கோடைக்காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதும், சுற்றுலா செல்வதும் என பொதுமக்கள் பயணிக்க தொடங்கிவிடுவார்கள். அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்திய ரயில்வே தமிழகத்தில் சம்மர் ஸ்பெஷல் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது! பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 2024 இல் கோடைகால சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை இயக்கப்படும்!
அவ்வப்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்
பண்டிகைக் காலங்களில் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் முழு முன்பதிவு அடிப்படையிலான சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குகிறது. 2023 ஆம் ஆண்டில், இந்திய இரயில்வே தீபாவளி மற்றும் சத் பூஜைக்கு 283 பண்டிகை சிறப்பு ரயில்களை அறிவித்தது, மேலும் திருவிழா காலங்களில் சுமார் 4,480 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான பயணிகள் பலன்
தீபாவளி மற்றும் சத் பூஜை மற்றும் ஓணம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஓணம் பண்டிகையின் போது கேரளாவிற்கு வரும் பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இருந்தது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது பல வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பலன் பெற்றனர்.
சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் ரயில்
கோடைக்காலத்தில் சுற்றுலா செல்லவும், சொந்த ஊர்களுக்கு செல்லவும் மக்கள் அதிகப்படியாக பயணம் செய்வார்கள் என்பதால் கோடைக்கால சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் இந்தியாவின் பல வழித்தடங்களில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது சென்னையிலிருந்து திருச்சி - மதுரை வழியில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகவுள்ளது.
சென்னை-நாகர்கோவில் சிறப்பு வந்தே பாரத் சேவை
ரயில் எண் 06057, சென்னை எழும்பூரில் இருந்து காலை 5:15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். மறு பயணத்தில், ரயில் எண் 06058 நாகர்கோவிலில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

கட்டணம் எவ்வளவு
வரும் ஏப்ரல் 19, 20, 21, 26, 27, 28 ஆகிய தேதிகளில் கோடை சிறப்பு வந்தே பாரத் ரயிலாக இயக்கப்படவுள்ளது. ஈசி சேர் காரில் வெயிட்டிங் பட்டியல் 25ஐ தாண்டி விட்டது. இதன் கட்டணம் 1,605 ரூபாய் ஆகும். எக்ஸிக்யூடிவ் பெட்டியில் ஏப்ரல் 26, 28 ஆகிய தேதிகளில் மட்டும் டிக்கெட்டுகள் உள்ளன இதன் கட்டணம் 3,245 ரூபாய் ஆகும். இடையில் திருச்சி, மதுரைக்கு செல்வதற்கு வெயிட்டிங் பட்டியல் 25ஐ தாண்டி விட்டது கவனிக்கத்தக்கது.
கூடிய சீக்கிரத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர்
ரயில் பயணிகளின் அனுபவத்தை உயர்த்தியது மட்டுமின்றி ரயில்வே நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்தியுள்ள வந்தே பாரத் ரயில்கள் தற்போது அடுத்த கட்டத்தில் கால் எடுத்து வைக்கின்றன. இப்போது, இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக டிசம்பர் 2024க்குள் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது! இதன் மூலம் வசதியான மற்றும் விரைவான பயணம் பயணிகளுக்கு கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் இந்த வந்தே பாரத் கோடை சிறப்பு ரயில்கள் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். தற்போது ஏப்ரல் மாதம் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தாலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப இந்த சேவை நீட்டிக்கப்படலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications





