ரயில் பயணத்தை மிகவும் வசதியாக்கி தருவது நாம் தேர்வு செய்யும் இருக்கைகள் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது தானே! அதிலும் ஏசி வகுப்பில் பயணித்து பழகியவர்கள் வேறு எதையும் தேர்வு செய்ய மாட்டார்கள். இந்திய ரயில்வே எடுத்துள்ள இந்த புதிய முடிவு பயணிகளிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், துவங்கிய கொஞ்ச நாட்களிலேயே 3 ஏசி எகனாமி வகுப்பை ரத்து செய்ய இந்தியன் ரயில்வே முடிவெடுத்துள்ளது. அதனைப் பற்றியமுழு தகவல்கள் கீழே!

செப்டம்பர் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 3 ஏசி எகனாமி
கடந்த வருடம் செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 ஏசி எகனாமி வகுப்பை முழுவதாக ரத்து செய்து 3 ஏசியுடன் இணைக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. புதிய வகுப்பை அறிமுகப்படுத்திய 14 மாதங்களிலேயே நிறுத்துவது பயணிகளிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மொத்தமாக 3A வகுப்பாக குறிப்பிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஏசி வகுப்பை விட குறைந்த கட்டணம்
2021 செப்டம்பரில் 3 ஏசி எகனாமியை ஒரு வகுப்பாக அறிமுகப்படுத்திய ரயில்வே, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பெட்டிகளின் கட்டணம் சாதாரண 3 ஏசி பெட்டிகளை விட 6-8% குறைவாக இருக்கும் என்று அறிவித்தது. முன்னதாக, பயணிகள் குறிப்பிட்ட ரயில்களில் "3E" என்ற தனி வகையின் கீழ் 3 ஏசி எகானமி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்திருந்தது. 3 ஏசி வகுப்பு டிக்கெட்டுகளை விட 3 ஏசி எகனாமியின் கட்டணம் குறைவாக இருந்ததால் அதிகப்படியான பயணிகள் இந்த சேவையை உபயோகித்து வந்தனர்.
3 ஏசி உடன் இணைக்கப்படும் 3 ஏசி எகனாமி வகுப்பு
தற்போது 463 ரயில்களில் 3 ஏசி எகனாமி பெட்டிகளும், 11,277 ரயில்களில் 3 ஏசி வகுப்பு பெட்டிகளும் இந்திய ரயில்வேயால் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து ரயில்களிலும் 3 ஏசி எகனாமியை 3 ஏசி உடன் இணைக்கும் செயல்முறை அடுத்த நான்கு மாதங்களுக்குள் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கட்டணங்களில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UTS இல் மாற்றத்தை கொண்டு வந்த இந்தியன் ரயில்வே
முன்னதாக UTS செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான தூரவரம்பை இந்தியன் ரயில்வே குறைத்துள்ளது. புறநகர் அல்லாத ரயில்களுக்கான டிக்கெட் புக்கிங்கிற்கான தூர வரம்பு 5 கிலோ மீட்டரில் இருந்து 20 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புறநகர் ரயில்களுக்கான பயண சீட்டினை புக் செய்வதற்கான தூர வரம்பு 2 கிலோ மீட்டரில் இருந்து 5 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
ஆகவே, நீங்கள் இனிமேல் இந்த 3 ஏசி வகுப்பில் பயணிக்க முடியாது பயணிகளே!



Click it and Unblock the Notifications




