சதாரா மாவட்டத்தில் பலவிதமான கோயில்களும் கோட்டைகளும் ஏராளம் உள்ளன. இங்குள்ள அஜிங்க்யதாரா கோட்டை பிரசித்தமான வரலாற்றுச்சின்னமாக அறியப்படுகிறது. இது போஜ ராஜாவால் கட்டப்பட்ட கோட்டையாகும். சுமார் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை எதிரியின் தாக்குதலைச்சமாளிக்கும் வகையில் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கோட்டை வளாகத்துக்குள்ளேயே ஒரு அற்புதமான மங்களா தேவி கோயிலும் உள்ளது. இது தவிர மராத்திய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட வசோதோ கோட்டை மற்றும் சஜ்ஜன்காட் கோட்டை ஆகிய இரண்டு கோட்டைகள் இங்கு அமைந்துள்ளன. வாருங்கள் இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கலாம்.
ஆன்மீகம்
கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கு இந்த கோட்டைகள் மிகவும் பிடித்தமான அம்சங்களாக உள்ளன. கரே கணபதி கோயில், பைரோபா கோயில், கிருஷ்ணேஷ்வர் கோயில், பவானி மாதா கோயில் மற்றும் அபயங்கர் விஷ்ணு கோயில் போன்றவை சதாராவிலுள்ள முக்கியமான கோயில்களாகும். 500 வருடங்கள் பழமை வாய்ந்த கோடேஷ்வர் மந்திர் சிவனுக்காக 16ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டுள்ளதாகும்.
இயற்கை எழில்
கௌஸ் ஏரி மற்றும் கௌஸ் பீடபூமி இரண்டும் சதாராவின் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் அம்சங்களாகும். இங்கு பலவகை தாவரங்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்துள்ளன. இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான ஸ்தலமாக இது பிரசித்தி பெற்றுள்ளது. கௌஸ் ஏரி சதாராவுக்கு நீர் வழங்கும் ஆதாரமாகவும் உள்ளது.
நீர்வீழ்ச்சி
சதாரா பகுதியிலுள்ள தோஸேகர் நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் கண்கவரும் இயற்கை அம்சமாக அமைந்துள்ளது. மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் வித்தியாசமான சிலை ஒன்று போவாய் நாகா எனுமிடத்தில் உள்ளது. நாட்டில் வேறு எந்த இடத்திலும் இல்லாத வகையில் இது தனித்துவத்துடன் காட்சியளிக்கிறது.
உணவுகளும் சுவையும்
சதாராவுக்கு வருகை தரும் பயணிகள் இப்பகுதியில் பிரசித்தமான உணவு வகையான கண்டி பெதே எனும் இனிப்புப் பலகாரத்தை சுவைக்க மறக்கக்கூடாது. மறுபடி மறுபடி சுவைக்க தூண்டும் அளவுக்கு இதன் சுவை உள்ளது.
அதிக வெப்பம்
கோடைக்காலத்தில் சதாரா பகுதி மிக உஷ்ணத்துடன் காணப்படுவதால் இக்காலத்தில் சுற்றுலா நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இக்காலத்தில் பகலில் வெப்பநிலை சில சமயங்களில் 40°C வரை உயர்ந்து காணப்படுகிறது. இக்காலத்தில் இங்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டால் ஹோட்டல் அறையிலேயே அடைந்து கிடப்பதை தவிர வேறு வழியில்லை. வெப்பத்தை தணித்து பசுமையை கொண்டுவருவதால் மழைக்காலம் பெரிதும் விரும்பப்படுகிறது.
மழையில் ரசிக்கலாம்
மழைக்காலம் உங்களுக்கு பிடிக்கும் எனில் நீங்கள் சதாராவுக்கு மழைக்காலத்தில் பயணம் மேற்கொள்ளலாம். இருப்பினும் குளிர்காலம் எல்லாவிதத்திலும் பயணத்துக்கு உகந்ததாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் சூழல் இனிமையாகவும் இதமாகவும் காணப்படுகிறது. எனவே சுற்றிப்பார்ப்பதற்கும் பலவித இயற்கை அம்சங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களை ரசிப்பதற்கும் இது மிகவும் உகந்ததாக உள்ளது.
போக்குவரத்து வசதிகள்
சதாரா நகரம் எல்லா முக்கிய நகரங்களுடனும் விமான, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது. புனே விமான நிலையம் அருகாமையிலுள்ள விமான நிலையமாக உள்ளது. மேலும் சதாரா ரயில் நிலையம் உள் மாநில மற்றும் வெளி மாநில நகரங்களுடன் நல்ல முறையில் ரயில் சேவைகளைக் கொண்டுள்ளது.