இந்த உலகில் எவரொருவர் அமைதி தரும் பேரின்பத்தை பரிபூரணமாக நுகர விரும்புகிறாரோ, அவர் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் சேவாகிராம் தான். இந்த சிறிய நகரம் மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேவாகிராம் என்பதற்கு ஹிந்தியில் 'சேவை செய்யும் கிராமம்' என்று அர்த்தம். 1940-க்கு முன்பு ஷெயகாவ்ன் என்று அழைக்கப்பட்ட இந்த நகரம், காந்தியடிகள் இங்கு ஆஸ்ரமம் தொடங்கியபிறகு சேவாகிராம் என பெயர் மாற்றம் பெற்றது.

இந்தியாவின் உயரிய விருந்தோம்பல் பண்பிற்கும், மகத்தான சேவை மனப்பான்மைக்கும் நினைவுச் சின்னமாக விளங்கி வருகிறது இந்த சேவாகிராம் நகரம். சேவாகிராம் ஆஸ்ரமம் காந்தி அடிகள் பின்பற்றிய வாழ்கை முறையோடு இரண்டறக் கலந்து, அதன் பிரதிபலிப்பாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இங்கு காந்தியடிகளும், அவர் மனைவி கஸ்தூரிபாயும் ஒன்றாக வாழ்ந்த குடிசைகள் பயணிகளின் வரவை எதிர்பார்த்து இன்றும் உறுதியாக நின்றுகொண்டிருக்கிறது. இந்த குடிசைகள் அனைத்தும் எந்த வித அலங்காரங்களும் இன்றி, இயற்கையான கலைத்துவ தோற்றமும் சிறிதும் இல்லாமல் எளிமையாக காண்போரை பரவசப்படுத்தும்.
மாறாக இந்த குடிசைகள் ஈரமண் ஓடு, பாய்கள் மற்றும் மூங்கில்களை கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. இவைகளை பார்க்கும் போது காந்தியடிகள் எவ்வளவு எளிமையான வாழ்கையை வாழ்ந்தார் என்பது எல்லோருக்கும் சுலபமாக விளங்கும். மகாதேவ் குடில், கிஷோர் மற்றும் பர்ச்சுரே குடில்கள் போன்றவை இந்த ஆஸ்ரமத்தில் காணப்படும் பிற குடில்களாகும். இங்கு வரும் ஒவ்வொருவரும் சுதந்திர காலத்துக்கு முன்பு வாழ்வதை போன்ற ஒரு உணர்வை இந்த ஆஸ்ரமம் ஏற்படுத்தும். எப்போது சேவாகிராமில் காந்தியடிகள் ஆஸ்ரமம் அமைத்தாரோ அதன் பிறகு இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களிலிருந்து குடி பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லமால் இந்த நகரத்துக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பயணிகள், இந்தியாவின் ஆற்றல் மிக்க மனிதனின் வாழ்வு முறையை அறிந்து கொள்ளும் பேரார்வத்தோடு ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர்.

சேவாகிராம் நகரத்தின் குன்றா புகழுக்கு மூல முதல் காரணமாக விளங்கி வருவது சேவாகிராம் ஆஸ்ரமம் தான் என்று சொல்வதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. இந்த சிறிய நகரத்துக்கு 1936-ஆம் ஆண்டு வந்த காந்தியடிகள் 1948 வரை மொத்தம் 13 ஆண்டுகள், தன் வாழ்நாள் முழுமையும் இங்குதான் வாழ்ந்தார்.1930-ஆம் ஆண்டு சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து, தண்டி வரை பாத யாத்திரையை தொடங்கிய காந்தியடிகள், இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் வரை சபர்மதியில் கால் வைப்பதில்லை என்று சபதம் செய்தார். அப்போது தண்டி யாத்திரையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான காந்தியடிகள், சபர்மதி செல்லாமல் சேவாகிராம் வந்து ஆஸ்ரமம் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. அப்படித்தான் இந்த சேவாகிராம் ஆஸ்ரமமும் தொடங்கப்பட்டது.
சேவாகிராம் ஆஸ்ரமம் நிறைய பகுதிகளை கொண்டது. இங்குள்ள ஆதி நிவாஸ், வழிபாட்டுத் திடல், பா குடில், பாபு குடில் மற்றும் அக்ரி நிவாஸ் போன்ற பகுதிகள் காந்தியடிகளாலும், கஸ்தூரிபாயினாலும் அதிகமாக பயன்படுத்தப் பட்ட இடங்கள். மேலும், பாபுவின் சமையலறை, அத்ய ஆதி நிவாஸ், மகாதேவ் குடில், கிஷோர் நிவாஸ், பர்ச்சுரே குடில், ரஸ்த்தம் பவன் மற்றும் யாத்ரி நிவாஸ் ஆகியவை ஆஸ்ரமத்தின் இதர பகுதிகளாகும். இதில் யாத்ரி நிவாஸ் மட்டும் பயணிகளுக்கென்றே பிரத்தியேகமாக 1982-ஆம் ஆண்டு இந்திய அரசால் கட்டப்பட்ட விருந்தினர் இல்லமாகும்.



Click it and Unblock the Notifications




