தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் கோடைக் கால நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கப்பட்டுள்ளது. 'நீச்சல் கற்றுக்கொள்' (Learn to Swim) என்ற பெயரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டு குட்டீஸ்களை இந்த கோடைக்கால நீச்சல் முகாம்களுக்கு செல்ல அனுப்ப மறக்காதீர்கள்!
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் நீச்சல் முகாம்
சென்னை, SADT எனும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கோடையில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் நடப்பது வழக்கம். சென்னையில் ஷெனாய் நகர், வேளச்சேரி மற்றும் அண்ணா சதுக்கம் ஆகிய மூன்று நீச்சல் குளங்களில், பல்வேறு கட்டமாக இம்முகாம் நடக்கும். அதன்படி, ஷெனாய் நகரில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் அரங்கில், முதல்கட்ட நீச்சல் பயிற்சி முகாம், சமீபத்தில் துவங்கியது.

கோடை முழுவதும் நீச்சல் முகாம்கள்
இந்த வருடத்திற்கான நீச்சல் முகாம்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கியது. முதல் நிலை முகாம்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரையிலும், அடுத்த கட்ட முகாம்கள் ஜூன் 23 ஆம் தேதி வரை கூடுதல் முகாம்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் முகாம்கள் 5 நிலைகளிலும், 6 வகைகளிலும் நடத்தப்படும் என்றும் காலையிலும் மாலையிலும் 3 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கே? கட்டணம் எவ்வளவு?
வேளச்சேரி, ஷெனாய் நகர், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளம், நேரு உள்விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. நகரக் குளங்களுக்கு 2,000 ரூபாயும், நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள குளத்தில் பயிற்சி பெற 2,400 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் வகுப்பில் கலந்து கொள்ளும் சிறுவர் சிறுமிகளுக்கு கட்டாயம் 8 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
தினமும் நடத்தப்படும் வகுப்புகள்
இந்தாண்டு, ஐந்து கட்டங்களாக நீச்சல் பயிற்சி முகாம்கள் நடக்க உள்ளன. இதில், 8 வயது முதல் அனைவரும் பங்கேற்கலாம். சிறுவர்கள், 120 செ.மீ., உயரத்தில் இருக்க வேண்டும். முகாம் தினமும் காலை, 6:00 முதல் 9:30 மணி வரை மூன்று வகுப்புகளும், மாலை 3:00 முதல் 6:30 மணி வரை மூன்று வகுப்புகளும் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து, மற்ற விளையாட்டுகளுக்கும் பயிற்சி முகாம்கள் விரைவில் துவங்க உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் ஷெனாய் அரங்கில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
மறக்காமல் உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்த்து விடுங்கள்
கோடை விடுமுறையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் உங்கள் வீட்டு குழந்தைகளை ஆக்கப்பூர்வமான முறையில் நேரம் கழிக்க வைக்க இந்த மாதிரியான வகுப்புகளில் சேருங்கள். அனைவரும் நீச்சல், அவசர உதவி, கராத்தே, யோகா உள்ளிட்ட கலைகளை கற்று இருப்பது இக்காலத்தில் அவசியமாக இருக்கிறது. மறக்காமல் இந்த கோடையில் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு நீச்சல் கற்று கொடுங்கள்!



Click it and Unblock the Notifications





