'ஆலெப்பி' என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் 'ஆலப்புழா' உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகாந்தத்துக்கும் பெயர் பெற்ற இடமாகும். 'கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்' என்று இது அழைக்கப்படுகிறது என்று சொன்னாலே போதும், ஆஹா! என்ற உணர்வு நம் மனதின் நிச்சயம் தோன்றாமல் இருக்காது. ஆலப்புழாவின் மனம் மயக்க வைக்கும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும் நம்மை மெய்மறக்கச் செய்து நம் உணர்வுகளை எங்கோ இழுத்து செல்கின்றன. வாருங்கள் ஆலப்புழாவில் ஒரு மழைக்கால சுற்றுலாவுக்கு செல்வோம்.
திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம்
கேரளா மாநிலத்திலேயே முதல் முதலாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் என்ற சிறப்பையும் இது கொண்டுள்ளது. ஆலப்புழாவில் ஓடைகள் மூலமாக இயக்கப்படும் நீர்வழிப்போக்குவரத்து வசதிகளில் பயணம் செய்வது உங்கள் வாழ்விலேயே மறக்க முடியாத அனுபவமாக பதிந்து விடும் என்பதை - நீங்கள் இங்கு பயணம் செய்து திரும்பும்போது புரிந்துகொண்டு புன்னகை செய்வீர்கள்.
உப்பங்கழி
ஒரு சிறப்பான விடுமுறையை திட்டமிட்டு ஆலப்புழாவிற்கு சுற்றுலா பயணம் செய்து, உப்பங்கழி இயற்கைக்காட்சிகள், படகுப்பயணங்கள் மற்றும் இயற்கை எழிலை ரசித்து திரும்புவது நிச்சயம் உங்களுக்கு புத்துணர்வூட்டும் சுற்றுலா அனுபவமாக இருக்கும். பளபளப்பான கடற்கரைகள், சாந்தம் தவழும் ஏரிகள் ஆகியவற்றுடன் மெய்மறக்க வைக்கும் படகு வீடு பயணங்கள் ஆகியவையும் இங்கு உங்களுக்காக காத்திருக்கின்றன.
Silver Blue
படகுப்போட்டி திருவிழா!
நீர்த்தேக்கம் என்றிருந்தால் படகுகளும், படகுகள் இருந்தால் போட்டியும் இல்லாமல் போகுமா!? வருடாவருடம் ‘ஆலெப்பி'யில் நேரு கோப்பை படகுப் போட்டியானது ஒரு திருவிழா போன்று விமரிசையாக நடத்தப்படுகிறது. கேரளா மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் பல படகுச் சங்கங்கள் இதில் கலந்து கொள்கின்றன.
Erin Pettigrew
ஜவஹர்லால் நேரு
வெற்றிக்கோப்பை வழங்கும் பழக்கம் ஒருமுறை இந்த போட்டியை ரசித்த ஜவஹர்லால் நேரு அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. படகுப் போட்டியாளார்களின் திறன், நுட்பம் ஆகியவற்றில் மனதைப் பறிகொடுத்த நேருஜி அவர்கள் படகுக் கலைஞர்களின் முயற்சிக்கு ஒரு பரிசுக்கோப்பையை அளிப்பது அவசியம் என்று முடிவு செய்துள்ளார்.
vijay chennupati
எப்போது
தற்போது 60 வருடத்தை எட்டிவிட்ட இந்த படகுப்போட்டி இன்றும் அதே உற்சாகம் மற்றும் கொண்டாட்டத்துடன் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று இந்த படகுப்போட்டி நடத்தப்படுகிறது.மற்ற நாட்களில் நிசப்தம் நிலவும் ‘ஆலெப்பி' நீர்த்தேக்கமானது இப்போட்டியின்போது பரபரப்பாக மாறுவதுடன் நகரமும் ஒரு திருவிழாக்கோலத்தை பூண்டுவிடுவது குறிப்பிடத்தக்கது.
Silver Blue
மழைக்காலம்
ஜுன், ஜுலை மழைக்காலம் முடிந்தபின்னர் நடத்தப்படும் இந்த படகுப்போட்டி நிகழ்ச்சியின்போது ‘ஆலெப்பி' சுற்றுலாத்தலத்துக்கு பயணம் மேற்கொள்வது மிகவும் உகந்ததாகும். ஒரு முழுமையான ஆன்மீக அனுபவம் எங்கு திரும்பினாலும் இயற்கை எழிலுடனும், இதமான சூழலுடனும் காட்சியளிக்கும் ‘ஆலெப்பி'யில் கால் வைத்தவுடனேயே உங்கள் மனம் லேசாகி, உடலாலும் புத்துணர்வடைவீர்கள்.
vijay chennupati
ஆன்மீகச் சுற்றுலா
மனதை மேலும் சுத்திகரிக்க ஆலய பயணங்களும் உங்களுக்கு வேண்டுமெனில், தெய்வீகம் தவழும் கோயில்களும் இங்கு அதிகம் உள்ளன. அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில், முல்லக்கல் ராஜேஷ்வரி கோயில், செட்டிகுளங்கரா பகவதி கோயில், மன்னாரசாலா ஸ்ரீ நாகராஜா கோயில் போன்ற பிரசித்தமான கோயில்கள் இங்கு உள்ளன
Sivavkm
மற்ற தளங்கள்
எடத்துவா சர்ச், செயிண்ட் ஆண்ட்ரூஸ் சர்ச், செயிண்ட் செபாஸ்டியன் சர்ச் ஆகிய கிறிஸ்துவ தேவாலயங்களும் இங்கு அமைந்துள்ளன. தென்னிந்தியாவில் கிறிஸ்துவத்தை பரப்புவதற்காக பயணம் மேற்கொண்ட செயிண்ட் தாமஸ் மதகுரு ஆலப்புழாவுக்கும் விஜயம் செய்ததாக கூறப்படுகிறது. புத்த மதமும் கேரளாவில் அக்காலத்தில் பின்பற்றப்பட்டிருக்கிறது.
