சென்னை மாநகரம் வரலாறு, இயற்கை அழகு, கலாச்சாரம் மற்றும் செழுமையான பாரம்பரியத்தை வழங்கும் தாயகமாக உள்ளது. கடற்கரைகள், கோவில்கள், சந்தைகள், ஷாப்பிங் மால்கள், கேளிக்கை பூங்காக்கள் என சென்னையில் பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இல்லை. இன்றுவரை, கவனமாக பாதுகாக்கப்பட்ட வரலாற்று தளங்களும் சென்னையில் நிறைய உள்ளன.
சென்னையின் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒவ்வொரு சந்திலும் இந்தியாவின் சரித்திர வரலாற்றின் நினைவூட்டல் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம்! சென்னையில் காலத்தைக் கடந்த கட்டிடங்களும், கோட்டைகளும், பாலங்களும், நூலகங்களும் உள்ளன.
சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், நகரத்தின் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாசாரத்திற்குச் சான்றாக விளங்குகின்றன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்!

அரசு அருங்காட்சியகம்
கலை ஆர்வலர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் ஈர்க்கும் இந்த அருங்காட்சியகம் சென்னை பாந்தியன் சாலையில் 1851 இல் நிறுவப்பட்டது. இது கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமாகும்.
இந்தோ-சார்செனிக் பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் தேசிய கலைக்கூடம், குழந்தைகள் அருங்காட்சியகம், சமகால கலைக்கூடம், வெண்கலக் காட்சியகம், முன் கட்டிடம் மற்றும் பிரதான கட்டிடம் என ஆறு தனித்தனி கட்டிடங்களைக் கொண்டுள்ளது.
வெண்கல கலைப்பொருட்கள், ராஜா ரவி வர்மாவின் அழகிய ஓவியங்கள், பிரிட்டிஷ் நவீன கலை மற்றும் வரலாற்று சிற்பங்கள் மற்றும் பலவற்றின் வளமான சேகரிப்புகளைக் கொண்டுள்ளது. காலை மணி முதல் மாலை 5 மணி வரைஅருங்காட்சியகம் திறந்து இருக்கிறது. மேலும் பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.15 மற்றும் குழந்தைகளுக்கு ரூ. 1௦ ஆக வசூலிக்கப்படுகிறது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை
1640 இல் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையாகும். வர்த்தக நோக்கத்திற்காக கட்டப்பட்ட இந்த கோட்டை விரைவில் ஒரு முழுமையான நகரமாக மாற வித்திட்டது.
காலப்போக்கில், ஆங்கிலேயர்கள் கோட்டைக்குள் செயின்ட் மேரிஸ் தேவாலயம், வெல்லஸ்லி ஹவுஸ், கோட்டை அருங்காட்சியகம் மற்றும் பல தனித்துவமான கட்டமைப்புகளை உருவாக்கினர்.
மேலும் கோட்டைக்குள் கார்ன்வாலிஸ் பிரபுவின் சிலை ஒன்று உள்ளது. அது பிரிட்டனில் இருந்து அனுப்பப்பட்டு அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இன்று, இந்திய தொல்லியல் துறை இந்த பாரம்பரிய சொத்தை கவனித்துக்கொள்கிறது மேலும் இது இந்திய இராணுவ தளமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
சென்னைராஜாஜி சாலையில் அமைந்துள்ள இந்த கோட்டையை நீங்கள் எல்லா நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் பார்வையிடலாம். நுழைவுக் கட்டணமாக ரூ. 5 வசூலிக்கப்படுகிறது.

செயின்ட் தாமஸ் மவுண்ட் சர்ச்
செயின்ட் தாமஸ் மவுண்ட் சர்ச் என்பது சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் மவுண்ட் என்றழைக்கப்படும் குன்றின் மேல் அமைந்துள்ள ஒரு ஆலயமாகும், இது பரங்கிமலை என்றும் அழைக்கப்படுகிறது.
1523 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயம் "லேடி ஆப் எக்ஸ்பெக்டேஷன்" என்றழைக்கப்படும் அன்னை மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.160 படிகள் வழியாக மேலேறி மலை உச்சியை அடைந்து உள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தை நீங்கள் ஆராயலாம்.

