கோட்லிகாட் என்றும் அழைக்கப்படும் இந்த பேத் கோட்டை கர்ஜத் நகரத்துக்கு மிக அருகில் உள்ள பேத் எனும் சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த பேத் மலைப்பகுதி மாத்தேரான் மலைகளை பின்னணியில் கொண்டுள்ளதால் அற்புதமான இயற்கைக்காட்சிகளுடன் காட்சியளிக்கின்றது. இங்கிருந்து கொங்கணப்பிரதேசத்தின் இயற்கை எழிலை நன்றாக ரசிக்க முடிகிறது.இந்த கோட்டைக்கு அருகிலேயே உள்ள ஒரு சிறு குகையில் பைரோபா கடவுளின் விக்கிரகம் உள்ளது. வாருங்கள் பேத் கோட்டை பற்றியும் அருகாமை இடங்களைப் பற்றியும் காண்போம். இது மராத்திஉலாவின் 5 வது பகுதி.
சிதிலமடைந்த பேத் கோட்டை
பேத் கோட்டை தற்சமயம் சிதிலமடைந்து காணப்பட்டாலும், இங்குள்ள நீர்த்தொட்டிகள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இந்த கோட்டை மராத்தா ஆட்சியாளர்களால் எதிரிகளிடமிருந்து தங்கள் ராஜ்ஜியத்தை காப்பாற்றும் நோக்கில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.இந்த கோட்டைக்கு அருகாமையில் நேதர்சோலே அணை மற்றும் பன்சாத் காட்டுயிர் சரணாலயம் போன்ற முக்கிய சுற்றுலாத்தலங்களும் அமைந்துள்ளன.
கொண்டேஷ்வர் கோயில்
கர்ஜத் ஸ்தலத்தில் உள்ள இந்த கொண்டேஷ்வர் கோயில் சிவனுக்கான ஒரு புராதனமான கோயிலாகும். இந்த திருக்கோயிலின் கர்ப்பக்கிருகத்தைச் சுற்றி பல சிறிய சன்னதிகளும் அமைந்துள்ளன.
இந்தக் கோயில் அக்கால ஹேமந்த்பதி பாணியில் கட்டப்பட்டிருப்பது முக்கியமான அம்சமாகும்.மஹாசிவராத்திரி திருநாளின் போது இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
தவிர்க்கவேண்டும்
மழைக்காலத்தில் இக்கோயிலுக்கு விஜயம் செய்வது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. அக்காலத்தில் கோயிலை சுற்றிலும் உள்ள பாறைப்பகுதி வழுக்கும் அபாயத்துடன் காணப்படுகிறது.
மலையேற்றப்பாதை
கர்ஜத் ஸ்தலம் இங்குள்ள மலையேற்றப்பாதைகளுக்காக மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. புதிதாக மலையேறுபவர்களுக்கும், அனுபவசாலிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல மலையேற்றப்பாதைகள் இங்குள்ளன. அதற்கேற்ற மலைப்பாங்கான இயற்கையமைப்பு இங்கு வாய்க்கப்பெற்றுள்ளது.
கடினமான டிரெக்கிங்
கர்ஜத் பகுதியில் கடுமையான மலையேற்றப்பாதைகள், சிரமமான பாதைகள் மற்றும் மிகச்சிரமமான அபாயகரமான பாதைகள் போன்றவை உள்ளன. இவற்றில் ஏறும்போது அற்புதமான மெய் சிலிர்க்க வைக்கும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.இந்த மலையேற்றப்பாதைகளில் குறிப்பிடத்தக்கனவாக பேத் மலைக்கு செல்லும் பாதை, சந்தேரி கோட்டைப்பாதை மற்றும் மாத்தேரான் பாதை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
கொண்டனா குகைகள்
கொண்டனா குகைகள் கர்ஜத் ஸ்தலத்திலேயே அமைந்துள்ளன. இவை வரலாற்றுக்கால பௌத்த மரபிற்கான சான்றுகளாய் காட்சியளிக்கின்றன. பாறைக்குடைவு கோயில்களான இவற்றின் உள்ளே பல சிற்பங்கள், ஸ்தூபிகள், விஹாரங்கள் மற்றும் சைத்யாக்கள் போன்றவை அமைந்துள்ளன. இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குடைவறைக்கோயில்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையை உடையன என்பது ஒரு மலைக்க வைக்கும் விஷயமாகும்.
சிற்பங்களும் கலையும்
.இங்குள்ள சிற்பங்கள் மற்றும் ஸ்தூபிகள் அக்கால பௌத்த சிற்பக்கலை பாணியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. பெரும்பாலும் இந்த சிற்பங்கள் நடனத்தோற்றத்தில் காட்சி அளிக்கும் ஆண், பெண் உருவங்களைக் கொண்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, பூகம்பம் போன்ற இயற்கைப்பேரிடர் காரணமாக இந்த குடைவறைக்கோயிலின் வாசல், மற்றும் பல ஸ்தூபிகள் சிதைவடைந்து காட்சியளிக்கின்றன. வருடம் முழுவதும் பல புத்த யாத்ரீகர்கள் இந்த புராதன குடைவறைக்கோயில்களுக்கு வருகை தருகின்றனர். இந்த ஸ்தலத்தின் புனிதம் கருதி மது மற்றும் புகைப்பிடித்தல் போன்ற அம்சங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.