புத்தரின் காலத்திலேயே பௌத்தம் இங்கு அறிமுகமாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைக்கு பௌத்த மத அடையாளங்கள் என்று பெரிதாக ஏதும் மிச்சம் இல்லாவிட்டாலும், கருமாடி குட்டன் என்றழைக்கப்படும் புராதன புத்தர் சிலை ஒன்று ஆலெப்பி நகரத்தில் கவனமாக பாதுகாக்கப்படுகிறது.
muffinn
எழில் தவழும் பாதிரமணல்
இயற்கையின் எழிலும் பொழிலும் நிறைந்து வழியும் ஸ்தலங்கள் ஆலெப்பி நகர்ப்பகுதியில் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா அம்சம் பாதிரமணல் எனும் இடமாகும். ஒரு சிறிய தீவுப்பகுதியான இதில் சொல்லப்படுவதைவிடவும் ஏராளமான சுவராசியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக, அழிந்து வரும் பல அரிய வகை பறவைகளை இங்கு பார்க்கலாம்.
மற்ற கேரளப்பகுதிகளில் கிடைத்த அனுபவங்களை எல்லாம் மிஞ்சும்படியான இயற்கை தரிசனம் இங்கு கிட்டும் என்றே சொல்லலாம்.
Sarath Kuchi
வேம்பநாடு குட்டநாடு
வேம்பநாடு ஏரிப்பகுதியில் மூழ்கிக்கிடக்கும் இந்தத்தீவுப்பகுதியிலிருந்து ஆலெப்பி பிரதேசத்தின் இயற்கை வனப்பை நன்கு ரசிக்க முடிகிறது. இது மட்டுமல்லாமல், ‘கேரளாவின் அரிசிக்கிண்ணம்'என்றழைக்கப்படுகிற குட்டநாட் பகுதியின் நெல்வயல்களுக்கும் பயணிகள் சென்று பார்க்கலாம். கடவுளின் சொந்த தேசம் எனப்படும் கேரளாவின் நிஜமான சௌந்தர்யம் அதன் கிராமப்பகுதிகளில் தவழ்வதால், அருகிலுள்ள பண்ணைகள் மற்றும் விசாலமான நெல்வயல்கள் போன்றவற்றுக்கு விஜயம் செய்து ரசிப்பது விடுமுறைச்சுற்றுலாவை இன்னும் பரவசமான அனுபவமாக மாற்றும்.
muffinn
வரலாற்று சுற்றுலா
பாண்டவர் பாறை மற்றும் கிருஷ்ணாபுரம் அரண்மனை ஆகியவை இங்குள்ள புராணிகப்பின்னணி கொண்ட தலங்களாகும். பாண்டவர் பாறையானது மஹாபாரத பாண்டவரோடு தொடர்பைக் கொண்டுள்ளது. வனவாசத்தின்போது பாண்டவர்கள் இங்குள்ள குகை ஒன்றில் வசித்திருந்ததாக நம்பிக்கைகள் நிலவுகின்றன.
இந்த பாறை ஸ்தலத்திற்கு செய்து இச்சூழலை ரசிப்பது சிறந்தது. இது தவிர, கிருஷ்ணாபுரம் அரண்மனையும் ஒரு முக்கியமான வரலாற்றுப்பின்னணி கொண்ட அம்சமாகும். இது திருவாங்கூர் மஹாராஜாவான அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா வசித்த மாளிகையாகும்.
18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பாரம்பரிய மாளிகையில் பின்னாளில் பல ராஜ வம்சத்தினரால் பலவிதமான புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது கேரள தொல்லியல் துறையால் இந்த பாரம்பரிய மாளிகை பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
swifant
எப்போது, எப்படி ?
நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட பருவத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆலெப்பி' நகருக்கு பயணம் செய்யலாம். தங்கள் விருப்பம் மற்றும் பொருளாதார சக்திக்கேற்றபடி, ரயில் அல்லது பேருந்து அல்லது விமான மார்க்கமாக பயணிகள் ஆலெப்பி' நகருக்கு விஜயம் செய்யலாம். விமானம் மூலம் கொச்சி விமானநிலையத்தை அடைந்து அங்கிருந்து ஆலெப்பி வரலாம். எல்லா முக்கிய அண்டை மாநில நகரங்களிலிருந்தும் நேரடி ரயில் சேவைகளும்,பேருந்து சேவைகளும் ஆலெப்பி' நகருக்கு இயக்கப்படுவது ஒரு விசேஷமான அம்சமாகும். தேசிய நெடுஞ்சாலை ‘எண்: 47' ஆலெப்பி வழியே செல்வதால் சாலை வசதிகள் மற்றும் பேருந்து இணைப்புகளுக்கும் எந்த குறையுமில்லை.
Navaneeth Kishor