மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தின் ஒரு நகரமாகவும் துணை மாவட்டமாகவும் இந்த கர்ஜத் அமைந்துள்ளது. இந்த பிரதேசம் கம்பீரமான சஹயாத்திரி மலைகள், மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் போர்காட் மலைகளை தன்னுள் கொண்டு காணப்படுகிறது. உல்லாஸ் ஆற்றின் கரையிலுள்ள இந்த கர்ஜத் நகரம் கொங்கணப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
கர்ஜத் ஸ்தலம் ரம்மியமான இயற்கை எழிலுடன் கூடிய வளமான தாவரச்செழிப்பு மற்றும் மலைப்பாறைகளுடன் கூடிய நீர்வீழ்ச்சிகளைக் கொண்டிருக்கிறது. மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சிகள் அழகாக நிரம்பி வழிகின்றன.
ஒரு சாகச பொழுதுபோக்கு மையம்
மும்பை பெருநகரத்திலிருந்து 67 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ள இந்த கர்ஜத் நகரமானது, நகரச்சந்தடியிலிருந்து விலகி சாகசப்பொழுதுபோக்கு மற்றும் சிற்றுலாவில் ஈடுபட விரும்பும் மக்களுக்கு உகந்த இடமாக உள்ளது.
கர்ஜத் சுற்றுலாத்தலம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் அங்கீகரிக்கப்படாத சாகச விளையாட்டுத் தலைநகரமாக விளங்குகிறது என்றால் அது மிகையில்லை. ரம்மியமான இந்த மலைஸ்தலம் பல சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது.
குறிப்பாக கர்ஜத் நகரம் மலையேற்றத்துக்கு பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. அனுபவமம் இல்லாதவர்களுக்கு ஏற்ற பல சுலபமான மலையேற்றப்பாதைகளும், அனுபவசாலிகளுக்கு ஏற்ற கடினப்பாதைகளும் இங்கு ஏராளம் அமைந்துள்ளன.
இந்த மலைப்பாதைகளில் பயணிக்கும்போது நம்மால் சுற்றியுள்ள இயற்கை வனப்பை மிக அருகில் கண்டு ரசிக்க முடிகிறது. எனவே இவை மலையேற்ற ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் இயற்கை ரசிகர்களுக்கும் ஏற்றதாக உள்ளன.
உல்லாஸ் ஆற்றில் மிதவைப்படகு சவாரி செல்வது இங்குள்ள மற்றொரு சாகச பொழுதுபோக்கு அம்சமாகும். இவை தவிர இந்த ஸ்தலத்தில் அமைந்திருக்கும் புராதன சின்னமான பேத் கோட்டை மற்றும் புத்த கலையம்சங்களை கொண்டுள்ள கொண்டனா குகைகள் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை.
இந்த குகைகளில் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களும் வரலாற்று மற்றும் சிற்பக்கலை ஆர்வலர்களை மிகவும் கவரும் முக்கிய அம்சங்களாகும். பேத் கோட்டையிலிருந்து பார்க்க கிடைக்கும் இயற்கைக்காட்சி மிக அற்புதமான ஒரு தரிசனமாகும்.
200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கர்ஜத் எனப்படும் புராதன ஸ்தலம் அதன் இயற்கை வனப்புக்கும், புராதன அழகுக்கும், வரலாற்று பின்னணிக்கும் மிகவும் பெயர் பெற்று விளங்குகிறது.
இயற்கையின் அமைதி மற்றும் சாகசப்பொழுது போக்குகளை விரும்புவோர்க்கு இந்த கர்ஜத் மலைஸ்தலம் மிகவும் ஏற்ற சுற்றுலாத்தலமாகும்.