டிஸ்னிலேண்ட் மற்றும் ஹாரி பாட்டரின் மந்திரவாதி உலகத்தைப் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம். எண்ணற்ற கேளிக்கைகளுடன் உலகில் பல தீம் பூங்காக்கள் உள்ளன. ஆனால் இந்திய புராணங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தீம் பார்க் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில் இருக்கிறது.
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் அமைந்துள்ள சுரேந்திரபுரி ஒரு தனித்துவமான, புராணங்களின் அடிப்படையில் ஒரு தீம் பார்க்கை கொண்டுள்ளது. அழகான சிற்பங்கள், இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில்களின் மாதிரிகள், புராணக் கதைகளின் பிரதிபலிப்புகள் என இந்த தீம் பார்க்கில் ஏராளமான அதிசயங்கள் உள்ளன. என்னவென்று தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்!

இந்த வித்தியாசமான தீம் பார்க்கை எழுப்பியவர் யார்?
புராண அதிசயமான சுரேந்திரபுரி, ஸ்ரீ குந்தா சத்யநாராயணன் என்ற தனி ஒரு மனிதரின் முயற்சியால் உருவானது என்றே கூற வேண்டும். அவர் தெலுங்கானாவின் கம்மம் அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறார். இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகள் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பின் காரணமாக ஒரு புராண தீம் பார்க் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது, அதுவே இந்த பிரதிபலிப்பு. இவர் பெயரிலேயே இந்த தீம் பார்க் "குந்தா சத்யநாராயணா மித்தாலாஜிக்கல் தீம் பார்க்" என்று அழைக்கப்படுகிறது.

அங்கே அப்படி என்ன தான் ஸ்பெஷல்
இந்தியாவின் சிறந்த யாத்ரீக ஸ்தலங்களையும் ஒரே இடத்தில் பார்க்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த சுற்றுலாவாகும். அமிர்தசரஸ் பொற்கோயில்கள் முதல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் வரை, கொல்கத்தாவின் காளி கோவில் முதல் பூரி ஜகன்னாதர் கோவில் வரை, குஜராத்தின் சோம்நாத் கோவில் முதல் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் வரை, ஏன் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் வரை எண்ணற்ற பிரபலமான கோவில்களின் பிரதிகளை இங்கே நாம் காணலாம். சுரேந்திரபுரியின் உள்ளே 3 கிலோமீட்டர் தூரத்தில் 3000க்கும் மேற்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகள் உள்ளன. மேலும் இங்கு நீங்கள் பல்வேறு தெய்வங்களின் சன்னதிகளையும், ஓவியங்களையும் கண்டு களிக்கலாம்.

வேறு என்னவெல்லாம் இங்கே இருக்கிறது?
குந்தா சத்யநாராயண கலாதமம் - இந்த முழுமையான ஆன்மீக மற்றும் புராண அருங்காட்சியகத்தில் வளமான புராண, கலாச்சார மற்றும் இந்திய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் சிற்பங்கள், படங்கள் மற்றும் ஓவியங்களை நாம் காணலாம்.
பஞ்சமுக ஹனுமதீஸ்வர ஆலயம் - பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் சிற்பங்களால் ஆன பிரமாண்ட நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. காஞ்சியில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ள 16 அடி உயர பஞ்சமுக அனுமன் சிலை இதன் பிரதான ஈர்ப்பாகும்.
நவக்கிரக கோவில்கள் - நவகிரகங்கள் அனைத்தும் தங்களது மனைவிகளுடன் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றன. ந்த கிரஹத்திற்கு என்ன பூஜை செய்ய வேண்டும் என்பது பற்றிய அனைத்து விவரங்களும் ஒவ்வொரு கோவில்களிலும் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கப்பட்டுள்ளன. இங்கே நாம் பரிகார பூஜைகளும் செய்யலாம்.
பஞ்சமுக ஹனுமன் மற்றும் சிவன் - 60 அடி உயரமுள்ள பஞ்சமுக சிவன் மற்றும் பஞ்சமுக ஹனுமன் சிலைகளைக் கண்டு நாம் வியப்படையாமல் இருக்க முடியாது. பஞ்சமுக ஹனுமன் வானர, நரசிம்மர், கருடன், வராஹ மற்றும் ஹயக்ரீவர் முகங்களைக் கொண்டுள்ளார். பஞ்சமுக சிவன் சிலை பஞ்சபூதங்களின் முகங்களை ஒரு சேரக் கொண்டு காட்சி தருகிறார்.
நாககோடி - நாகாத்ரி மலையின் மேல் அமைந்துள்ள பிரம்மாண்டமான 101 அடி சிவலிங்கம் காலசர்ப்பத்தால் சூழப்பட்டு மிக பிரமாண்டமாக காட்சி தருகிறது. இதனைக் காணவே இங்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது.

மத முக்கியத்துவம் வாய்ந்த தீம் பார்க்
இது பொழுதுபோக்கு அம்சத்திற்காக மட்டுமல்லாமல், பல்வேறு மத நம்பிக்கைகளுடன் செயல்படுகிறது. இங்கு நீங்கள் ஹனுமன் சன்னதியில் சுப்ரபாதசேவா, மந்யுஸுக்தம் ஸஹஷோதோபசார பூஜா, பஞ்சமுத்ராநிஜாபிஷேகம், மன்யுசூக்தம் பாராயணம் ஆகியவற்றில் கலந்துக் கொள்ளலாம, மேலும் நாக கோடியில் நாக தோஷம், குஜ தோஷம், காலசர்ப்ப தோஷம் ஆகியவற்றை மேற்கொண்டால் தோஷங்களில் இருந்து முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பரவலாக பேசப்படுகிறது.

எப்பொழுது மற்றும் எப்படி செல்ல வேண்டும்?
இந்த புராண தீம் பார்க் ஹைதராபாத் நகரில் இருந்து 59 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நீங்கள் ஹைதராபாத்தில் இருந்து டாக்ஸி அல்லது பேருந்து மூலம் சுரேந்திரபுரியை ஒன்றரை மணி நேரத்தில் அடைந்திடலாம். பெரியவர்களுக்கு ரூ. 350 , பத்து வயதிற்கு குறைவான சிறார்களுக்கு ரூ. 300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த தீம் பார்க் வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கிறது.



Click it and Unblock the Notifications





