கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் நிறைந்த நாடாக பெருமிதமாக நிற்கும் இந்தியா உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இந்தியாவின் சுற்றுலாப் பொருளாதாரத்தில் ஆன்மீக சுற்றுலா எப்போதும் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. இந்தியா முழுவதும் உள்நாட்டுப் பயணங்கள் அதிகரித்து வருவதால், கடந்த சில ஆண்டுகளாக வளமான கலாச்சார இடங்களை ஆராய்வதை மக்கள் எதிர்நோக்குகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளால் 2022 ஆம் ஆண்டில் அதிகம் பார்வையிடப்பட்ட கோயில்களைப் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த லிஸ்ட் இதோ!
வாரணாசி
காசி மற்றும் பனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி, உலகில் மக்கள் வசிக்கும் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். உத்தரபிரதேசத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள வாரணாசி இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் மத ஸ்தலங்களில் ஒன்றாக இருப்பதோடு 2022 ஆம் ஆண்டில் அதிகம் பார்வையிடப்பட்ட ஆன்மீக ஸ்தலங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆண்டின் எல்லா நாட்களிலும் காசி விஸ்வனாதரை தரிசித்து புண்ணியம் பெற மக்கள் வருகை தருகிறார்கள்.
இது இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரமாக இருப்பதோடு இந்து மதத்தின் ஏழு புனித நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த தெய்வீக நகரம் பௌத்தர்களுக்கான முக்கியமான இடமாகவும் உள்ளது. உலகின் பலதரப்பட்ட இடங்களிலிருந்தும் மக்கள் வாரணாசிக்கு எப்பொழுதும் போல இந்த ஆண்டும் வருகை தந்துள்ளனர்.
திருப்பதி
ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி, உலகப்புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலமாகும். ஆண்டின் எல்லா நாட்களிலும் திருமலையான் வெங்கடேச பெருமானை காண மக்கள் கூட்டம் வெள்ளமென திருப்பதியை நோக்கி படையெடுக்கும். திருப்பதி இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும், மேலும் இது ஏராளமான பண்டைய வேதங்கள் மற்றும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீ விஷ்ணு பாற்கடலில் பள்ளிக் கொண்டிருந்தாலும் கலியுகவரதனாக மக்களை காத்தருள திருமலை திருப்பதியில் குடி கொண்டுள்ளதாக புராணங்கள் கூறுகிறது. இந்த லிஸ்டில் திருமலை திருப்பதி 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
பூரி
ஒரிசாவில் அமைந்துள்ள பூரி ஜெகநாதர் கோயில் கட்டாயம் இந்துக்கள் பார்க்க வேண்டிய இடமாகும். இந்தியாவின் சார் தாம் சுற்றில் இடம்பெற்றுள்ள பூரி ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் யாத்ரீகர்களை வரவேற்கிறது. சிவபெருமானின் இளைப்பாறும் இடமாக அறியப்படும், பூரியின் கம்பீரமான வரலாறு மற்றும் பாரம்பரியம் 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது . பூரிக்கு அருகில் சிலிகா ஏரி, பூரி கடற்கரை, குண்டிச்சா கர் மற்றும் கோனார்க்கின் மிகவும் பிரபலமான சூரியன் கோவில் போன்ற பல இடங்கள் உள்ளன. இந்த பட்டியலில் பூரி 3-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
அமிர்தசரஸ்
பஞ்சாபில் உள்ள மிகப்பெரிய நகர்ப்புறமான அமிர்தசரஸ் இந்தியாவின் மிக ஆழமான ஆன்மீக நகரங்களில் ஒன்றாகும். பல்லாயிரக்கணக்கான சீக்கியர்களும் கலாச்சார சுற்றுலாப் பயணிகளும் பொற்கோவிலைக் காண அமிர்தசரஸுக்கு வருகை தருவது வழக்கம். பஞ்சாபின் வீரத் தன்மையை சித்தரிக்கும் அமிர்தசரஸ் பொற்கோவில் அற்புதமான கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும்.
பொற்கோயிலைத் தவிர, அமிர்தசரஸ் அதன் உதடுகளைக் கவரும் தெரு உணவுக்காக அறியப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல், அருகில் உள்ள ஜாலியன் வாலாபாக் நினைவகம், தேசபற்றை ஊற்றெடுக்க வைக்கும் வாகா பார்டர் ஆகியவையும் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
ஹரித்வார்
உத்தரகாண்டில் அமைந்துள்ள ஹரித்வாரானது இந்தியாவின் ஏழு புனித நகரங்களில் ஒன்றாகும். கோவில்கள், ஆசிரமங்கள் மற்றும் நகரம் முழுவதும் குறுகிய பாதைகள் நிறைந்த ஹரித்வார் ஒரு புகழ்பெற்ற இந்து கோவில் நகரமாகும், அங்கு மில்லியன் கணக்கான பக்தர்கள் புனித கங்கையில் நீராட வருகிறார்கள். இது உத்தரகாண்டின் சார் தாம் நுழைவாயிலாகவும் உள்ளது மேலும் இது ரிஷிகேஷ் மற்றும் தேவ்பிரயாக் ஆகிய சில சுற்றுலா நகரங்களுக்கு அடிப்படை இடமாகவும் செயல்படுகிறது. மற்ற இடங்களைப் போல ஹரித்வாருக்கு வருடத்தின் எல்லா நாட்களிலும் செல்ல இயலாது. மே முதல் அக்டோபர் வரையிலான காலமே யாத்திரை செல்வதற்கான சீசன் ஆகும். இந்த குறுகிய காலத்திலேயே இது 5 ஆம் இடத்தில் உள்ளது.
