நீலம்பூர் நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நெடுங்காயம் பிரதேசம் இதன் அடர்த்தியான மழைக்காடுகளுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. இயற்கை அழகுடன் ஜொலிக்கும் இந்த வனப்பகுதியில் ஏராளமான தாவரவகைகளும் காட்டுயிர் அம்சங்களும் நிறைந்துள்ளன. காலனிய ஆட்சியின் போது கட்டப்பட்ட மரவீடு ஒன்று இந்த நெடுங்காயம் காட்டுப்பகுதியின் சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த மரவீட்டிலிருந்து சுற்றிலுமுள்ள இயற்கைக்காட்சிகளையும் காட்டு உயிரினங்களின் நடமாட்டங்களையும் நன்கு பார்த்து ரசிக்கலாம். வாருங்கள் நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாம்.

முன் அனுமதி அவசியம்
பசுமையாக காட்சியளிக்கும் இந்த நெடுங்காயம் வனப்பகுதியில் யானைகள், காட்டெடுருமைகள், புலி, முயல், நீலக்குரங்கு, கரடி, காட்டுப்பூனை மற்றும் மான் போன்ற விலங்குகள் வசிக்கின்றன. பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால், வனத்துறையினரின் முன் அனுமதி பெற்றுத்தான் இந்த காட்டினுள் பயணிகள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
PP Yoonus

யானைப்பயிற்சி முகாம்
நெடுங்காயத்தில் உள்ள யானைப்பயிற்சி முகாம் ஒன்று ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பயணிகளை ஈர்த்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த நெடுங்காயம் வனப்பகுதியானது ‘நீலகிரி உயிர்ச்சூழல் பாதுகாப்பு மண்டல'த்தின் ஒரு அங்கமாகவும் விளங்குகிறது.
Yathin S Krishnappa

மலையேற்றம்
கேரள அரசாங்கம் தனது இரண்டாவது ‘சூழல்மாசுபடா சுற்றுலாத்திட்ட'த்திற்கான மையமாக இந்த காட்டுப்பகுதியை அங்கீகரித்துள்ளது. ஏராளமான ஒற்றையடிப்பாதைகளை கொண்டுள்ளதால் சாகச விரும்பிகள் இங்கு மலையேற்றத்திலும் ஈடுபடலாம்.
Rawbin

கன்னிமரம்
உலகத்திலேயே மிகப்பெரிய தேக்கு மரம் என்ற புகழுடன் அறியப்படும் இந்த ‘கன்னிமரம்' எனப்படும் தேக்கு மரம் நீலம்பூரின் பிரதான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.
பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த மரத்தின் அடிப்பாகம் 6.48மீ சுற்றளவைக் கொண்டுள்ளது. 400 வருடங்கள் வயதுடையதாக கருதப்படும் இந்த மரம் நுனி வரை 48.75 மீட்டர் உயரத்துடன் காட்சியளிக்கிறது. அதாவது, ஏறக்குறைய 160 அடி உயரம். அதற்குமேல் இதன் பிரம்மாண்டத்தை நேரில் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

ரத்தம் பீய்ச்சி அடிக்கும்
இப்பிரதேசத்தில் வசிக்கும் பூர்வகுடிகள் மத்தியில் ஒரு முக்கியமான ஆன்மீக அடையாளமாகவே கருதப்படும் இந்த தொன்மையான மரத்தை சுற்றி பல கதைகள் விளங்கிவருகின்றன.
அவற்றில் ஒன்று - இந்த மரத்தை வெட்ட முனைந்தபோது இதிலிருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது - என்பதாகும். அதன் பின் இந்த மரத்தை உள்ளூர் மக்கள் ‘கன்னி மரம்' என்றே அழைக்க ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.
பாலக்காடு மாவட்டத்துக்குள் வரும் பரம்பிக்குளம் காட்டுயிர் பூங்காவில் இந்த தொன்மையான மரம் அமைந்துள்ளது. நீலம்பூர் நகரத்திலிருந்து 80 கி.மீ தூரத்திலுள்ள இந்த மரத்தை சாலை மார்க்கமாக சென்றடையலாம். இந்திய அரசாங்கம் இந்த மரத்திற்கு ‘மஹாவிருக்ஷ புரஸ்கார்' எனும் விருதினை அளித்துள்ளது.

