உலகிலேயே முதன்முதலாக தோன்றிய மொழி தமிழ் தான், உலகில் தோன்றிய பண்டைய நாகரீகங்களில் தமிழ் நாகரீகமும் ஒன்று தான்! இப்படி தமிழ் மற்றும் தமிழர்களின் சிறப்பைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆம்! அப்படி வியப்பை ஏற்படுத்தும் ஒரு கிராமம் தான் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் அமைந்திருக்கும் கானாடுகாத்தான் எனும் கிராமம்! இது சாதாரண கிராமம் அல்ல, தமிழ்நாட்டின் மாளிகை கிராமம் இது தான்! இந்த அருமையான இடத்தை தமிழர்களாகிய நாம் அனைவரும் கட்டாயம் வாழ்வில் ஒரு முறையாவது கண்டு களிக்க வேண்டும்! எதற்காக என்று சொல்கிறேன் வாருங்கள்!
தமிழ்நாட்டின் மாளிகை கிராமம் - கானாடுகாத்தான்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியே மொத்தமாக செட்டிநாடு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல மாளிகைகளும், அரண்மனைகளும் இருக்கின்றன. இங்குள்ள ஒவ்வொரு மாளிகையும் 100 முதல் 200 வருடங்கள் பழமையானவை. ஒவ்வொரு மாளிகையும் கட்டமைப்பிலும் வடிவத்திலும் பாரம்பரியத்திலும் தமிழகர்களின் செழுமையான செட்டிநாட்டு கலாச்சாரத்தை எடுத்துரைக்கின்றன.

நூறு ஆண்டுகளை கடந்து நிற்கும் மாளிகைகள்
நீங்கள் கானாடுகாத்தான் என்று Google Maps இல் தேடினாலே தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய செட்டிநாடு மாளிகையான கானடுகாத்தான் அரண்மனைக்கு தான் உங்களை அது அழைத்துச் செல்லும். இந்த அரண்மனை முழுக்க மிக விலையுயர்ந்த பொருட்களால் இழைக்கப்பட்டுள்ளது என்று இதற்குள் சென்று பார்த்தவர்கள் கூறுகின்றனர். 1902 இல் நாட்டுக்கோட்டை செட்டியார் காலத்தில் கட்டப்பட்ட இந்த மிகப்பெரிய அரண்மனையில் பர்மா தேக்கு முதல், ஐரோப்பிய, அரேபியாவை சார்ந்த அரிதான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மாளிகையினுள் இதுவரை ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
செட்டிநாட்டை அலங்கரிக்கும் அழகிய மாளிகைகள்
இந்த மாளிகையினுள் பொதுமக்கள் தற்போதைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த மாளிகை போல இந்த ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட மாளிகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான முறையில் செட்டிநாடு பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன. அவற்றில் பல மாளிகைகளுக்குள் நீங்கள் சென்று பார்க்க அனுமதி உண்டு, காலை 9:30 மாலை 5:30 மணி வரை நீங்கள் சென்று சுற்றிப் பார்க்கலாம். நுழைவுகட்டணமாக நீங்கள் வெறும் ரூ.50 கொடுத்தால் போதும்.

தங்கி பார்க்கவும் உங்களுக்கு வாய்ப்புகள் உண்டு
செட்டிநாடு அதன் சுவையான கோழி செட்டிநாடு உணவு மற்றும் காரைக்குடியில் இருந்து மிகவும் விரும்பப்படும் பழங்கால பொருட்களுக்கு பிரபலமானது, ஆனால் பெரும்பாலான பயணிகளுக்கு இப்பகுதியில் உள்ள மீதமுள்ள 73 கிராமங்களில் பரவியுள்ள இந்த ஆடம்பரமான மாளிகைகள் பற்றி தெரியாது. அவற்றில் பெரும்பாலானவை இடிந்து கிடக்கின்றன என்றாலும், ஒரு சில செட்டியார் மரபை உயிர்ப்புடன் வைத்திருக்க உழைக்கும் ஆர்வமுள்ள உரிமையாளர்களால் பாரம்பரிய ஹோட்டல்களாகவும் அருங்காட்சியகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

கட்டாயம் ஒவ்வொரு தமிழரும் பார்க்க வேண்டிய இடம் இது
இங்குள்ள அரண்மனைகளை நீங்கள் சுற்றிப் பார்க்கும் போது ஒரு 100 வருஷம் முன்னர் கூட நம் முன்னோர்கள் எவ்வாறு பாரம்பரியத்துடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்கிற உணர்வு வருகிறது. அவர்கள் உபயோகித்த பொருட்களும், உலோகங்களும், ஆபரணங்களும் இன்று வரை அவர்கள் சந்ததிகளால் காப்பாற்றப்பட்டு வருகிறது. இந்த செழுமையான கலாச்சாரத்தை நாமும் கட்டாயம் உணர வேண்டும். அதற்கு கட்டாயம் நாம் அனைவரும் இந்த கானாடுகாத்தான் கிராமத்திற்கு செல்ல வேண்டும்!



Click it and Unblock the Notifications





