப்பாக இருக்கும் இந்த கோவிலுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று வழிபடுகின்றனர்.
இந்த சிறப்பு வாய்ந்த அம்மன் கோவில்களில் நீங்கள் எந்த கோவிலுக்கு செல்லப் போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications





