நீலவானம், ஓயாத கடல், அழகான மணல் திட்டுக்கள், தேவாலயங்கள், பனைமரம், அழகிய கடற்கரை என நம்மை பிரமிக்க வைக்கிறது தூத்துக்குடியில் உள்ள மணப்பாடு கடற்கரை. தமிழ்நாட்டில் உள்ள மிகவும் அழகான ஆனால், அதிகம் பிரபலமடையாத சுற்றுலாத் தளங்களில் மணப்பாடு எனும் கடற்கரை கிராமமும் ஒன்று. பெரிய பெரிய வீடுகள், அழகிய தெருக்கள், ஆங்காங்கு ஆலயங்கள், அழகிய கடற்கரை என்று ஐரோப்பிய நகரைப்போல காட்சி தரும் மணப்பாடு, நாம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும், அது ஏன் என்று இங்கே கூறுகிறோம் வாருங்கள்!
தூத்துக்குடியில் அமைந்திருக்கும் அழகிய மணப்பாடு
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள மணப்பாடு, வரலாறு, மதம் மற்றும் இயற்கை அழகில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். இந்த கடற்கரை கிராமம் அதன் அமைதியான கடற்கரைகள், போர்த்துகீசிய பாணி கட்டிடக்கலை மற்றும் மத முக்கியத்துவத்திற்காக அறியப்படுகிறது. மணப்பாடு ஏன் பார்க்கத் தகுந்தது என்பது இங்கே!
பெயருக்கு ஏற்றார்போல் வரவேற்கும் மணப்பாடு
சின்ன ஆறு ஒன்று கடலில் கலக்கும் இடத்தில் இருந்து துவங்குகிறது இந்த அழகிய கடல் கிராமம். நீண்ட மணல் சரிந்த நீளமான அழகான கடற்கரை தான் மணப்பாடுவை மற்ற இடங்களுடன் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. மணலும் கடலும் காற்றுடன் உரசும் போது ஒரு அழகான பாட்டு இசைப்பதை போன்ற உணர்வு கிடைப்பதால் தான் இதற்கு மணப்பாடு எனும் பெயர் வந்து இருக்குமோ என்னவோ தெரியவில்லை! ஆனால், பெயருக்கு ஏற்றார்போல மணப்பாடு தனித்துவமாக காட்சியளிக்கிறது.

அழகும் கலாச்சாரமும் நிறைந்த மணப்பாடு
ஊரைத் தாண்டி கடற்கரையை நெருங்கினால் இயற்கையின் அதிசயத்தைக் காணலாம். கடலோரம் சரிவான மணல் குன்றுகள், மணல் குன்றின் மீது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு தற்போதும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் கலங்கரை விளக்கம். அதன் அருகில் வியக்கும் வகையில் போர்ச்சுக்கீசியக் மாடலில் வானுயர்ந்து நிற்கும் தொன்மையான தேவாலயங்கள் என மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து தீவு போல அமைந்துள்ளது மணப்பாடு கடற்கரை.
அழகிய தேவாலயங்கள் பல
16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அதன் அடித்தளத்துடன், இந்த பிரமிக்க வைக்கும் அமைப்பு, காலத்தால் அழியாத மாயத்தன்மையை வெளிப்படுத்துகிறது, தொலைதூரப் பார்வையாளர்களை வந்து அதன் மகிமையில் குதிக்க அழைக்கிறது. தேவாலயத்தை அலங்கரிக்கும் நுணுக்கமான வேலைப்பாடுகள் மற்றும் நுட்பமான கலைப்படைப்புகள் இந்த நேர்த்தியான தலைசிறந்த படைப்பை வடிவமைத்த திறமையான கைகள் மற்றும் கற்பனை மனதுக்கு ஒரு வணக்கம் தான் செலுத்த வேண்டும்.
கலை மற்றும் கட்டிடக்கலையின் மகத்துவம்
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மணப்பாட்டில் உள்ள ஹோலி கிராஸ் தேவாலயம், கலை மற்றும் கட்டிடக்கலையின் மகத்துவத்தை அனுபவிக்க விரும்பும் அனைவருக்கும் சிறந்த இடமாகும். நீங்கள் தேவாலயத்திற்குள் நுழையும்போது, அமைதியான சூழல் உங்களை வரவேற்கும், அது உங்களை அமைதி மற்றும் அமைதியின் ஒரு பகுதிக்கு அழைத்துச் செல்லும். ஹோலி கிராஸ் தேவாலயத்தின் உண்மையான ரத்தினம் அதன் சிக்கலான சிற்பங்கள் மற்றும் விரிவான கலைப்படைப்புகளில் உள்ளது.

