நாம் இந்தியர்களாகவே இருந்தாலும் கூட முழு இந்தியாவையும் நம்மால் சுதந்திரமாக சுற்றிப் பார்க்க முடியாது. ஆம்! சில பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல நாம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருப்பது அவசியம். அப்படிப்பட்ட அனுமதி வாங்கி சுற்றி பார்க்கக்கூடிய இடங்களில் அழகிய அருணாச்சல ப்பிரதேசமும் ஒன்று. ஆனால் இப்பொழுது சுற்றுலாப் பயணிகள் வேகமாகவும், வசதியாகவும், சுமுகமாகவும் மாநிலத்திற்குள் நுழைவதை உறுதி செய்யும் வகையில் இந்த அனுமதியை ஆன்லைனில் பெற அம்மாநில சுற்றுலாத் துறை வழிவகை செய்துள்ளது. அதனைப் பற்றிய கூடுதல் விவரங்கள் இதோ!

அதிசயங்கள் நிறைந்த அருணாச்சலப் பிரதேசம்
இயற்கை அதிசயங்களால் நம்மை திகைக்க வைக்கும் அருணாச்சலப் பிரதேசம் பழங்குடி கலாச்சாரங்கள், புத்த மடாலயங்கள், பனி மூடிய சிகரங்கள், பழமையான ஏரிகள், உயரமான மலைகள் மற்றும் விசித்திரமான மலைப்பகுதி கிராமங்கள் ஆகியவற்றின் தாயகமாகும். சில பாதுகாப்பு காரணங்களுக்காக நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிமின் சில பகுதிகள், மிசோரம், லட்சத்தீவு, மேகாலயா, மணிப்பூர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளுக்கு செல்ல நீங்கள் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த அனுமதியை இன்னர் லைன் பெர்மிட் (ILP) என்று கூறுகின்றனர்.

ILP பெற்றால் தான் உள்ளே நுழைய முடியும்
நீங்கள் அருணாச்சலுக்கு உள்ளே எங்கு சென்றாலும் இந்த பாஸை காண்பிக்க வேண்டும். இது மிகவும் கட்டாயமாகும். ஆனால் இந்த அனுமதியை நீங்கள் பெரும்பாலும் நேரில் சென்று வாங்கும் படியே இருக்கும். அருணாச்சலப் பிரதேசத்திற்குச் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் எப்போதும் ILP பெறுவதில் உள்ள சிரமங்களைப் பற்றி புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசம், தற்போது சுற்றுலா பயணிகள் பயணிக்க விரைவான மற்றும் எளிதான வழியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி சுற்றுலாப் பயணிகள் தங்கள் ILP பாஸ்களை பெறக்கூடிய இ-போர்ட்டலை அருணாச்சல அரசாங்கம் தொடங்கியுள்ளது.

இ-போர்ட்டலை திறந்து வைத்த அம்மாநில முதல்வர்
இ-போர்ட்டலை திறந்து வைத்த அருணாச்சலப் பிரதேச முதல்வர் "eILP சுற்றுலாப் பயணிகளுக்கு பிரத்தியேகமாக சேவை செய்வதற்கும், மாநிலத்திற்கு அவர்களின் நுழைவை மென்மையாக்குவதற்கும் ஒரு சிறந்த நடவடிக்கையாகும். இது ILP பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளது. விண்ணப்பம், ஒப்புதல் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இனி eILP பெற பயணிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்காது எனவும் இதனால் சுற்றுலா மேம்படும்" என்றும் தெரிவித்திருந்தார்.

விரைவான பயணம்
மொபைல் ஓடிபி அடிப்படையிலான சுய சரிபார்ப்பு மற்றும் க்யூஆர் குறியீடு அடிப்படையிலான டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்ட ILP யுடன் கூடிய அடையாள அட்டை அடிப்படையிலான பதிவுகள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மொபைல் அடிப்படையிலான செயலியைப் பயன்படுத்தி சோதனை வாயில்களில் காவலர்களால் பயன்படுத்தப்பட்டு சரிபார்க்கப்படும் என்று அவர் கூறினார். மேலும், சுற்றுலாப் பயணிகளின் விரைவான பயணத்துக்கும் இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுற்றுலாத் தலங்கள் நிரம்பியுள்ள அருணாச்சலப் பிரதேசம்
இந்தியாவில்முதலில் சூரியன் உதிக்கும் இடமான அருணாச்சலப் பிரதேசம் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் ஒரு இடமாகும். தவாங், ஜிரோ பள்ளத்தாக்கு, ரோயிங், சேலா பாஸ், நம்தாபா தேசிய பூங்கா, போம்டிலா, திராங், தேசு, பாசிகாட், நுரானாங் நீர்வீழ்ச்சி, மெச்சுகா, இட்டாநகர், அலாங், பாலுக்போங், சங்கி, சாங்லாங், பும்லா பாஸ், அனினி, டபோரிஜோ, ஹயுலியாங் வைல்டு, ஹயுலியாங் வில்லிகேஜ், கோரிச்சென் சிகரம் என அருணாச்சலப் பிரதேசத்தில் பல அழகான இடங்கள் உள்ளன
சுற்றுலாப் பயணிகளுக்கு ILP வழங்கும் செயல்முறை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, அனுமதி வழங்குவது வேகமாகவும் வசதியாகவும் மாறியுள்ளது. இதனால், மாநிலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications




