நாகேஷ்வரா ஜோதிர்லிங்கா கோயில் துவாரகாவிலிருந்து பேட் துவாரகாவிற்கு செல்லும் வழியில் உள்ளது. உலகத்திலுள்ள 12 ஜோதிர்லிங்களில் ஒன்று இந்த கோயிலில் காணப்படுகிறது. புனித யாத்திரை ஸ்தலமாக மட்டுமல்லாமல் பிரசித்தமான சுற்றுலாத்தலமாகவும் இது ரசிக்கப்படுகிறது. இந்த கோயிலில் தரையடித்தளத்தில் கருவறை அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் ஒரு பெரிய சிவபெருமான் சிலையும் அழகிய நந்தவனமும் காணப்படுகின்றன.

கும்லி
பர்தா மலைகளின் அடிவாரத்தில் இந்த கும்லி எனும் சிறு கிராமம் அமைந்துள்ளது. இது 7ம் நூற்றாண்டில் ஜெத்வா சால் குமார் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரம் ஜெத்வா வம்சத்தாரின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது.
இங்கு குஜராத் மாநிலத்தின் சில அழகிய கோயிகள் அமைந்துள்ளன. இவற்றில் சோலங்கி வம்சத்தாரின் நவ்லோகா கோயில் பிரசித்தமாக விளங்குகிறது. இது குஜராத் மாநிலத்திலேயே பழமையான சூரியக்கோயிலாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.
விகாய் வாவ் எனும் படிக்கிணறு அமைப்பும் இங்கு உள்ளது. தற்போது இந்த வரலாற்று கிராமத்தை புதுப்பித்து பாதுகாக்கும் முயற்சிகள் குஜராத் மாநில அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
www.gujarattourism.com

கம்பட் வளைகுடா
கம்பட் வளைகுடாப்பகுதியில் உள்ள கடற்கரையில் சிவனுக்கான இந்த அழகிய கோப்நாத் மஹாதேவ் கோயில் அமைந்துள்ளது. இந்த கடற்கரையை ஒட்டியே சில தீவுப்பகுதிகளும் வரிசையாக காணப்படுவதால் அற்புதமான இயற்கை எழில் காட்சிகளுடன் இந்த பிரதேசம் ஒளிர்கிறது. பிரபல குஜராத்தி கவிஞரான நர்சிங் மேத்தா இந்த ஸ்தலத்தில்தான் ஞானத்தெளிவு பெற்றதாக சொல்லப்படுகிறது.
www.gujarattourism.com

கோமதி காட்
ஆன்மீக நகரமான துவாரகாவில் பல்வேறு ஆன்மீக ஸ்தலங்கள் புரிந்து கொள்ளமுடியாத புராணிக அம்சங்களைக்கொண்டவையாக வீற்றிருக்கின்றன. இவற்றில் சில அடுத்தடுத்து இந்த கோமதி காட் எனும் இடத்தில் அமைந்துள்ளன. இந்த உயரமான இடத்திலிருந்து நகரின் அழகையும் நன்றாக பார்த்து ரசிக்கலாம். கோமதி ஆற்றில் படகு சவாரியில் ஈடுபட்டும் மகிழலாம். இந்த கோமதி காட் ஆற்றுத்துறையில் சிவன் கோயில், கிருஷ்ணர் கோயில், ராமர் கோயில் மற்றும் கிருஷ்ணரின் நண்பரான சுதாமாவுக்கான கோயில் போன்றவற்றை தரிசிக்கலாம். காலங்காலமாக இந்த கோயில்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் முக்கியமாக விஜயம் செய்யும் கோயில்களாக பிரசித்தி பெற்று விளங்குகின்றன.
www.gujarattourism.com