எலம்பலை மலை
கேரள தமிழ்நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள இந்த எலம்பலை மலையானது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் காட்டுயிர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.
நீலம்பூருக்கு அருகிலேயே உள்ள இந்த மலைப்பகுதியை சாலை மார்க்கமாக சுலபமாக சென்றடையலாம். சாலியார் ஆறு உற்பத்தியாகும் ஸ்தலமாகவும் இந்த மலைப்பகுதி அறியப்படுகிறது. அடர்ந்த காட்டுப்பகுதி மற்றும் மூங்கில் வனத்தை கொண்டிருக்கும் இந்த மலையின் தரிசனம் பயணிகளுக்கு மெய்மறக்கவைக்கும் ஒரு அனுபவமாக இருக்கும்.
Conolly_Plot

புகைப்பட ஆர்வலர்களுக்கு
இம்மலைப்பகுதியில் பலவகையான வனவிலங்குகளும் நிறைந்திருப்பதால் காட்டுயிர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இருப்பதில் வியப்பில்லை. யானைகள், மான், நீலக்குரங்குகள், காட்டெருமைகள், கரடி, காட்டுப்பூனைகள் மற்றும் காட்டு நாய்கள் போன்றவை இந்த வனப்பகுதியில் வசிக்கின்றன.
கண்ணைக்கவரும் இயற்கைக்காட்சிகளுடன் பச்சைக்கம்பளம் விரித்தாற்போன்ற சரிவுகளுடன் தோற்றமளிக்கும் இம்மலைப்பிரதேசம் புகைப்பட ஆர்வலர்களுக்கு திகட்டாத ஒரு ஸ்தலமாகும். குடும்பச்சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு பயணம் போன்றவற்றுக்கு எலம்பலை மலை உகந்த இடமாக விளங்குகிறது.
Acr795

டீக் மியூசியம்
நீலம்பூர் நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள இந்த டீக் மியூசியம் இரண்டு அடுக்குகளை கொண்ட ஒரு கட்டிடமாகும். இங்கு தேக்கு மரம் குறித்த பல விரிவான தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
1995ம் ஆண்டில் கேரள வனத்துறை ஆராய்ச்சி மைய வளாகத்துக்குள்ளேயே கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலேயே இது போன்ற ஒரே ஒரு அருங்காட்சியகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமிக்க வைக்கும் தகவல் பொக்கிஷமாக காட்சியளிக்கும் இந்த அருங்காட்சியகம் பயணிகளையும் இயற்கை ஆர்வலர்களையும் வெகுவாக கவர்கிறது. பழமையான தேக்கு மரத்தின் சிக்கலான வேர் அமைப்பு ஒன்று வாசலிலேயே ஒரு சிற்பம் போன்று பயணிகளை வரவேற்கிறது.
Prof tpms

அருங்காட்சியகத்தில் என்ன பார்க்கலாம்
கன்னிமரா தேக்கு எனப்படும் ஒரு பிரம்மாண்ட தேக்கு மரத்தின் வெளிச்சப்படம், ‘உரு' என்றழைக்கப்படும் புராதன கப்பல் ஒன்றின் ‘மாதிரி மர-வடிவமைப்பு' மற்றும் பல்வேறு அளவுகளில் தேக்கு கம்பங்கள் ஆகியவற்றை பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.
480 வருடங்கள் பழமையான ஒரு பிரம்மாண்ட தேக்கு மரத்தின் அடிப்பகுதியையும் இந்த மியூசியத்தின் உள்ளே காணலாம். பலவகையான வண்ணத்துப்பூச்சி சேகரிப்புகள், அந்துப்பூச்சிகள் போன்றவற்றுடன் மரங்கள் சாயும் ஓவியக்காட்சிகள், பல்வேறு புகைப்படங்கள் மற்றும் புராதன அறுவடைக்கருவிகள் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த மியூசியம் திங்கள்கிழமை தவிர்த்து காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.
Prof tpms -

அடயன்பாறா எனும் அழகிய நீர்வீழ்ச்சி
நீலம்பூர் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள குரும்பலங்கோட் எனும் இடத்திலுள்ள இந்த அடயன்பாறா என்ற அழகிய நீர்வீழ்ச்சி ஏராளமான சுற்றுலாப்பயணிகளையும் இயற்கை ரசிகர்களையும் கவர்ந்து இழுக்கிறது. நீலம்பூரிலிருந்து ஊட்டி செல்லும் நெடுஞ்சாலை வழியாக இந்த இடத்துக்கு சென்றடையலாம். பசுமையான இயற்கைச்சூழல் மற்றும் எழிற்காட்சிகளின் பின்னணியில் பிரம்மாண்டமான பாறைகளின் மீதிருந்து வழியும் இந்த நீர்வீழ்ச்சி காண்போரை வசப்படுத்தி விடுகிறது.
Babanogi



Click it and Unblock the Notifications




