முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் வருகிற 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து கோயிலில் பராமரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. யாகசாலைகள் அமைப்பு, தங்க கோபுரம் புனரமைப்பு, தங்க கவசம் புனரமைப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவங்கிய பூஜைகள்
இதனை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்துக்கான பூர்வாக பூஜைகள் வருகிற 18ந் தேதி தொடங்குகிறது. 23ந் தேதி மாலை முதல் கால யாகை பூஜை அதனைத் தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமி ஆவாஹனம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து பழனி கோவில் மண்டபத்தில யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகுறது. இதில் 90க்கும் மேற்பட்ட யாக குண்டங்கள் அமைக்கப்பட உள்ளன. யாகசாலையில் வண்ண அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
பதினாறு ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேகம்
பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட பழனி மலைக்கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜனவரி 27 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கடைசியாக பழனி கோவிலுக்கு 2006 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் வருகின்ற 27ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூன்று நாட்களுக்கு மட்டுமே டிக்கெட் புக்கிங்
கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக இணைதளம் மூலம் கட்டணமில்லா முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்கதர்கள் அனைவரும் ஜனவரி 18 ம் தேதி முதல் ஜனவரி 20 ம் தேதி வரை கட்டணம் இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் பக்தர்களை மட்டுமே குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படி புக்கிங் செய்வது?
திருக்கோவில் இணைதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் இத்துறை வலைதளமான www.hrce.tn.gov.in ஆகிய வலைதளங்களின் மூலம் பக்தர்கள் வருகின்ற 18ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் கட்டணமில்லா முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர், மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தக் கொள்ளலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
கட்டணமில்லா முன்பதிவு செய்வதற்கு பக்தர்கள் கீழ்கண்ட ஏழு சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை சான்றாகக் கொண்டு டிக்கெட் புக் செய்யலாம்o நிரந்தர வருமான வரி கணக்கு அட்டை (Pan Card)
o வாகாளர் அடையாள அட்டை
o பாஸ்போர்ட்
o நடப்பு வங்கி சேமிப்பு கணக்கு
o ஓட்டுநர் உரிமம்
o குடும்ப அட்டை
o ஆதார் அட்டை
Only 2,000 devotees are allowed
2,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
தங்களது கைப்பேசி எண்ணுடன் மின்னஞ்சல் முகவரி மற்றும் இதர விவரங்கள் தந்து முன்பதிவு செய்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதிவு செய்யப்படும் நபர்களில் 21ம் தேதி குலுக்கல் முறையில் 2,000 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி/கைபேசி எண்ணிற்கு 22ம் தேதி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படி வழியாக மட்டுமே கோவிலுக்கு செல்ல முடியும்
முன்பதிவு உறுதி செய்யப்பட்ட பக்தர்கள் ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பழனியில் உள்ள வேலவன் ஓட்டலுக்கு சென்று உரிய ஆவணங்களை அளித்து, இலவசமாக கும்பாபிஷேக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த இரண்டு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே டிக்கெட்களை பெற முடியும். கும்பாபிஷேக டிக்கெட் பெற்ற பக்தர்கள் படி வழியாக மட்டுமே மலைக்கோவிலுக்கு செல்ல முடியும். ரோப்கார், எலக்ட்ரிக் ரயில் போன்ற சேவைகள் இந்த நாட்களில் செயல்படாது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.