சீரடி
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் நாசிக்கிலிருந்து 122 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபாவின் இல்லமாகும். சாய்பாபா 1858 இல் ஷீரடிக்கு வந்து 1918 இல் முக்தி அடையும் வரை தனது வாழ்நாளின் 60 ஆண்டுகளை இங்கு கழித்தார் என்று நம்பப்படுகிறது. சாய்பாபா 'கடவுளின் குழந்தை' என்று பிரபலமாக அறியப்படுகிறார். தன்னை நம்பி வந்த பக்தர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வேண்டுவன எல்லாம் அவர் கொடுத்து மகிழ்கிறார். அவரது சன்னதியைத் தவிர, வளாகத்தில் சாவடி, சமாதி மந்திர், துவாரகாமாயி போன்ற பல சிறிய கோயில்கள் உள்ளன. இந்த பட்டியலில் 6 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
ரிஷிகேஷ்
கங்கை மற்றும் சந்திரபாகா நதிகள் சங்கமிக்கும் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ரிஷிகேஷ் டேராடூன் ஒரு புனித யாத்திரை நகரம் மற்றும் இந்துக்களின் புனிதமான இடங்களில் ஒன்றாகும். கர்வால் இமயமலையின் நுழைவாயில் "உலகின் யோகா தலைநகரம்" என அறியப்படுகிறது. இங்கு அமைந்திருக்கும் பீட்டில்ஸ் ஆசிரமம் உலகப்புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷிகேஷ் அமைதியான ஆன்மீக மையமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நீர் ராஃப்டிங், பங்கி ஜம்பிங், மவுண்டன் பைக்கிங், ஸ்கை டைவிங் போன்ற சாகச நடவடிக்கைகளின் தலைநகரமாகவும் உள்ளது. ஆன்மீகத்தோடு சாகசத்தையும் அனுபவிக்க இங்கு அதிக அளவு மக்கள் வருகை தருகிறார்கள்.
மதுரா
டெல்லியில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மதுரா, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த இடம் என்று நம்பப்படுகிறது. மதுரா பல்வேறு வயதுடைய கோயில்களைக் கொண்ட ஒரு சிறிய நகரம் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான யாத்ரீகர்களை ஈர்க்கிறது. கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை சுற்றுலாப் பயணிகளுக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதைக் காண உலகெங்கிலும் இருந்து மக்கள் மதுராவிற்கு வருகை தருகிறார்கள். பழங்கால கட்டிடக்கலை, அழிந்து வரும் பழைய வீடுகள் மற்றும் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக இருக்கும் உள்ளூர் மக்களின் அருமையான சமூகத்தன்மை ஆகியவற்றின் மூலம் மதுரா இந்த லிஸ்டில் 8 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
மஹாபலேஷ்வர்
மகாராஷ்டிராவின் மஹாபலேஷ்வர் அதன் ஆன்மீக சுற்றுலாவிற்கு புகழ் பெற்றது. இக்கோயில்கள் புனிதத்தன்மையின் காரணமாக வெகுதொலைவில் இருந்து ஏராளமான யாத்ரீகர்களை ஈர்க்கின்றன. பழங்காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள், கடந்த கால நினைவுச் சின்னங்களாக இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. புனித ஸ்தலங்கள் மட்டுமின்றி, வசீகரிக்கும் நிலப்பரப்புக்கு மத்தியில் அமைந்துள்ள கோயில்கள் அவற்றின் அற்புதமான கட்டிடக்கலைக்கும் பெயர் பெற்றவை. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம்.
மதுரை
தமிழ்நாட்டில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே ஆன்மீக ஸ்தலம் மதுரை மட்டும் தான். உலகப்புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயிலைக் காண உலகெங்கிலும் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். தனித்துவமான சிற்பங்கள், அழகிய கட்டிடக்கலை, பழமையான கட்டுமானம், ஆயிரங்கால் மண்டபம், பொற்தாமரை ஆகியவற்றைக் கண்டு மக்கள் வியக்கின்றனர். மீனாட்சியம்மன் கோயில் மட்டுமின்றி, அருகிலுள்ள அழகர் கோவில், திருப்பரங்குன்றம், கூடல் அழகர் கோவில் ஆகியவற்றைக் காணவும் மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.
மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டன, தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில் சுற்றுலாவை கணிசமாக மீட்டெடுக்க பல திட்டங்களை அறிமுகப்படுத்தின. உதாரணமாக, உத்தரபிரதேச அரசு ராமாயணம் மற்றும் புத்த சர்க்யூட்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தன. இந்திய ரயில்வே யாத்ரீகர்களுக்காக ஸ்வதேஷ் தர்ஷன் மற்றும் ராமாயண எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதிலும் வெற்றி கண்டுள்ளதற்கான சான்று தான் மேலே உள்ள டாப் 10 லிஸ்ட்!