காணக்கிடைக்கின்ற சுற்றுலாவுக்கு மத்தியில் தேடிப் போகும் தொலை தூர சுற்றுலாக்கள் மக்களை அதிகம் ஈர்ப்பதில்லை ஏனோ... சாகசப் பிரியர்களும், மலைப் பயண விரும்பிகளும்தான் இந்தமாதிரியான பயணத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் இது அவர்களுக்கு மட்டுமல்ல.. நாமும் இதுமாதிரியான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மனதிடம் பெறுவதுடன், அழகிய சில இடங்களையும் பார்க்கமுடியும். அத்துடன் மனசுக்கு புத்துணர்ச்சியையும் உருவாக்கமுடியும். வாருங்கள் பெங்களூர் அருகே இருக்கும் இந்த அற்புதமான இடத்துக்கு ஒரு மலையேற்றப் பயணம் செல்வோம்.
ஸ்கந்தகிரி எங்குள்ளது
கலவர துர்க்கா என்று அழைக்கப்படும் ஸ்கந்தகிரி, பெங்களூருவிலிருந்து 50 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது சிக்பல்லபூரிலிருந்து 3 கிமீ தொலைவு ஆகும். இது ஒரு மலைக் கோட்டை இதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
ஈர்க்கும் இடங்களும் செய்யவேண்டியவையும்
அழகான மாலை நேரம், வெய்யில் கொஞ்சம் குறைந்து இதமான காற்றை உங்களுக்கு பரிசாக வழங்கும்போது, மலையேற்றம் செய்தல் புத்துணர்ச்சியை உண்டாக்கும். மலையுச்சிக்கு செல்ல இரவு ஆகிவிடும். மலை உச்சியில் முகாம் இடுதல், காலை சூரிய உதயத்துக்கு முன்பே மலையேறி அங்கு சூரிய உதயத்தை கண்டு களித்தல், கைகளுக்கு எட்டும் தொலைவிலேயே மேகக் கூட்டங்கள் செல்வதை பார்த்து ரசித்தல், அமைதியான கடல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அவற்றை மிக அருகில் பார்த்தல் உள்ளிட்ட ஈர்க்கும் செயல்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவருகிறது.
ஸ்கந்தகிரி மலை பற்றிய சில தகவல்கள்
கந்தவராஹல்லி எனும் அழகிய கிராமம். இதை ஒட்டி அமைந்துள்ள மலையில் டிரெக்கிங். அந்த மலையின் பெயர் கந்தவராஹல்லி பெட்டா. இது பெங்களூர் வாசிகள் வார இறுதிகளில் படையெடுக்கும் நந்தி மலைகளில் ஒன்றாகும். இது மலைக்கோட்டை என்பதை முன்னரே சொல்லியிருந்தோம். திப்பு சுல்தானின் அரிய வகைக் கோட்டைகளையும், பாழடைந்து சுவர்களையும் இங்கு காணமுடியும்.
பிரிட்டிஷ் Vs திப்பு
பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போர் புரிந்த திப்பு சுல்தானைப் பற்றி நாம் அதிகம் கேள்விப் பட்டிருப்போம். அவரது பல வெற்றிகளுக்கு இந்த இடத்தில் இருக்கும் கோட்டையும் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பிரிட்டிஷாரை எதிர்த்து போர் புரிந்த போது திப்பு இந்த கோட்டையை ராணுவத் தளமாக பயன்படுத்தினார் என்பது வரலாறு. நாம் இதை ஒரு வரலாற்றுத் தளமாக காணவேண்டும்.
குகைகள்
இந்த மலையில் இரண்டு குகைகள் இருக்கின்றன. ஒன்று அடிவாரத்திலிருந்து தொடங்குகிறது. இங்கிருந்து ஒரு பாதை கோவில் உச்சி வரை செல்கிறது. அது மலையில் இருக்கும் ஒரு கோட்டையில் சென்று முடிவதாக நம்பப்படுகிறது. இன்னொரு குகையில் மலைப் பாம்புகளும், சிங்கம் போன்ற காட்டு விலங்குகளும் வந்து செல்வதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. இங்கு வரும் ஆடுகளை அவை அடித்து விடுகின்றன என்ற பேச்சும் பரவலாக இருக்கிறது. இந்த குகையில் 6 சமாதிகள் இருக்கின்றன. அவை புனிதமாக கருதப்படுகின்றன.
சில தகவல்கள்
இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1350 மீ உள்ளது. இது பெங்களூருவிலிருந்து 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள நகரம் சிக்பல்லபூர் ஆகும். இது இந்த மலையிலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இதன் அருகிலுள்ள விமான நிலையம் தேவனஹல்லி. இங்குதான் ரயில் நிலையமும் அமைந்துள்ளது.
பயணவழிகாட்டி
ஸ்கந்தகிரிக்கு செல்ல இரண்டு வழித்தடங்கள் இருக்கின்றன.
முதல் வழித்தடம் - பெங்களூரிலிருந்து தொட்டபெல்லபுரா வழியாக ஸ்கந்தகிரி மலையை அடைவது.
இரண்டாவது வழித்தடம் - பெங்களூரிலிருந்து தேவனஹல்லி வழியாக ஸ்கந்தகிரி மலையை அடைவது.
