கார்த்திகை முதல் தேதி முதலே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுவும் இந்த வருடம் குறிப்பாக இதுவரை இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தர்ம சாஸ்தாவை தரிசிக்க கிட்டத்தட்ட 32 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அய்யனை தரிசிக்க காத்திருப்பது மட்டுமல்லாமல், உணவு குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் இன்றி பக்தர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் சபரிமலைக்கு செல்ல தென்னக ரயில்வே சென்னையிலிருந்து கோட்டயத்திற்கு சிறப்பு வந்தே பாரத் சேவையை இயக்கவுள்ளது!
தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் ஆன்லைன் புக்கிங் வழியாக 90,000 பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

அதிகப்படியான பக்தர்களுக்கு அனுமதி கொடுத்ததே காரணம்
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 70,000 முதல் 80,000 பக்தர்கள் வந்து சென்றால் மட்டுமே எந்தவித இடையூறுமின்றி அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய முடியும். ஆனால், ஆன்லைன் புக்கிங்கில் தினமும் 90,000 பக்தர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் முன்பதிவு இன்றி வரும் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வழங்கப்படுகிறது. ஸ்பாட் புக்கிங்கில் ஒரு நாளைக்கு 1,20,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்குகின்றனர். ஒரு நாளைக்கு 2 லட்ச பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய குவிந்தால் யார் தான் என்ன செய்ய முடியும்.
பார்க்கிங் வசதி போதுமானதாக இல்லை
கடந்த, 2019-ல் கேரளாவில் ஏற்பட்ட பெருமழை காரணமாக, பம்பை உருக்குலைந்ததால், அங்கு வாகனங்களை நிறுத்த, கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நிலக்கல்லில், 10,000 வாகனங்களை நிறுத்த வசதி உள்ளதாக தேவசம் போர்டு கூறினாலும், அந்த அளவுக்கு வாகனங்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், அங்கு தற்போது 6,000 வாகனங்களை மட்டுமே நிறுத்த முடிகிறது.

காட்டுக்குள் சிக்கி தவிக்கும் பக்தர்கள்
இதனால் வாகனங்கள் அதிக அளவில் வரும் போது, இலவங்கலுக்கு முன்பாகவே, நடுக்காட்டுக்குள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இப்படி நிறுத்தப்படுவதால், பக்தர்கள் பல மணி நேரம் தண்ணீரும், உணவும் கிடைக்காமல் வாகனங்களிலேயே பரிதவிக்கின்றனர்.
32 மணி நேரம் காத்திருப்புக்கு பின்னர் தரிசனம்
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, சபரிமலையில் நடப்பு மண்டல சீசனில் நான்கு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக 18 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் இப்போது பம்பையில் 17 மணி நேரம் காத்திருப்பு, சபரிமலைக்கு சென்ற பின்னர் 15 மணி நேரம் காத்திருப்பு என பக்தர்கள் 32 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், சபரிமலை சன்னிதானத்தில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 1,950 பேர் பணியில் உள்ளனர்.

பல்வேறு முயற்சிகளை செய்யும் தேவசம் போர்டு
சன்னிதானத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் வகையில், பம்பையில் இருந்து சரங்குத்தி வரை பக்தர்கள் கட்டம் கட்டமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு தேவசம்போர்டு சார்பில், பிஸ்கட் மற்றும் மூலிகை குடிநீர் வழங்கப்படுகிறது. சீசன் துவங்கிய பின் நேற்று காலை வரை, 15.82 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னையிலிருந்து கோட்டயத்திற்கு வந்தே பாரத் ரயில்
சபரிமலை சீசனில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை - கோட்டயம் இடையே வந்தே பாரத் சேவையை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 06151 டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் கோட்டயம் வந்தே சபரி வாராந்திர சிறப்பு ரயில் இங்கிருந்து டிசம்பர் 15, 17, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்குப் புறப்படும். இது மாலை 4.15 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.
மறுபுறம் ரயில் எண் 06152 கோட்டயம் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் வந்தே சபரி வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் 16,18,23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கேரளாவில் இருந்து மாலை 4.40 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு சென்னை சென்றடையும்.



Click it and Unblock the Notifications




