சென்னைக்கு உள்ளேயும் சென்னையைச் சுற்றியும் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மால்கள், தியேட்டர்கள், ஷாப்பிங் செய்ய இடங்கள், பலவகையான உணவகங்கள், கோவில்கள், நினைவுச்சின்னங்கள் என எக்கச்சக்கமான இடங்கள் உள்ளன. ஆனால் இப்போது நீங்கள் இங்கு தெரிந்து கொள்ளப் போவது மிகவும் புதிதான ஒன்றாகும். ஆம்! அழகிய ஆற்றுப்படுகையை கொண்ட சீமாபுரம் ஏரியைப் பற்றி தான் நாம் காணப் போகிறோம். சென்னைக்கு அருகில் இப்படி ஒரு இடம் இருக்கிறது என்றே நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால் இப்போது அதனைப் பற்றிய முழு விவரங்களையும் காண்போம் வாருங்கள்!
அழகிய சீமாபுரம் அணைக்கட்டு
தமிழ்நாட்டின் பொன்னேரி தாலுக்காவில் இந்த சீமாபுரம் அணைக்கட்டு அமைந்துள்ளது. ஆனால் இது சென்னையில் இருந்த 35 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது. சென்னைவாசிகளுக்கு 35 கிலோ மீட்டர் தூரம் என்பது மிகவும் சாதாரணமான ஒரு தூரம் தான். ஏனெனில் வெறும் ஒரு மணி நேரத்தில் அடைந்திடலாம். எப்பொழுதும் சென்னையின் நகர வட்டத்திற்குள்ளேயே சுற்றும் நமக்கு இது ஒரு வித்தியசாமான சுற்றுலாத் தலம் என்று தான் கூற வேண்டும்.
சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகான இடமா
ஒரு அமைதியான அழகான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று உங்களுக்கு ஆசையாக உள்ளதா, ஆனால் சென்னை நகருக்குள் அப்படி எதுவும் இல்லை என்று குழம்பி கொண்டிருக்கும் மக்களுக்கு இது ஒரு அட்டகாசமான ஸ்பாட் ஆகும். நீங்கள் உங்கள் நண்பர்களுடன், குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நீந்தி மகிழலாம். இந்த ஆற்றுப்படுகையின் ஆழம் 5 அடி என்பதால் பெண்கள் குழந்தைகள் கூட பயமின்றி குளிக்கலாம். முக்கியமாக உங்கள் வீட்டு குட்டீஸ் நிச்சயம் இந்த இடத்தை ஒரு முறை பார்த்தால் மறுபடியும் அழைத்து போகச் சொல்லி நிச்சயம் அடம் பிடிப்பார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
எப்பொழுது இங்கு செல்ல வேண்டும்
நீங்கள் இந்த இடத்திற்கு எப்பொழுது வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் பருவமழைக் காலங்களில் இந்த அணை நிரம்பி நீர் வெறியேறும் பொழுது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கின்றது. ஆகவே நீங்கள் அக்டோபர் முதல் பிப்ரவரி இடையிலான நேரத்தில் இங்கு வருகை தரலாம். அப்பொழுது தான் பூண்டி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சீமாபுரம் அணையை வந்தடைகிறது. அணையில் இருந்து விழும் நீர் அப்படியே ஒரு நீர்வீழ்ச்சி போல இருக்கிறது, அதில் குளிப்பது தானே அட்டகாசமாக இருக்கும் மக்களே!
எப்படி செல்வது
இந்த இடம் சென்னையில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது, இங்கு வருவதற்கு பேருந்து வசதிகள் இருந்தாலும் கூட நீங்கள் உங்களுடைய சொந்த வாகனங்களில் அதாவது கார் அல்லது பைக்கில் வருவது நல்லது. மேலும் நீங்கள் குழந்தைகளுக்கு டவல், திண்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை கொண்டு வருவது நல்லது. அணைக்கு அருகிலேயே ஒரு 200 மீட்டர் தூரத்தில் பல சிறு சிறு கடைகளும் உள்ளன. வார இறுதி நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வார தினங்களில் இங்கு வந்தால் கூட்டம் சற்று குறைவாக காணப்படுகிறது, ஆகவே உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல நீங்கள் திட்டமிடவும். ஆனால் எது எப்படி இருந்தாலும் இது கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் சென்னை வாசிகளே!