கோடை விடுமுறை நெருங்கி வருகிறது; எங்கே சுற்றுலா போகலாம் என, நினைத்து கொண்டிருக்கும் உங்களுக்கு நாங்க ஒரு 'அட்வைஸ்' தருகிறோம்... ஹலோ அட்வைஸ் எங்களுக்கு பிடிக்காதுனு சொல்ல வர்றீங்க அப்படி தானே...! சரி விடுங்க ஒரு நல்ல தகவல் சொல்கிறோம்.
கோடை விடுமுறை தொடங்கியதும், எல்லோரும் போகும்; பிரபல சுற்றுலா தலங்களுக்கு தான் கூட்டத்தோடு கூட்டமாக போய் பார்ப்போம் அல்லவா...! ஆனா, இந்த முறை அப்படி செய்யாதீங்க. ஒரு வேளை கொடைக்கானல் போக திட்டமிட்டிருந்தா? இந்த இடத்தை உங்கள் பயண பட்டியலில் சேர்த்து, டிரெக்கிங், அருவியில் குளியல், அழகான வியூ பாயிண்ட் என, அனைத்து விதமான அழகான அனுபவத்தை என்ஜாய் பண்ணுங்க உங்க குட்டீஸ்களோட...!

கூக்கால் நீர்வீழ்ச்சி
ஏரிகள், காடுகள் , பள்ளத்தாக்குகள், பைன் வனத்தை, தன்னுள் புதைத்து வைத்திருந்து 'மலைகளின் இளவரசி' என பெயர் பெற்ற பிரபலமான மலைவாசஸ்தலம் கொடைக்கானல். இங்கிருந்து 35 கி.மீ., தொலைவில் உள்ள கூக்கால் கிராமத்தில் அமைந்திருக்கும் பகுதி தான் தூத்தூர் நீர்வீழ்ச்சி.
இந்த நீர்வீழ்ச்சி கூக்கால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. உள்ளூர் மக்களை தவிர்த்து, மற்ற சுற்றுலா பயணிகளுக்கு சொல்லப்படாத, அறியப்படாத இடமாக இருக்கிறது. ஆனால், இன்று அதன் ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்.
நிசப்தம் நிறைந்த பகுதி
பழனி மலைகள் சூழந்திருக்கும் கூக்கால், கொடைக்கானலில் இருந்து குதிரையால், கூக்கால் காப்பு காடு(ரிசர்வ் பாரஸ்ட்) செல்லும் வழியில், 30 முதல் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கொடைக்கானல் பகுதி அளவுக்கு குளிர் இல்லை என்றாலும், மிதமான வானிலை இங்கு காணப்படும்.
கொடைக்கானலில் இருந்து கூக்கால் கிராமத்திற்கு செல்லும் பயணம் மிகவும் அமைதியானது. சாலையின் இருபுறமும் அடர்ந்த பைன் மற்றும் யூகலிப்டஸ் மரங்களால் சூழப்பட்ட இந்த நிலப்பரப்பின் ஊடே அதிகாலையில் வாகனம் ஓட்டுவதை வார்த்தைகளால் சொல்லி விவரிக்க முடியாது.
குறிப்பிட்டு சொல்ல போனால், அதிகாலையில் வாகனம் ஓட்டுவதை விரும்புவோருக்கு சொர்க்கத்தை வாரி வழங்கும் வழித்தடம் என்றே சொல்லலாம். சுமார் 1.30 மணி நேர பயணத்தில் நீங்கள் கூக்கால் கிராமத்தை அடைந்து விடலாம்.
கிராமத்திற்குள் நுழையும்போது, கூக்கால் ஏரி என்று அழைக்கப்படும் அழகிய ஏரி உங்களை வரவேற்கும். இங்கிருந்து ஒரு 'ட்ரெக்கிங்' பயணம் செய்தால் அந்த அருவியை அடைய முடியும்.

எப்படி செல்வது...
'ட்ரெக்'கிங் தொடக்கப் புள்ளி முதல் வன நுழைவு வரை
மலையேற்ற தூரம் - 2 கி.மீ.,
மலையேற்ற காலம் - 1 மணி நேரம்
மலையேற்றம்
கூக்கால் ஏரியிலிருந்து 1 கி.மீ. கூக்கால் ஏரியை அடையும் போது, அங்கே சிறிய புட் ட்ரக்களை பார்க்க முடியும். நீங்கள் அருவியை அடைய வழிகாட்டிகள் வேண்டும் என்று நினைத்தால், இங்கு உள்ள உள்ளூர் மக்களின் உதவியை பெறலாம் அல்லது தனிப்பட்ட வழிகாட்டிகளையும் கோரலாம். அவர்கள் உங்களை மலைப்பாதையில் அழைத்து செல்வார்கள்.
மலையில் இருந்து வளைந்து வளைந்து செல்லும் பாதை வழியாக சுமார் 500 மீட்டர் மலையில் கீழ் இறங்கினால், 'போல்டர் பாயின்ட்' என்று அழைக்கப்படும் காட்சியை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள்.
இங்கிருந்து பார்க்கும் காட்சியானது அருவியின் தூரத்து காட்சி, பசுமையான காடுகள், இடையிடையே கிராமங்களின் காட்சி பார்ப்பதற்கு, அழகு என்றால் என்ன விழியின் ஊடே சென்று விருந்தளிக்கும் என்பதை மறக்காதீங்க.
அங்கிருந்து செங்குத்தாக செல்லும் பாதையில் சுமார் 1.5 கி.மீ., தூரம் இந்தப் பாதை வழியாகப் பயணித்து வன நுழைவாயிலை அடையலாம்.
வன நுழைவு முதல் கூக்கால் நீர்வீழ்ச்சி வரை
மலையேற்ற தூரம்: 1 கி மீ
மலையேற்ற காலம்: 30 நிமிடங்கள்
இந்த மலையேற்றத்தின் இறுதிப் பயணம் என்றே கூறலாம். அடர்ந்த காடு, புதர்கள் வழியாக செல்லும் ஒத்தையடி பாதையிலே உங்களை அழைத்து செல்லும் இந்த பாதை யின் சிறப்பு அம்சம் என்னவென்றால், நீர்வீழ்ச்சி கண்ணுக்குத் தெரியவில்லை என்றாலும், பாதை முழுதும் நீரின் ஓட்டத்தையும், ஓட்டத்தின் இரைச்சலையும் நீங்கள் கேட்கலாம்.
அதுமட்டுமின்றி, பயண முடிவில் தென்படும் அந்த குளத்தின் அருகே அருவி அமைந்துள்ளது. அங்கு 300 அடி உயர பாறைகளில் இருந்து விழும் குளிர்ந்த நீர், உங்கள் உடலில் மீது தெறிக்கும் போது கிடைக்கும் ஒரு வித சிலிர்ப்பு, பயணத்தையும், அதற்காக நடந்ததில் வந்த வலியையும் மறக்க செய்துவிடும் என்பதில் ஐயம் இல்லை.
உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால், யானைகள் குளிக்கும் அழகிய காட்சிகளையும், சிறிய வன விலங்குகளின் அழகிய உலாவையும் காணலாம்.



Click it and Unblock the Notifications