மீராபாய்
ஆன்மீக பாடகியாகவும் தீவிர கிருஷ்ண பக்தையாகவும் விளங்கிய மீராபாய்க்கு இந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறிய கோயில் ஜகத் மந்திருக்கு அருகிலேயே மக்கள் குடியிருப்புப்பகுதியின் நடுவே அமைந்திருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் பகுதியில் வாழ்ந்த இந்த மீராபாய் ஒரு மன்னனுக்கு மணமுடிக்கப்பட்டதாகவும் ஆனால் தன்னை கிருஷ்ணபஹவானின் காதலியாக கருதி மீராபாய் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் வடஇந்தியா முழுவதும் மீராபாய் புனித யாத்திரை மேற்கொண்டதாகவும் இறுதியில் துவாரகா நகருக்கு வந்து சேர்ந்த இவர் இந்த ஸ்தலத்திலேயே துவாரகதீஷ் கோயிலில் உள்ள கிருஷ்ணர் சிலையோடு ஒன்றறக்கலந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

கச்சோரியு கோயில்
இந்த கச்சோரியு கோயில் ஸ்ரீ ராமருக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. சங்கு, சக்கரம் மற்றும் கருடனின் சிற்பங்கள் இந்த கோயிலில் காணப்படுகின்றன. வாசற்பகுதியில் ஹனுமான் சிலையும் காணப்படுகிறது. கச்சோரியு தலாவ் எனும் குளமும் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

லைட் ஹவுஸ்
துவாரகா நகரத்தில், அரபிக்கடல் கரையில் இந்த லைட் ஹவுஸ் வீற்றிருக்கிறது. இதன் உச்சியிலிருந்து துவாரகா நகரத்தின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம். தினமும் மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை இந்த கலங்கரை விளக்கத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலாப்பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் மத்தியில் பிரசித்தமாக விளங்கும் இந்த கலங்கரை விளக்கம் நகரச்சந்தடியிலிருந்து விலகியதாக அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது.
www.gujarattourism.com

ருக்மிணிதேவி கோயில்
துவாரகா கோயில் நகரத்தில் துவாரகதீஷ் கோயில் வளாகத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் இந்த ருக்மிணிதேவி கோயில் அமைந்துள்ளது. கஜதாரா எனப்படும் யானை உருவங்கள் மற்றும் நரதாரா எனப்படும் மனித உருவங்கள் போன்ற சிற்பப்பொறிப்புகள் இந்த ருக்மிணிதேவி கோயிலின் வெளிப்பகுதியின் காணப்படுகின்றன.
கிருஷ்ணரின் கோயிலிலிருந்து இந்த ருக்மிணிதேவி கோயில் விலகி காணப்படுவதன் பின்னணியில் ஒரு புராணிகக்கதையும் சொல்லப்படுகிறது. கிருஷ்ணரும் ருக்மணியும் ஒரு முறை துர்வாச முனிவரை தங்கள் இருப்பிடத்திற்கு வரவேற்க சென்றிருக்கின்றனர்.
அவர் தன்னை தேரில் இழுத்துச்சென்றால் வருவதாக கூறவே அவ்வண்ணமே கிருஷ்ணர் ருக்மணி தம்பதியர் அவரை அழைத்துவந்திருக்கின்றனர். வரும் வழியில் ருக்மணிக்கும் தாகம் எடுக்கவே கிருஷ்ணர் பூமியை தோண்டி கங்கை நீரை வரவழைத்து ருக்மணிக்கு கொடுத்துள்ளார்.
இந்த நீரில் சிறிது தனக்கு தராமல் முழுவதையும் ருக்மணியே குடித்துவிட்டதால் கோபம் கொண்ட துர்வாச முனிவர் கணவரிடமிருந்து பிரிந்திருக்கும்படி ருக்மணியை சபித்து விட்டதாக அந்த கதை கூறுகிறது. இப்படி கிருஷ்ணர் மற்றும் ருக்மணி கோயில்கள் விலகி தனித்தனியே இருப்பதற்கு இதுவே காரணம் என்பது ஐதீகம்



Click it and Unblock the Notifications





