சதாரா மாவட்டம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 10,500 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இது மேற்கில் ரத்னகிரி, கிழக்கில் சோலாப்பூர், வடக்கில் புனே, தெற்கில் சாங்க்லி போன்ற மாவட்டங்களை எல்லைகளாக கொண்டுள்ளது. ஏழு மலைகளை உள்ளடக்கியுள்ள காரணத்தால் சதாரா என்றழைக்கப்படுகிறது. சதாரா என்னும் சொல்லுக்கு ஏழு மலைகள் என்பது பொருளாகும். ஜரண்டேஷ்வர், யவடேஷ்வர், அஜிங்க்யாத்ரா, கிட்லிச்சா டோங்கார், சஜ்ஜன்காட், பெத்யாச்சா பைரோபா மற்றும் நக்டிச்சா டோங்கார் போன்றவை அந்த ஏழு மலைகளாகும்.
வரலாற்றுப்பின்னணி
சதாரா முதலில் ராஷ்டிரகூட ராஜவம்சத்தினரால் ஆளப்பட்டுள்ளது. பின்னர் சாளுக்கிய வம்சத்தினர் வசம் இருந்தபின் மௌரிய சாம்ராஜ்யத்தின் கீழ் வந்துள்ளது. முஸ்லிம் ஊடுறுவலுக்குப்பின் இந்த சதாரா மாவட்டம் மராத்தா ஆட்சியாளர்களிடம் 17ம் நூற்றாண்டில் இருந்துள்ளது.
முன்றாம் ஆங்கிலேய- மராத்தா போரில் ஆங்கிலேயர்கள் வென்றபின் அவர்கள் இந்த சதாரா பிரதேச நிர்வாகப்பொறுப்பை ராஜா பிரதாப் சிங்கிடம் ஒப்படைத்தனர். இறுதியாக சதாரா பிரதேசம் பாம்பே பிரசிடென்சியின் ஒரு அங்கமாக ஆங்கிலேய ஆட்சியின் போது இணைக்கப்பட்டது.
மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாக இந்த சதாரா நகரம் சுதந்திர விடுதலைப்போராட்ட காலத்தில் ஒரு முக்கிய கேந்திரமாக விளங்கியதையும் சொல்லலாம்.
சதாராவில் என்னென்ன விசேஷங்கள் உள்ளன
சதாரா மாவட்டத்தில் பலவிதமான கோயில்களும் கோட்டைகளும் ஏராளம் உள்ளன. இங்குள்ள அஜிங்க்யதாரா கோட்டை பிரசித்தமான வரலாற்றுச்சின்னமாக அறியப்படுகிறது. இது போஜ ராஜாவால் கட்டப்பட்ட கோட்டையாகும்.
சுமார் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை எதிரியின் தாக்குதலைச்சமாளிக்கும் வகையில் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கோட்டை வளாகத்துக்குள்ளேயே ஒரு அற்புதமான மங்களா தேவி கோயிலும் உள்ளது.
இது தவிர மராத்திய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட வசோதோ கோட்டை மற்றும் சஜ்ஜன்காட் கோட்டை ஆகிய இரண்டு கோட்டைகள் இங்கு அமைந்துள்ளன. கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கு இந்த கோட்டைகள் மிகவும் பிடித்தமான அம்சங்களாக உள்ளன.
கரே கணபதி கோயில், பைரோபா கோயில், கிருஷ்ணேஷ்வர் கோயில், பவானி மாதா கோயில் மற்றும் அபயங்கர் விஷ்ணு கோயில் போன்றவை சதாராவிலுள்ள முக்கியமான கோயில்களாகும். 500 வருடங்கள் பழமை வாய்ந்த கோடேஷ்வர் மந்திர் சிவனுக்காக 16ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டுள்ளதாகும்.
கௌஸ் ஏரி மற்றும் கௌஸ் பீடபூமி இரண்டும் சதாராவின் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் அம்சங்களாகும். இங்கு பலவகை தாவரங்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்துள்ளன.
இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான ஸ்தலமாக இது பிரசித்தி பெற்றுள்ளது. கௌஸ் ஏரி சதாராவுக்கு நீர் வழங்கும் ஆதாரமாகவும் உள்ளது. இவை தவிர சதாரா பகுதியிலுள்ள தோஸேகர் நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் கண்கவரும் இயற்கை அம்சமாக அமைந்துள்ளது.
மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் வித்தியாசமான சிலை ஒன்று போவாய் நாகா எனுமிடத்தில் உள்ளது. நாட்டில் வேறு எந்த இடத்திலும் இல்லாத வகையில் இது தனித்துவத்துடன் காட்சியளிக்கிறது.
சதாராவுக்கு வருகை தரும் பயணிகள் இப்பகுதியில் பிரசித்தமான உணவு வகையான கண்டி பெதே எனும் இனிப்புப் பலகாரத்தை சுவைக்க மறக்கக்கூடாது. மறுபடி மறுபடி சுவைக்க தூண்டும் அளவுக்கு இதன் சுவை உள்ளது.
இன்னும் சில தகவல்கள்
கோடைக்காலத்தில் சதாரா பகுதி மிக உஷ்ணத்துடன் காணப்படுவதால் இக்காலத்தில் சுற்றுலா நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இக்காலத்தில் பகலில் வெப்பநிலை சில சமயங்களில் 40°C வரை உயர்ந்து காணப்படுகிறது.
இக்காலத்தில் இங்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டால் ஹோட்டல் அறையிலேயே அடைந்து கிடப்பதை தவிர வேறு வழியில்லை. வெப்பத்தை தணித்து பசுமையை கொண்டுவருவதால் மழைக்காலம் பெரிதும் விரும்பப்படுகிறது.
மழைக்காலம் உங்களுக்கு பிடிக்கும் எனில் நீங்கள் சதாராவுக்கு மழைக்காலத்தில் பயணம் மேற்கொள்ளலாம். இருப்பினும் குளிர்காலம் எல்லாவிதத்திலும் பயணத்துக்கு உகந்ததாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்காலத்தில் சூழல் இனிமையாகவும் இதமாகவும் காணப்படுகிறது. எனவே சுற்றிப்பார்ப்பதற்கும் பலவித இயற்கை அம்சங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களை ரசிப்பதற்கும் இது மிகவும் உகந்ததாக உள்ளது.
சதாரா நகரம் எல்லா முக்கிய நகரங்களுடனும் விமான, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது. புனே விமான நிலையம் அருகாமையிலுள்ள விமான நிலையமாக உள்ளது.
மேலும் சதாரா ரயில் நிலையம் உள் மாநில மற்றும் வெளி மாநில நகரங்களுடன் நல்ல முறையில் ரயில் சேவைகளைக் கொண்டுள்ளது. சதாராவுக்கு காரில் செல்வதற்கு வசதியாக மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே மற்றும் பெங்களூர் – புனே எக்ஸ்பிரஸ்வே போன்றவை நல்ல முறையில் அமைந்துள்ளன.
சதாரா நகரம் உன்னதமான பாரம்பரிய வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்க்கும் எல்லா சுவாரசிய அம்சங்களையும் இது கொண்டுள்ளது. கோட்டைகளை சுற்றிப்பார்த்து மகிழ்வது, இயற்கை நடைப்பயணம் செல்வது மற்றும் காட்டுயிர் சரணாலயங்களுக்கு விஜயம் செய்வது போன்ற ஏராளமான பொழுது போக்கு அம்சங்களுக்கான ஸ்தலங்களை இது தன்னுள் கொண்டுள்ளது.
மராத்தா சாம்ராஜ்யத்தின் தலைநகராக ஒரு காலத்தில் விளங்கிய இந்த நகரம் தற்காலத்தில் பிரசித்தமான சுற்றுலாத்தலமாக மாற்றமடைந்துள்ளது. இந்தியப்பாரம்பரிய மேன்மையின் அடையாளங்களை கொண்டிருக்கும் இந்த தொன்மை வாய்ந்த நகரத்தை ஒரு முறையாவது விஜயம் செய்வது சிறந்தது.