கடலலையில் கால் நனைத்திடுங்கள்
மணப்பாடு கடற்கரையில் அமைந்துள்ள மணல் குன்றின் வட கடல் அமைதியாகவும், தென் கடல் ஆர்ப்பரித்தும் காட்சி அளிக்கும். இம்மணல் குன்றின் மீது நின்றுப் பார்த்தால் ஊரின் மொத்த அழகும் தெரிகிறது. கடலைப் பார்த்தவுடன் ஓடிச்சென்று கால் நனைக்கவும், குளிக்கவும் தோன்றும். அதே நேரம் கடலலைகள் வரும்போது கவனமாகவும் இருக்க வேண்டும்.
தமிழ் திரைப்படங்களால் பேமஸ் ஆன மணப்பாடு
அப்பகுதி மக்கள் மட்டும் ரசித்து வந்த மணப்பாடின் இயற்கை அழகை, தமிழக மக்களை அறிய வைத்து, அவர்கள் தேடி வருவதற்கு முக்கிய காரணம், 'இயற்கை, கடல், நீதானே என் பொன்வசந்தம், நீர்ப்பறவை, மரியான், சிங்கம்' போன்ற திரைப்படங்கள்தான். அப்படங்களில் மணப்பாடின் அழகை அருமையாகக் காண்பித்திருப்பார்கள்.
பழமையான வரலாறு கொண்ட மணப்பாடு
இந்த அழகான ஊருக்கு ஒரு முக்கிய வரலாறு இருக்கிறது. கி.பி. 1540 களில், போர்ச்சுகல் நாட்டைச் சார்ந்த கப்பல் கடும் சூறாவளியில் சிக்கி மூழ்கும் நிலைக்குப் போனது. தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட அந்தப் கப்பலின் கேப்டன், இயேசு கிருஸ்துவிடம், தன் கப்பல் எதேனும் ஒரு கரையை பத்திரமாக அடைந்தால் அங்கு ஒரு சிலுவையை நிறுவுவதாக வேண்டி கொண்டார். அதிசயமாக, அந்தப் படகு மணப்பாடு கரைக்கு வந்தது. சொன்னபடியே கப்பலின் கேப்டன் தன் கப்பலின் மர கொடிக்கம்பத்தில், ஒரு சிலுவையை மணப்பாடின் கரையில் அமைத்தார். இன்னும் நீங்கள் அந்த சிலுவையை மணப்பாடு கடற்கரையில் காணலாம்.

அதிசயமான நன்னீர் கிணறு
1542ஆம் ஆண்டில், ஃப்ரான்சிஸ் சேவியர் எனும் போர்ச்சுகிய பாதிரியார் இங்கு வந்து ஒரு குகையில் சில காலம் வாழ்ந்தார். இவர் மூலமாக கத்தோலிக்க கிருத்துவ மதம், மணப்பாடு, அதன் சுற்று வட்டாரம் முழுதும் பரவியது. இங்குள்ள மக்களுக்கு போர்த்துக்கீசிய குடும்ப பெயர்களான பர்னாந்து, மிராந்த, வாஸ், டிசில்வா, டிகோஸ்தா, டிரோஸ் போன்ற பெயர்களையும் இவரே வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. கடலிலிருந்து 20 மீட்டர் தொலைவில் இருக்கும் இக்குகையினுள் 20 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இக்கிணற்றின் நீர், உப்பு கரிக்காமல் நன்னீராக இருப்பது அதிசயமாகச் சொல்லப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் குகையில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு, கிணற்றில் தண்ணீர் எடுத்து குடிக்கிறார்கள். வீடுகளுக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
இவையெல்லாம் கூட இங்கு உண்டு தெரியுமா
நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளிநாட்டுப் பறவைகளும் மணப்பாடு கடற்கரைக்கு வந்து செல்லும். சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக அலைச்சறுக்கு, படகுப்போட்டி, காற்றாடி அலைச்சறுக்கு, பாய்மரக்கப்பல், நின்றுகொண்டே துடுப்பு போடுவது, பாராசூட்டில் பறப்பது எனப் போட்டிகளையும் அவ்வப்போது நடத்துகிறார்கள்.
மணப்பாடு கட்டாயம் பார்க்க தகுந்த இடம்
மணப்பாடு கடற்கரை, திருச்செந்தூரில் இருந்து 18 கிமீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து 60 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது. காலையிலிருந்து மாலைவரை கடற்கரையையும், மணல் குன்று, தேவாலயங்களையும், பார்க்க பார்க்க அலுக்காது. போதும் போதும் என்ற அளவுக்கு கடல் காற்றை சுவாசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி வரும்போது அருகிலுள்ள தேரிக்காட்டின் அழகையும் பார்த்து வரலாம். மதுரை, தூத்துக்குடி, திருசெந்தூர் மற்றும் அருகிலுள்ள மாவட்ட மக்கள் கட்டாயம் மணப்பாட்டுக்கு சுற்றுலா செல்ல வேண்டும்!



Click it and Unblock the Notifications




