102 வருடங்களாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா, துபாய், பிரான்ஸ், இலங்கை என பல நாடுகளில் கொடிகட்டி பறந்து கோடி கணக்கான மக்களுக்கு பிடித்த சர்க்கஸ் நிகழ்ச்சியான 'தி கிரேட் பாம்பே சர்க்கஸ்' 7 வருடங்களுக்கு பிறகு கோயம்புத்தூரில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜூன் 24ஆம் தேதி மிக பிரமாண்டமாக துவங்கிய இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பலரும் வெகுவாக கண்டு களித்தனர். பல நாட்டை சேர்ந்த கலைஞர்களும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி நம்மை மகிழ்விக்கும் இந்த சர்க்கஸை நாம் பார்க்க வேண்டாமா? டிக்கெட் கட்டணங்கள், நேரம் மற்றும் தேதி குறித்த விவரங்கள் இதோ!

எல்லோருக்கும் பிடித்த 'தி கிரேட் பாம்பே சர்க்கஸ்'
என்ன தான் சமூக ஊடங்கங்களும், திரைப்படங்களும் நம்மை ஆட்கொண்டாலும் இன்டர்நெட் இல்லாத எளிதான வாழ்க்கைக்கு இருக்குமே மவுசே தனி தான். இன்னமும் சர்க்கஸ் மீதான ஒரு விருப்பம் எல்லோருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. நூறு வருடங்களுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட உலகின் மிகப்பெரிய சர்க்கஸ் நிறுவனமான 'தி கிரேட் பாம்பே சர்க்கஸ்' சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாகும்.
6 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் கால் பதிக்கும் பாம்பே சரக்கஸ்
கோவை மாநகரில் பலமுறை நிகழ்ச்சிகளை நடத்தி இங்கு மக்களின் ஆதரவை பெற்ற இந்நிறுவனம் கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு வ.உ.சி மைதானத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் தனது சாகச நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளது பாம்பே சர்க்கஸ். முதல் நாளே சர்க்கஸிற்கு மக்கள் கொடுத்த பேராதரவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
45 நாட்களுக்கு தொடர்ந்து சர்க்கஸ் நடைபெறும்
இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய பாம்பே சர்க்கஸ் நிறுவனத்தின் பார்ட்னர் சஞ்சீவ் கூறுகையில், ஜூன் 23 ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு சர்க்கஸ் நடக்கும். நாள்தோறும் மதியம் 1 மணி, 4 மணி மற்றும் மாலை 7 மணி என மூன்று காட்சிகள் இடம்பெறும். ஒவ்வொரு காட்சியும் 2 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். அவற்றில் 30க்கும் அதிகமான சாகச நிகழ்ச்சிகள் இடம்பெறும். இம்முறை 15க்கும் அதிகமான புதிய சாகசங்கள் நிகழ்வில் சேர்க்கப்பட்டுள்ளது.
மக்களை ஆச்சர்யப்படுத்தும் சாகச நிகழ்வுகள்
உலக சர்க்கஸ் போட்டிகளில் பங்கு பெற்று வெண்கல பதக்கம் பெற்ற எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் மனதை கொள்ளையடித்தனர். மணிப்பூரிலிருந்து எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வரக்கூடிய புகழ்பெற்ற கலைஞர்களும் இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் பலவிதமான சாகசங்களை செய்து காண்போரை ஆச்சரியத்துக்குள்ளாக்கினர். அவர்களது சாகசங்கள், கிளப் ஜங்ளிக், ரோலர் ஆக்ட், ஜிம்னாஸ்டிக், ஸ்பியர் பேலன்ஸ் என பல்வேறு சாகசங்கள் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் ஈர்த்தது.
கண்ணை கவரும் சாகசங்கள்
இதில், கோமாளிகள், நடனக் கலைஞர்கள், எத்தியோப்பியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சாகச வீரர்கள் கலந்து கொண்டு 30-க்கும் அதிகமான சாகச நிகழ்ச்சிகளை செய்து அசத்தினர். நாய்கள் மற்றும் பறவைகளைக் கொண்டு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மரணக்கிணறு என்றழைக்கப்படும் கூண்டுக்குள் பைக் ஓட்டும் சாகச நிகழ்ச்சியும் இதில் இடம்பெற்றிருந்தது. குட்டிகுட்டி கோமாளிகள், நெட்டைக்கால் மனிதர், பளு தூக்கும் வீரர், சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞர், பறந்தபடியே நடனமாடும் ஜோடி என ஒவ்வொரு சர்க்கஸ் கலைஞரும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தனர்.
டிக்கெட் கட்டணங்கள்
தொடர்ந்து இரண்டரை மணி நேரம் சர்க்கஸ் நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டுகளிக்க ரூ.100 முதல் ரூ.400 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 400ரூபாய் டிக்கெட்டுகளுக்காக தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மற்ற டிக்கெட்டுகளை நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே வ.உ.சி மைதானத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.400 டிக்கெட்டை முன்பதிவு செய்ய 8893606308, 8778838082, 8714285256 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சிக்கு உங்கள் வீட்டு குட்டீஸ் கள் மற்றும் பெரியவர்களுடன் சென்று கண்டு களியுங்கள். நிச்சயம் என்ஜாய் பண்ணுவீர்கள்.



Click it and Unblock the Notifications




