நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது. வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்கள் அனைத்தும் திருமாளை குறித்தான பாடல்கள் ஆகும். திருமாள் வழிபாட்டில் குறிப்பிடத்தக்கது சொர்க்க வாசல் திறப்பு. விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, தோன்றிய அசுரர்களை அடக்கி, பாக்கியம் பெற்றவர்களாக மாற்றி அடைக்கப்பட்டதே சொர்க்க தலம். திருமாளின் கட்டுக்குள் உள்ள இந்த வாசல் வருடத்திற்கு ஒரு முறை திறக்கப்படுவது வழக்கம். பெரும்பாலும், திருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் கட்டாயம் இருக்கும். ஆனால், இந்த வாசலற்ற திருத்தலம் எங்குள்ளது தெரியுமா?
கோவில்களின் பூமி
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கோவில்களின் பூமியாக வர்னிக்கப்படுகிறது. இங்கே உள்ள 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமாள் கோவில் உலகப் பிரசிதிபெற்றது. தாயார் விஜயவள்ளியுடன் சார்ங்கபாணி என்ற திருநாமத்துடன் திருமாள் அருள்பாலிக்கிறார். சார்ங்பாணி கோவில் காவேரியில் ஸ்ரீ சக்கரம் தோன்றிய இடத்தை இப்பொது சக்கரை தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
திருமாலின் வில்
சார்ங்கபாணி என்னும் பெயரில் உள்ள சார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லைக் குறிக்கிறது. பாணி என்பது கரத்தில் ஏந்தியவன் எனப் பொருள் தருகிறது. சார்ங்கபாணி என்பதற்குச் சார்ங்கம் என்னும் தெய்வீக வில்லை ஏந்தியவன் என்பது பொருள். இங்குள்ள மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் எனப்படுகின்றார்.
தல அமைப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 12-வது திவ்ய தேசமாகும். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்திரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். மூலவர் கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதாரச் சிலைகள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இத்தல தேர் சக்கரம் பிரம்மாண்டத் தோற்றத்துடன் சுற்றுப்புற சுவர்களிலும் அழகிய கலைநயமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 11 நிலைகளையுடைய இது 150 அடி உயரம் கொண்டது.
தென்னிந்தியாவில் பெரிய தேர்
சார்ங்கம் என்ற வில்லைக் கொண்டுள்ளதால் சார்ங்கபாணி எனப்படுகிறார். இக்கோவிலில் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா பிரசிதிபெற்றது. இத்திருவிழாவின் போது வழிபடப்படும் தேர் சித்தரை தேர் என அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே உள்ள கோவில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இது திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றுள்ளது.
தோஷம் போக்கும் சார்ங்கபாணி
இத்தல பெருமாளை வணங்கினால் சகலதோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை, குழைந்தை பாக்கியம் அற்றவர்கள் இத்தலத்தில் தாயார் மற்றும் திருமாளை வழிபட்டுச் செல்ல சுப காரியம் அரங்கேறும். அவ்வாறு வேண்டியவை நிறைவேறியதும் துளசி, மாலை, குங்குமம் ஆகியவற்றுடன் வில்வ அர்ச்சனை செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
பாதாள சீனிவாசன்
திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாருடன் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாளைக் காணாத தாயார் கலக்கமுற்றார். அப்போது அவள் முன்தோன்றிய பெருமாள் தாயாரை மணமுடித்தார். திருமாள் ஒளிந்த இடம் பாதாள சீனிவாசர் சன்னதி என்றும், திருமனம் முடித்த இடம் மேட்டு சீனிவாசர் என்றும் வணங்கப்படுகிறது.
சொர்க்கவாசல் அற்ற தலம்
திவ்ய தேசங்கள் பெரும்பாலும் சொர்க்க வாசல் கொண்டிருக்கும். ஆனால், இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இதற்குக் காரணமாக, இத்தல மூலவர் வைகுண்டத்தில் இருந்து நேரே இங்கு வந்ததாகவும், இவரை வணங்கினார் முக்தி கிடைத்துவிடும் என்று நம்பப்படுகிறது. இதனாலேயே இங்கு சொர்க்கவாசல் அமைக்கப்படவில்லை என்கின்றனர்.
வீட்டோடு மாப்பிள்ளை
சாரங்கபாணி திருக்கோவில் தாயாரின் பிறந்த வீடாகும். திருமால், அவரைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இங்கே உள்ளார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சம் என்றாலும், இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எப்படிச் செல்லலாம் ?
கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவில். சென்னை, திருச்சி, மதுரை என மாநிலத்தின் எந்தப் பகுதிகளில் இருந்தும் ரயிலின் மூலம் கும்பகோணம் வந்தடையலாம்.