தலைப்பை படித்தவுடன் சற்று குழப்பமாக இருக்கிறதா? ஆனால் இது உண்மை தான்! ஒரே டிக்கெட்டை வைத்துக் கொண்டு நீங்கள் சென்னை மாநகர பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலில் பயணிக்கலாம். அந்த வசதி கூடிய விரைவில் வரவிருக்கிறது. பயணிகள் ஒரே ஒரு டிக்கெட்டில் மாநகர பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோவில் பயணிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் மூலம் இந்த தகவல் உறுதியாகியுள்ளது. இந்த வசதி நடைமுறைக்கு வந்த உடனே பொதுமக்கள் சென்னை மாநகர பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோவில் ஒற்றை டிக்கெட்டை வைத்துக் கொண்டு பயணம் செய்யலாம்!
அதிகப்படியான மக்களால் உபயோகிக்கப்படும் சென்னை மாநகர போக்குவரத்து
லட்சக்கணக்கான சென்னை மெட்ரோ சிட்டி மற்றும் புறநகர் வாசிகள் ஒவ்வொரு நாளும் தங்களின் அன்றாட வேலை, கல்வி மற்றும் பல்வேறு நோக்கங்களுக்காக சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ, ரயில்கள் போன்ற நகர்ப்புற மற்றும் புறநகர் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வரை இயங்கும் புறநகர் ரயில்களை பெரும்பாலான சென்னை மாநகர மக்கள் உபயோகித்து வருகின்றனர். அதோடு சென்னை மாநகருக்குள் செல்ல பேருந்துகளையும், மெட்ரோவையும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
மூன்று போக்குவரத்தையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம்
சென்னைக்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ஒரே ஒரு போக்குவரத்தை மட்டும் நம்பியிருப்பது என்பது சாத்தியம் இல்லை. ரயிலில் ஏறினாலும் பேருந்து, மெட்ரோ மற்றும் ஷேர் ஆட்டோ இல்லாமல் நாம் செல்ல வேண்டிய இலக்கை அடைய இயலாது. ரயிலில் சென்றாலும் பேருந்து, மெட்ரோ என ஏறி ஏறி இறங்குவதும் பலமுறை டிக்கெட் வாங்குவதும் சற்று கடினமாக தான் இருக்கிறது அல்லவா.
நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்துக் கழகத்தின் (CUMTA) முதல் ஆணையக் கூட்டத்தில், பள்ளி நேரத்தைக் கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். CUMTA சட்டம் நிறைவேற்றப்பட்டு 12 ஆண்டுகள் ஆன நிலையில், சென்னையில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரேயொரு டிக்கெட்டை வைத்து சென்னை மாநகரம் முழுக்க பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோவில் பயணிக்கக்கூடிய சாத்திய கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
கூடிய சீக்கிரத்தில் ஒற்றை டிக்கெட் வசதி
ஒரேயொரு டிக்கெட்டை வைத்து பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோவில் பயணிப்பதற்கான வசதியை ஏற்படுத்தும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து கழகம் அணுகியிருக்கிறது. இதற்காக க்யூ ஆர் கோடு முறையிலான டிக்கெட் வழங்கும் திட்டம் உருவாகவிருக்கிறது. மெட்ரோ, பேருந்து, புறநகர் ரயில் என மூன்று சேவைகளுக்கும் தனித்தனி க்யூ ஆர் கோடுகள் வழங்கப்படும். பயணி, தான் செல்ல வேண்டிய இடத்தை தேர்வு செய்ததும், அவர் எந்த போக்குவரத்தில் செல்லலாம் எனவும் தகவல் வெளிவரும். அதற்கேற்ப அவர்கள் சேவைகளை உபயோகித்துக் கொள்ளலாம். ரயில், பேருந்து, மெட்ரோ இந்த மூன்று சேவைகளையும் நீங்கள் பயன்படுத்தி பயணிக்கலாம்.
இதனுடன் இணையும் பல வசதிகள்
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், சாலைகளில் போக்குவரத்தை குறைக்கவும், மாசுபாட்டை குறைக்கவும் பொது போக்குவரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு ரயில் இணைப்பு வழங்குதல் போன்ற திட்டங்களுக்கும் ஆணையக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தனி நபர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும் ஒரே டிக்கெட் அல்லது குடும்பத்தினர் வெவ்வேறு இடங்களுக்கு செல்வதாக இருந்தால் அவர்களுக்கு என தனித்தனி டிக்கெட்டுகள் என பல்வேறு வசதிகள் இதில் சேர்க்கப்பட உள்ளன.
ஒரே நபர் மூன்று போக்குவரத்து சேவைகளையும் பயன்படுத்த வேண்டும் என்றால் இனி தனி தனியே நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. கூடிய விரைவில் நீங்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம்!