கலைப் பொருட்கள் உற்பத்திக்காகவும், கைத்தொழில் வளர்சிக்காகவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் வடிவம்தான் இந்த ஷில்ப்கிராம். இந்த சிறிய கிராமத்தில் எண்ணற்ற கைவினை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இங்கு வரும் பயணிகள் அற்புதமான படைப்புகளை உருவாக்கும் கலைஞர்களின் கைவண்ணத்தை நேரில் காணும் அறிய வாய்ப்பை பெறுவது மட்டுமில்லாமல், அவர்கள் கண்முன்னே உருவான பொருளையே அவர்கள் வாங்கிச் செல்லலாம். குறிப்பாக இங்கு தயாரிக்கபடும் காஞ்சிஃபா கார்ட்ஸ், அலங்கரிக்கப்பட்ட வளையல்கள் மற்றும் நகைபெட்டிகள் போன்ற அரிய பொருட்கள் பயணிகளிடையே மிகப்பிரபலம்.
மரகதக் குன்றுகளுக்கும், பனை மற்றும் மாமரங்களுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் மோட்டி தலாவ், கருங்கற்களுக்கு நடுவே கிடக்கும் ஒரு முத்தை போலே பிரகாசமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஏரி ராயல் பேலஸின் முன்பு செயற்கை முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு வரும் பயணிகள் படகு சவாரி மற்றும் பிற நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.
தி ராயல் பேலஸ், கேம் சாவந்த் போன்ஸ்லே மூன்றாம் மன்னரின் ஆட்சியில், 1755 மற்றும் 1803-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டது. இந்த அரண்மனை முழுக்க முழுக்க செங்கற்களால் எழுப்பப்பட்டிருக்கும் கலாச்சார சின்னமாகும். மேலும் இதன் உட்சுவர்களில் வரிசையாக காணப்படும் அரசர் கால பழைய புகைப்படங்கள் பற்பல கதைகளை நமக்கு சொல்லும். அதோடு இந்த அரண்மனையின் அழகிய வேலைப்பாடுகளை உடைய அறைகளும், போராயுதங்களும், கலைப்பொருட்களும் நம்மை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அழைத்துச் சென்று விடும்.