அரசியல், விளையாட்டு, சினிமா என பலதரப்பட்ட துறைகளில், தேசியம் மட்டுமின்றி உலகளவில் கொடி கட்டி பறக்கும் நட்சத்திரம், பிரபலங்களுக்கு என ஒரு ரசிகர்கள் கூட்டம். இந்த பிரபலங்கள், அவர்களின் பெரும்பாலானோருக்கு ரோல் மாடல்.
அப்படி உங்களுக்கு பிடித்த நட்சத்திரம் அல்லது பிரபலத்தின் அருகில் செல்ஃபி எடுக்க உங்களுக்கு எப்போதாவது வாய்ப்பு கிடைத்துள்ளதா?. சரி விடுங்க, உங்களுக்கு அப்படி அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன. இந்த கோடைக்கு இதோ இன்னொரு சிறந்த மாற்று வழியை நாங்கள் சொல்லுகிறோம்.
அதாவது நட்சத்திரம், பிரபலங்களின் அச்சு அசல், அதாவது உயிர்மிகு மெழுகு சிலைக்கு அருகில் நின்று செல்ஃபி எடுக்கலாம். உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்றால், அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் என, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இந்த கோடை விடுமுறையில், தேசிய மற்றும் சர்வதேச பிரபலங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துவிட்டு வரலாம் தானே... தத்ரூபமாக உங்களுக்கு பிடித்தவர்களை நேரில் சந்திப்பது போன்ற ஒரு உணர்வு நிச்சயம், இங்குள்ள மெழுகு சிலை மியூசியம் வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

எப்படி போவது
கோடை விடுமுறைக்கு, தென்கோடி பகுதியான கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தா? சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை ஒரு சேர காணும் வாய்ப்பை பெறும் நீங்கள், கன்னியாகுமரி கடற்கரையோரம் அமைந்துள்ள பேவாட்ச் கேளிக்கை பூங்காவுக்கு அருகே தான் இந்த 'வேக்ஸ் மியூசியம்' உள்ளது.
லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்திற்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பல்வேறு பெரிய மெழுகு அருங்காட்சியகங்களுடன் ஒப்பிடும் போது, கன்னியாகுமரி மெழுகு அருங்காட்சியகம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் அளவுக்கு இல்லை என கருதினாலும், உங்கள் குழந்தைகள் இந்த அருங்காட்சியகத்தை நிச்சயம் விரும்புவார்கள். அவர்களின் அன்பான நட்சத்திரங்களின் உருவங்களை அச்சு அசலாக நெருக்கமாகப் பார்க்கும் வாய்ப்பு, இங்கு அவர்களுக்கு வாய்க்கப் பெறும்.

யார், யார்
வரலாற்று பிரமுகர்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு பிரமுகர்கள் போன்றோர், இங்குள்ள மியூசியத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மகாத்மா காந்தி, அன்னை தெரசா, இந்திரா காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர். மன்மோகன் சிங், அமிதாப் பச்சன், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், ஷாருக் கான், ஜாக்கி சான், சார்லி சாப்ளின் போன்ற பிரபலங்களின் தத்ரூபமான மெழுகு சிலை அருங்காட்சியத்தில் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2005இல், இந்த வேக்ஸ் மியூசியம் நிறுவப்பட்டது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் உற்சாக தரும் இடமாக இடம்பெற்றுள்ளது. அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்ற 3டி ஓவியங்கள் உங்களிடம் பேசுவது போன்று வரையப்பட்டுள்ளன.
அந்த ஓவியங்கள் பார்வையிடுபவர்களுக்கு அதிக ஈர்ப்பைக் கூட்டுகின்றன. கன்னியாகுமரிக்கு வருகை தரும்போது உங்கள் பயணத்தில் இந்த அற்புதமான இடத்திற்கு தவறாமல் செல்லவும். காலை நேரத்தை விட, மாலை நேரத்தில் அங்கு ஒளிரூட்டப்பட்டு இருக்கும் விளக்குகளின் ஊடே மெழுகு சிலைகளை விழிகளை அகல விரித்து பார்க்கும்போது, நேர்த்தி வடிவமைப்பை நாம் காண முடியும்.
அதே போல, விளக்கு ஒளியில் ஊடே செல்ஃபி எடுக்கும் போது, ஒரு வித பூரிப்பு உங்கள் குட்டீஸ்க்கு கிடைக்கும் என்பதை நிச்சயம் கூறலாம். அப்ப குட்டீஸ் ரெடியா...! பாடி பில்டர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் உடன் ஒரு செல்ஃபியை எடுத்துகிட்டு, உங்க பிரண்ட்ஸ் கிட்ட, டேய் மச்சான் நான் அர்னால்ட் அங்கிளை பார்த்து செல்ஃபி எடுத்து இருக்கேன் பாருடானு காமிச்சு அவன் வாயை பொழக்க வையுங்க இந்த கோடை விடுமுறைக்கு...!



Click it and Unblock the Notifications





