தீமைக்கு எதிரான நன்மைக்கு கிடைக்கும் வெற்றியின் அடையாளமாக நவராத்திரி திருவிழா நாடெங்கிலும் வெகு விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது. அதிலும் மைசூர் தசரா அதன் 10 நாள் திருவிழாவிற்கு மிகவும் பிரபலம். இந்த ஆடம்பரமான கொண்டாட்டங்களில் முழு நகரமும் கோலாகலமாக பங்கேற்கிறது.
நவராத்திரி முதல் நாளில் தொடங்கும் இவ்விழா விஜயதசமி அன்று முடிவடையும் வருடாந்திர நிகழ்வாகும். பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் இதில் இடம் பெறுவதால் இது பெரும்பாலும் அரச விழா என்று அழைக்கப்படுகிறது.
நடனம், இசை, கண்காட்சிகள், வண்ண விளக்குகள், தோரணங்கள் என மைசூர் நகரமே ஜொலிப்பதைக் காண நாடெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் மைசூர் நோக்கி படையெடுக்கிறார்கள்! அதனைப் பற்றி மேலும் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை இதோ

மைசூர் தசரா வரலாறு
இந்த விழாவின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது தொடங்குகிறது. இந்து நம்பிக்கைகளின்படி, சாமுண்டா மலையின் சாமுண்டேஸ்வரி தேவி மகிசாசுரனை (காளை தலையுடைய அசுரன்) தோற்கடித்ததாகக் கூறப்படுகிறது. மகிசாசுரனை வதம் செய்ததால் அந்த நகரத்திற்கு மைசூரு என்று பெயர் வந்தது.
தீமை அழிந்து நன்மை பிறந்ததன் காரணமாக, மக்கள் பல நூற்றாண்டுகளாக இந்த தசரா திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

மைசூர் தசரா 2022
மைசூரில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் திருவிழாவான மைசூர் தசரா இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இப்போது மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு, செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய மைசூர் தசரா அக்டோபர் 5 ஆம் தேதி நிறைவடைகிறது. இறுதி நாளான பத்தாம் நாளில் மைசூர் அரண்மனையில் இருந்து ஜம்போ சவாரி ஊர்வலம் தொடங்கி பன்னிமண்டபத்தில் நிறைவடைகிறது.

மைசூர் தசரா விழா நடைபெறும் இடம்
ஜம்போ சஃபாரி ஊர்வலம் மைசூர் அரண்மனையில் தொடங்கி ஆல்பர்ட் சாலையில் சென்று அங்கிருந்து சயாஜி ராவ் சாலையை அடைகிறது. இங்கிருந்து, அணிவகுப்பு மூங்கில் பஜார் மற்றும் நெடுஞ்சாலை வட்டம் வழியாக நகர்ந்து பன்னிமண்டப் மைதானத்தின் இறுதிப் புள்ளியை அடைகிறது.
இது தவிர, மைசூர் அரண்மனைக்கு எதிரே உள்ள மைதானத்தில் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

மைசூர் தசரா டிக்கெட்டுகள்
பெரும்பாலான மைசூர் தசரா நிகழ்வுகள் பார்வையாளர்களுக்கு இலவசம் என்றாலும், மிக முக்கியமான நிகழ்வான "டார்ச்லைட் பரேட்" க்கு டிக்கெட் கட்டாயம் தேவை.
பார்வையாளர்கள் ஒரு விஐபி கோல்டன் கார்டை பெற்றால் அழகாக அனைத்தையும் கண்டு களிக்கலாம். இது அணிவகுப்பு மட்டுமின்றி சிறப்பு சலுகைகள் மற்றும் தனி இருக்கைகளுக்கான அணுகலை உத்தரவாதம் செய்கிறது. இந்த விஐபி கோல்டன் கார்டின் விலை ஒரு நபருக்கு சுமார் ரூ. 4000 ஆகும்.

மைசூர் தசரா கொண்டாட்டங்கள்
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 10 நாட்கள் முழுவதும், மைசூர் அரண்மனை 100,000 மின் விளக்குகளால் ஒளிரும். இந்த 10 நாட்களில், கர்நாடகாவின் பல கலாச்சார மற்றும் மத நிகழ்ச்சிகள் மைசூர் அரண்மனையில் நிகழ்த்தப்படுகின்றன.
இறுதி நாளில், ஜம்போ சவாரி என்று அழைக்கப்படும் யானை ஊர்வலம் மின்னுகின்ற அரண்மனையிலிருந்து பன்னிமண்டப் வரை செல்கிறது. இந்த ஊர்வலத்தில் பெரிய இசைக்குழுக்கள், நடனக் குழுக்கள், ஆயுதப் படைகள் ஆகியவை பங்கேற்கின்றன. யானையின் மீது தங்க ஆசனத்தின் மேல் இருக்கும் தேவியின் சிலையைக் காண மக்கள் கூட்டம் அலை மோதும்.ஊர்வலத்திற்குப் பிறகு, பஞ்சின கவைதா என்றும் அழைக்கப்படும் தீப ஒளி அணிவகுப்பு நடைபெறும்.
ஊர்வலம் தவிர, 10 நாட்களில் சைக்கிள் ஓட்டுதல், பாரம்பரிய சுற்றுலா, யோகா, திரைப்பட விழாக்கள், புதையல் வேட்டை மற்றும் செல்லப்பிராணி நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பார்வையாளர்கள் சுவையான உணவுகளை ருசிப்பதற்காக பல உணவு ஸ்டால்களும் போடப்பட்டுள்ளன. அரச அரண்மனைக்கு எதிரே பல்வேறு கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன.
தசரா தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே மைசூர் நகரம் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு மின்னுகிறது. தங்களால் தசரா நேரத்தில் அங்கு செல்ல முடியவில்லை என்றாலும் அதற்கு பின்னர் அங்கு சென்று இந்த இடங்களைப் பார்வையிடலாம்.
இந்த 10 நாட்களில் மட்டுமே, மைசூர் அரண்மனையின் தர்பார் ஹாலில் உள்ள தங்க சிம்மாசனத்தை பார்வையாளர்கள் பார்க்க முடியும். ஆகவே இப்போதே திட்டமிடுங்கள்!



Click it and Unblock the Notifications