பெங்களூர் - தொட்டபெல்லபுரா - ஸ்கந்தகிரி
பெங்களூரிலிருந்து இந்த வழியில் செல்லும் பயணம் மொத்தம் 68 கிமீ தூரத்தைக் கொண்டதாகும்.
எலஹங்காவிலிருந்து சிங்கநாயக்கஹல்லி, ராஜனுக்குன்டே, பசெட்டிஹல்லி வழியாக தொட்டபெல்லாபுராவை அடையலாம்.
பின் தொட்டபெல்லாபுராவிலிருந்து நந்தி மலை வழியாக ஸ்கந்தகிரி மலையை அடையலாம்.
மொத்த பயண நேரம் 2 மணி நேரம் ஆகும்.
பெங்களூர் - தேவனஹல்லி - ஸ்கந்தகிரி
இந்த வழித்தடத்தில் மொத்த பயண தூரம் 61 கிமீ ஆகும். இது மொத்தம் 1.30 மணி நேர பயணம் ஆகும்.
எலஹங்கா, சிக்கஜலா வழியாக தேவனஹல்லியை அடையலாம். அங்கிருந்து நந்தி மலை வழியில் சென்று ஸ்கந்தகிரியை அடையலாம். அல்லது இன்னொரு வழியும் இருக்கிறது.
நந்தி மலை செல்லாமல், சடலாபுரா வழியாக கந்திகனஹல்லிக்கு சென்று அங்கிருந்து பந்தஹல்லி வழியாக கல்வாராவை அடைந்து ஸ்கந்தகிரிக்கு செல்லலாம்.
கல்வாரா கிராமத்திலிருந்து எப்படி மலையேற்றம்
கல்வாரா கிராமத்தில் ஓங்கார ஜோதி ஆஸ்ரமா ஒன்று உள்ளது. இங்கும் பல சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். நந்தியிலிருந்து கல்வரா கிராமம் கல்வாராவிலிருந்து பாபக்னி மடம் செல்ல மொத்தம் 6 கிமீ தூரம் ஆகும்.
முன்னெச்சரிக்கையும் பின்பற்றவேண்டியவையும்
தண்ணீர், முதலுதவிப் பெட்டி, திண்பண்டங்கள், தேவையான உணவு மற்றும் மலையேற்றத்துக்கு தேவைப்படும் பொருள்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லமறக்காதீர்கள்.
இங்கு வருபவர்கள் மலை உச்சியில் முகாமிட்டு, முட்டை, குளிர்பானங்கள், தேனீர், பப்ஸ் போன்ற சில உள்ளூர்காரர்களால் விற்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றனர். உள்ளூர் வாசிகளே இங்குள்ளவர்களுக்கு பயண வழிகாட்டிகளாகவும் செயல்படுகின்றனர்.
மலையேற்றம்
இருட்டில் மலையேறுதல் என்பது பொதுவானதாக இருக்கிறது. அழகான பௌர்ணமி நாளில் இரவு நேரத்தில் நண்பர்களுடன் மலையேறுவது மிகவும் நெகிழ்ச்சியூட்டும் தருணமாகவும், மகிழ்ச்சியானதாகவும் அமையும்.
இரண்டு நேரங்களில் மலை ஏறுவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.
முதலில் பெரும்பாலும் மக்கள் தேர்ந்தெடுப்பது மதிய வேளைகளில் செல்வதைத்தான். அப்போதுதான் மாலையில் சூரிய மறைவை காண முடியும்.
இரவு நேரங்களில் மலையேறும் மக்களும் இருக்கிறார்கள். அவர்கள நண்பர்களுடன் சேர்ந்து மலையேற்றம் செய்கிறார்கள்.
கடினமான மலையேற்றப் பயணம்
மலை அகன்றும் மிக உயரமானத் தோற்றத்துடனும் இருப்பதால், இந்த மலையேற்றம் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. மலையேற்றப்பயணம் மலை அடி வாரத்தில் இருக்கும் பாபக்னி எனும் கோவிலிலிருந்து ஆரம்பிக்கிறது. செங்குத்தான மலை, புதர்கள் நிறைந்த வழி ஒரு வித்தியாசமான மலையேற்றத்தை ரசிக்க வைக்கிறது இது மறைப்பான மலையாக அறியப்படுகிறது. இதன் நால்புறமும் மலைகள் காணப்படுகின்றன.
கர்நாடக அரசு பராமரிப்பு
இங்கு மக்கள் அதிகம் வருவதைப் பார்த்த கர்நாடக அரசு இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு சில வசதிகள் செய்து கொடுத்துள்ளது. வண்டிகள் நிறுத்த ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. அதுமட்டமில்லாமல்,இந்த இடத்தை பராமரித்து இங்கு வரும் ஒவ்வொருவரிடமும் 20 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறது.
பழங்கால சிலைகள்
இந்த மலையேற்றப் பயணத்தில் சில இடங்களில் பாதி சிதைந்த நிலையில் சில பல கற்களால் ஆன சிலைகள் கிடைக்கின்றன. முக்கியமாக கோவில் ஒன்றின் அடிவாரத்தில் 100 மீ தூரத்தில் பழங்கால இந்து மத தெய்வ சிலைகள் கிடைக்கின்றன. இவை 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும். மறக்காமல் கேமராவுடன் சென்று அனைத்து இடங்களையும் படமெடுத்து, நினைவுச் சின்னமாக்குங்கள்.