ஒரு நாட்டினுடைய பண்பாடும், கலாசாரமும் உலக அளவில் பரவி விரய முக்கிய அங்கமாக இருப்பது அந்நாட்டின் உடைய கல்வியின் தரமும், மேம்பாடும் தான். கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால், உலகில் உள்ள வளர்ந்த நாடுகளுக்கே கல்வியில் முன்னோடி நம் இந்தியா என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா ?. எத்தனையோ அம்சங்களுக்காக பிற நாட்டினர் மத்தியில் கர்வத்துடன் கூறுவோம் நாங்கள் இந்தியர்கள் என்று, அடுத்த முறை இந்த விசயத்திற்காகவும் கூறுவோம், கல்வியுலும் நாங்கள் உங்களுக்கு முன்னோடி என்று... சரி வாருங்கள், இந்தியாவில் முதல் பல்கலைக் கழகம் எது ? எங்கே உள்ளது ?அதன் வரலாற்றை தேடிச் செல்வோம்.
பீகார்
புத்தரே ஞானோதயம் பெற்ற இடமாகக் கருதப்படும் இடம் தான் பீகார் மாநிலம். இம்மாநிலத்தில் அருவிகள், ஏரிகள், ராட்சீலா மலை, குப்தா பீக் என ஏராளமான இயற்கை எழில் அம்சங்கள் நிறைந்துள்ளன. இவையனைத்தையும் கடந்து புராதன காலத்தில்இருந்தே பீகார் மாநிலம் அரசியல், கல்வி, நாகரிகம் என அனைத்திலும் தலைசிறந்து விளங்கியுள்ளது இதன் கூடுதல் சிறப்பாகும்.
5 ஆம் நூற்றாண்டின் அறிவக் கலஞ்சியம்
பீகார் மாநிலத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் அனைத்திற்கும் மேலான ஒன்று நாலந்தா பல்கலைக் கழகம். 5-ம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட இந்தக் கல்வி நிலையம்தான் நம் நாட்டின் புகழை உலகெங்கிலும் பரவச் செய்தது. உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் இந்தக் கல்வி நிலையத்தால் பயணடைந்துள்ளனர் என்றால் மிகையாகாது.
முதல் பல்கலைக் கழகம்
கி.பி. 427-ம் ஆண்டில் குப்த பேரரசரான குமாரகுப்தரால் கட்டப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் தான் இந்தியாவின் முதல் பல்கலைக் கழகம் என்பது மட்டுமின்றி மாணவர்கள் தங்கி, படிக்கும் வசதியைக் கொண்ட பல்கலைக் கழகம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளந்தா பல்கலைக்கழகம். கல்விமுறையில் எத்தனையோ தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டாலும் பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் செயல்பட்டு வருவது பெருமையின் உச்சம்.
தகர்க்கப்பட்ட கல்வி நிலையம்
ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அந்நாட்டின் வளர்ச்சிக்கு உதவும், அடையாளங்களாக இருக்கும் கல்வியையும், ஒற்றுமையையும் அழிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு போல் மூன்று முறை படையெடுப்புகளால் தகர்க்கப்பட்டது. ஆனால், அவற்றில் இருந்து மீண்டும் மீண்டும் புதுப்பித்து எழுந்து இன்று வரலாற்றில் முக்கிய அங்கமாக திகழ்கிறது இப்பல்கலைக் கழகம்.
அழிக்க துடித்த படையெடுப்புகள்
இந்த இடத்தில் ஏகப்பட்ட கல்வி, அறிவு சம்பந்தமான ஆராய்ச்சிகளும், புத்தகங்களும் இருந்தன. இவற்றை அழிக்கும் நோக்கில் முதன்முறை படையெடுத்தது கி.பி. 455 ஆம் ஆண்டில் ஸ்கந்தகுப்தா ஆட்சிக் காலத்தில் தான். மிஹிரக்குலா தலைமையிலான ஹன்ஸ் படையிடனர் நாளந்தா பல்கலைக்கழகத்தை குறிவைத்து தாக்கினர். இதில் ஏராளமான கல்விப் பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் ஸ்கந்த வாரிசினர் மறுசீரமைத்து அதேக் கல்வியை மீண்டும் வழங்கினர். தொடர்ந்து, 7ஆம் நூற்றாண்டில் ஹர்ஷவர்தனர் ஆட்சியின்போது, இரண்டாவது முறையாக தாக்குதலுக்குள்ளாகி மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது. பின், கி.பி. 1193 ஆம் ஆண்டு பக்தியார் கில்ஜியின் ராணுவத்தினரால் பல்கலைக் கழகம் முற்றிலும் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த படையெடுப்புகள் எல்லாம் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகிற்கே பேரிழப்பாக கருதப்படுகிறது.
பல்கலைக் கழக கட்டமைப்பு
சுமார் 14 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழக கட்டிடம் முழுவதும், செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இது அக்காலத்தில் உலகின் புத்தமதத் தத்துவத்தின் மையமாகத் திகழ்ந்தது. அசோகர் காலத்துக்கு முன்பிருந்தே சிறந்த கல்வி கற்கும் இடமாக நாளந்தா விளங்கி வருகிறது. சீனா, கொரியா, ஜப்பான், திபெத், இந்தோனேஷியா, துருக்கி, என உலகின் பல நாடுகளிலிருந்தும் இங்கே கல்வி கற்றவர்கள் ஏராளம்.
யுவாங் சுவாங்கும், நாலந்தாவும்
சீனப்பயணிகளான யுவான் சுவாங், ஹூயூன் சங் ஆகியோர் உலகம் முழுவதும் சுற்றிவந்தவர்கள். அவர்கள் ஒருமுறை இந்திய வந்தபோது இப்பல்கலைக் கழகத்தில் கல்வி மேற்கொண்டுள்ளனர் என்று சீன எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக் கழகத்தை முன்மொழிந்த கலாம்
பல காலம் செயலிழந்து கிடந்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க பல்கலைக் கழகத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று பீகார் விதான் மண்டல் கூட்டு அமர்வில் நாளந்தா பல்கலைக்கழக மசோதாவை அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து, 2010- ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, பணிகள் நிறைவுற்றன. 2014 ஆம் ஆண்டு முதல் இந்த பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் செயல்பட தொடங்கியுள்ளது. இன்றும், உலக நாடுகளில் இருந்த இங் பயில விண்ணப்பங்கள் வந்த வண்ணமே உள்ளன.