விவேகானந்தர் இல்லம்
சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த ஐஸ் ஹவுஸ் என்றழைக்கப்படும் விவேகானந்தர் இல்லம். நீலம் பாஷா தர்காபுரம் மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த பாரம்பரிய இல்லத்தில் சுவாமி விவேகானந்தர் ஆறு வாரங்கள் தங்கியிருந்தார்.
சுவாமி விவேகானந்தர் இங்கு வந்து சென்றமையால் தென்னிந்தியாவில் ராமகிருஷ்ண இயக்கத்தில் இந்த இடம் முக்கிய பங்கு வகித்தது. ஆவணங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் இன்றுவரை வீட்டின் உள்ளே பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கன்னிமாரா பொது நூலகம்
பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1890 இல் கட்டப்பட்ட இந்த கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான நூலகங்களில் ஒன்றாகும். இது சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அரu அருங்காட்சியகத்தின் விரிவாக்கம் ஆகும்.
இந்தியாவின் நான்கு தேசிய டெபாசிட்டரி நூலகங்களில் ஒன்றாக இருப்பதுடன், கன்னிமாரா பொது நூலகம் ஐக்கிய நாடுகள் சபையின் டெபாசிட்டரியாகவும் உள்ளது.
இந்த நூலகத்தில் பல தசாப்தங்கள் பழமையான கால இதழ்கள், ஆவணப்படங்களைப் பார்ப்பதற்கான வீடியோ அறை, பிரெய்லி நூலகம் மற்றும் ஐஏஎஸ் ஆய்வு மையம் உள்ளிட்ட அரிய புத்தகங்கள் மற்றும் பழங்கால நூல்கள் மற்றும் பதிவுகளின் பெரிய தொகுப்பை நீங்கள் காணலாம்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள இந்த கபாலீஸ்வரர் கோயில் 7 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று கூறப்படுகிறது. இந்த இடம் அதன் வரலாறு, கட்டிடக்கலை பாணிகள் மற்றும் ஆன்மீகத்திற்காக அறியப்படுகிறது.
செழுமையான தமிழ் மத கலாச்சாரத்தை எதிரொலிக்கும் இந்த கோவிலில் சிவபெருமானும் கற்பகாம்பாளும் பிரதான தெய்வங்களாகும். பல நூற்றாண்டு பழமையான இந்தக் கோவிலுக்கு சென்று வந்தால் கல்வி, செல்வம், திருமணம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியம் என வேண்டும் அனைத்தும் வழங்கி ஈசன் அருள்பாலிக்கிறார்.

சாந்தோம் தேவாலயம்
16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய ஆய்வாளர்களால் கட்டப்பட்ட இந்த தேவாலயம், 1956 இல், போப் பயஸ் XII அவர்களால் கதீட்ரலாகக் கௌரவிக்கப்பட்டது.
இது கிறிஸ்துவின் அசல் சீடரின் கல்லறைகளைக் கொண்ட இந்த உலகின் மூன்று அதிசயங்களில் ஒன்றாகும். மற்ற இரண்டு ஸ்பெயினில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா மற்றும் வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா ஆகும்.
இந்த பசிலிக்காவின் உயரமான வெள்ளை உருவத்தின் கீழ் கி.பி 52 இல் கிறிஸ்தவம் பற்றி பிரசங்கிக்க இந்தியா வந்த செயிண்ட் தாமஸின் உடல் உள்ளது.சாந்தோம் தேவாலயம் பல கலாச்சாரம் மற்றும் மத நல்லிணக்கத்தின் மிகப்பெரிய அடையாளமாக உள்ளது. இது நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.
மேலும் அடையாரின் தியோசோபிகல் சொசைட்டி, ஆயிரம் விளக்கு மசூதி, சென்னை உயர் நீதிமன்றம், நேப்பியர் பாலம், ஸ்ரீ ராமகிருஷ்ண மத் ஆகியவையும் இந்த வரலாற்று சிறப்புமிக்க இடங்களின் பட்டியலில் அடங்கும்!



Click it and Unblock the Notifications





